சாம்சங் நிறுவனத்தின் பசுமை முயற்சி - மீன் வலைகள், தண்ணீர் பாட்டில்களில் ஸ்மார்ட்ஃபோன்

பட மூலாதாரம், SAMSUNG
- எழுதியவர், ஜேன் வேக்ஃபீல்ட்
- பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
மேம்படுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களில் எழுத உதவும் டிஜிட்டல் பேனா போன்ற வசதிகளோடு, புதிய கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோன் வகைகளை சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதோடு, மறுசுழற்சி செய்யப்பட்ட மீன்பிடி வலைகள், பயன்படுத்தப்பட்ட தண்ணீர் புட்டிகள் போன்ற மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு குறித்தும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் "பூமிக்கான கேலக்ஸி (Galaxy for the Planet)" என்ற ஐந்தாண்டு திட்டத்தில், பேக்கிங் செய்வதில் உள்ள நெகிழியை ஒழிக்கவும் நிலத்தில் கழிவுகளாகச் சேர்ந்துகொண்டே போகக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அதன் இந்த பசுமை முன்னெடுப்பை வல்லுநர்கள் வரவேற்கின்றனர்.
நைலான் மீன்பிடி வலைகள், பாலிமைட் பிசின் துகள்களாக மாற்றப்படுகின்றன. அவை, ஒலி மற்றும் கைபேசியின் பவர் ஆன்-ஆஃப் பொத்தான்களை வைக்கும் இடத்தில், அவற்றுக்கான அடைப்புகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்திய பிறகு வீசப்பட்ட தண்ணீர் புட்டிகள் மற்றும் சிடி வைக்கும் பைகள் போன்றவை மற்ற பகுதிகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
ஃபார்ரெஸ்டர் அமைப்பின் (Forrester) ஆய்வாளர் தாமஸ் ஹஸ்ஸன், சாம்சங் நிறுவனத்தின் பசுமை முயற்சியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன என்கிறார்.
"இன்று, பெரும்பாலான நுகர்வோருக்கு தங்கள் ஸ்மார்ட்ஃபோன் வன்பொருட்களைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்வது பூமிக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவதில்லை. அவர்கள் அதை உணரும்போது, முன்னணி ஸ்மார்ட்ஃபோன் ப்ராண்டுகளை வேறுபடுத்துவதற்கான முக்கியக் கூறாக வளங்குன்றா நிலைத்தன்மை மாறும்."
ஆராய்ச்சி நிறுவனமான சிசிஸ் இன்சைட்டின் தலைமை ஆய்வாளர் பென் வூட், சாம்சங் தன்னுடைய தயாரிப்புகளின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைப் பற்றிப் பேசுவதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது என்றார். அதோடு அவர், "இருப்பினும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு பகுதி மட்டுமே. கைபேசி உற்பத்தியாளர்கள் சுற்றுச்சூழலுக்கு செய்யக்கூடிய மிக முக்கியமான நன்மை, நீண்டகாலத்திற்கு நீடித்திருக்கக்கூடிய சாதனங்களை உற்பத்தி செய்வதுதான்," என்றும் கூறினார்.
சிசிஎஸ் இன்சைட்டின் ஆய்வு, தற்போதைய கைபேசி பழுதடைந்து அல்லது சரியாக வேலை செய்யாமல் இருப்பதன் அடிப்படையில் மக்களிடையே அவர்களின் கைபேசிகளை புதியவற்றுக்கு மேம்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்துவது, புதிய சாதனங்களை வாங்குமாறு உந்துவது கடினமாகி வருவதாகக் கூறுகிறது.
ஃபார்ரெஸ்டரின் கூற்றுப்படி, சாம்சங் இன்னும் பெரும்பாலான சந்தைகளில் ஆப்பிள் நிறுவனத்தைவிடப் பின்தங்கியுள்ளது.
- பிரிட்டனில் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்கும் பெரியவர்களில் 40% பேர் ஐஃபோன் வைத்துள்ளார்கள். ஆனால், 33% பேர் சாம்சங் வைத்துள்ளார்கள்.
- அமெரிக்காவில் 51% பேர் ஐஃபோன்கள் மற்றும் 29% பேர் சாம்சங் பயன்படுத்துகின்றனர்.
- பிரான்சில் 22% பேர் ஆப்பிள் சாதனங்களையும் 41% பேர் சாம்சங் சாதனங்களையும் பயன்படுத்துகின்றனர்.
- அதுவே ஆஸ்திரேலியாவில் 43% பேர் ஐஃபோன், 38% பேர் சாம்சங்.
சாம்சங் நிறுவனத்திற்கு, இந்த வெளியீடு ஒரு வாய்ப்பை வங்குவதாக ஹஸ்ஸன் கூறுகிறார்.

பட மூலாதாரம், SAMSUNG
" ஹுவாவே நிறுவனத்திற்கு உள்ள சிக்கல்கள், ஷாவ்மியின் நிறுவனதுக்கு ஐரோப்பாவில் நற்பெயர் இல்லாதது மற்றும் ஆப்பிள் அதன் ஐஃபோன் 14-ஐ 2022-ன் இறுதிக்குள் வெளியிடாது என்பதாலும், உயர்நிலை சந்தையில் தலைமைத்துவத்தை நிலைநிறுத்த சாம்சங் நிறுவனத்திற்கு சில மாதங்கள் உள்ளன."
அதன் புதிய வகைகளில் சாம்சங் கேலக்ஸி எஸ்2, சாம்சங் கேலக்ஸி எஸ்22+ மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகியவை அடங்குகின்றன. இவற்றின் விலை இந்திய மதிப்பில் 57,831.88 ரூபாய் முதல் 112730.80 ரூபாய் வரை இருக்கும்.
சாம்சங் நிறுவனம் தான் முதலில் கூடுதல் உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சாரை உருவாக்கியது. ஆனால், முதலில் சீன நிறுவனமான ஷாவ்மி 2019-ல் அதன் எம்.ஐ சிசி9 ப்ரோ ப்ரீமியம் கைபேசியில் அந்த அம்சத்தை வெளியிட்டது.

பட மூலாதாரம், SAMSUNG
சாம்சங் அதன் எஸ்22 அல்ட்ராவோடு எஸ்-பென் என்ற ஸ்மார்ட்ஃபோன் பேனாவையும் சேர்த்து வருகிறது. இந்த பேனா முன்னர் அதன் நோட் சாதனங்கள் மற்றும் மடக்கக்கூடிய கைபேசியான கேலக்ஸி ஃபோல்ட் 3-க்கு மட்டுமே கிடைத்தது.
"சாம்சங் நிறுவனத்தின் தொடர்ச்சியான பார்வையாளர்கள் என்பதை நிரூபித்திருக்கும் நோட் சாதன ஆர்வலர்களால் கேலக்சி எஸ்22 அல்ட்ரா மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும். ஆனால், பாரம்பர்ய கேலக்ஸி எஸ் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பேனா தேவை எதற்கு என்ற குழப்பமும் ஏற்படும்," என்று சிசிஸ் இன்சைட்டின் தலைமை ஆய்வாலர் பென் வூட் கூறினார்.
இந்த நிகழ்வில், சாம்சங் புதிய டேப்லெட் வரிசையையும் வெளியிட்டது. அதன் கேலக்ஸி டேப் எஸ்8+ உயர் தெளிவுத் திறனுடைய திரைகள், விருப்பத் தேர்வு 5ஜி மற்றும் எஸ்-பேனாக்கள்.
இந்த நிகழ்வில், சாம்சங் புதிய டேப்லெட் வரிசையையும் வெளியிட்டது. அதன் Galaxy Tab S8 மற்றும் S8+ ஆகியவற்றில் உயர் தெளிவுத்திறன் கொண்ட திரைகள், விருப்பத்தேர்வு 5G மற்றும் S-பென்கள் உள்ளன.
இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் மார்ச் 11 அன்று பொது விற்பனைக்கு வருகின்றன.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













