ஹிட்லரின் 101 வயது நாஜி படை காவலர் மீது விசாரணை - 3,518 கொலைக்கு உடந்தை

ஹிட்லர் bbc

பட மூலாதாரம், keystone

படக்குறிப்பு, ஹிட்லரின் நாஜி ஆட்சிக் காலத்தில் யூதர்கள் மற்றும் எதிரிகளை கொல்வதற்காக வதை முகாம்கள் நடத்தப்பட்டன.

இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர். சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் பணியாற்றியுள்ளார்.

சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த கைதிகளை சுட்டுக் கொல்லவும் பிறரை சைக்லான் - பி (Zyklon B) நச்சுக் காற்றை செலுத்திக் கொல்லவும் ஜோசஃப் எஸ் எனும் அந்த நபர் உடந்தையாக இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாஜி கால குற்றத்துக்காக விசாரணையை எதிர்கொள்ளும் மிகவும் வயதான நபர் இவராவார்.

நாஜி கால குற்றவாளிகள் நீதி விசாரணையை எதிர்கொள்வதற்கான காலமும் கடந்து வருகிறது.

சமீப ஆண்டுகளில்தான் நாஜி ஆட்சியின் கடைநிலையில் இருந்த ஊழியர்களும் நீதி விசாரணைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.

10 ஆண்டுகளுக்கு முன் ஜான் டெம்ஜன்ஜாக் எனும் வதை முகாம் காவலர் மீது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டது கடைநிலையில் இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் செய்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக விசாரணைக்கு உள்படுத்தப்படுவதற்கு முன்னுதாரணமாக இருந்தது.

அதுவரை குற்றத்துக்கு உடந்தையாக இருந்தவர்கள் மட்டுமல்லாது, நேரடியாக கொலையில் ஈடுபட்டவர்களே தண்டிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது.

இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து வைத்திருந்தனர்.

தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக தற்போது குற்றம்சாட்டப்படுபவரின் முழு வெளியிடப்படாமல் ஜோசஃப் எஸ் என்று மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இவர் ஒரு பூட்டு செய்யும் தொழிலாளி என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இவர் இன்னும் இந்த விசாரணை குறித்து பொது வெளியில் பேசவில்லை.

சாக்சென்ஹாசன் வதை முகாமில் இவர் 1942இல் காவலராகப் பணியில் சேர்ந்தபோது இவருக்கு வயது 21. இப்போது இவருக்கு வயது 101-ஐ தொட்டுவிட்டது.

சாக்சென்ஹாசன் வதை முகாமில் 1943இல் நச்சு வாயு அறை நிறுவப்பட்டது. அணிவகுப்பு நடத்த போதிய இடமில்லை என்பதால் இது பின்னர் மூடப்பட்டது.

ஸ்டட்ஹாஃப் எனும் வதை முகாமில் சுமார் 3,000 காவலர்கள் இருந்தனர்.அவர்களில் 50 பேர் மீதான குற்றம் மட்டுமே நிரூபணமானது.

ஸ்டட்ஹாஃப் வதை முகாமின் செயலராக இருந்த ஐர்ம்கார்ட் ஃபர்ச்னர் எனும் வயதான பெண் கடந்த மாதம் விசாரணையை எதிர்கொள்ள இருந்தார். ஆனால், விசாரணைக்கு சில மணி நேரங்களுக்கு முன் காப்பகத்தில் இருந்து தப்பித்தார்.

பின்னர் அவர் ஹாம்பர்க் நகரில் பிடிக்கப்பட்டார். அவர் மீதான விசாரணை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :