You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பலதார திருமணம்: "எனக்கு பல காதலர்களும் துணைவர்களும் தேவைப்படுவது ஏன்?"
- எழுதியவர், பூஜா சாப்ரியா
- பதவி, பிபிசி நியூஸ்
தனது இளம் பருவத்தில் இருந்தே மூவும்பி நெட்சலாமா ஒரே நபரை திருமணம் செய்து வாழும் பழக்கத்தை கேள்விக்குள்ளாக்கினார்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒன்றாக இருப்பீர்களா என்று எப்போதும் தன்னுடைய பெற்றோரிடம் கேட்டுக் கொண்டே வளர்ந்தார் மூவும்பி.
இது குறித்து பிபிசியிடம் பேசிய மூவும்பி, "நம் வாழ்வில் இடம்பெறும் மக்கள், பருவங்களைப் போல மாற வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் என்னைச் சுற்றியுள்ள உலகில், உறவு பற்றிய பேச்சு எல்லா இடங்களிலும் கற்பிக்கப்பட்டது, சினிமாவிலும் தேவாலயத்திலும் ஒரே விஷயம் சொல்லப்பட்டது. ஆனால் என்னால் அதை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை."
இப்போது மூவும்பிக்கு 33 வயதாகிறது. இவரது அடையாளம் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் உறவு வைத்திருப்பது மற்றும் எந்த உறவிலும் எந்தப் பிணைப்பையும் ஏற்படுத்திக்கொள்ளாதது.
இதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவில் தன்னைப் போன்ற சிந்தனை கொண்டவர்களின் நலன்களை பாதுகாக்க அவர்களுக்காக குரல் கொடுப்பதை ஒரு இயக்கமாக மூவும்பி நடத்தி வருகிறார்.
இது பற்றி அவர் பிபிசியிடம் பேசியபோது, "எனக்கு தற்போது ஒரு முக்கிய கூட்டாளி இருக்கிறார், எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். மற்ற கூட்டாளிகள் எங்கள் அனைவருடன் மிக மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், எனது முக்கிய கூட்டாளி என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை,
"எதிர்காலத்தில் நான் செய்து கொள்ள விரும்பும் திருமணம் இதுபோன்றதாக இருக்கலாம். இது ஒரு கற்பனைதான். நான் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள நேரலாம். பாலினத்தைப் பொருட்படுத்தாமல் நான் மக்களை ஈர்க்கிறேன்."
ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருக்கிறார்களா?
தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு உலகம், மிகவும் தாராளமானதாக கருதப்படுகிறது. ஒரு பாலின திருமணம் மட்டுமல்லாமல், ஆண்கள் பல மனைவிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது அந்நாட்டில் திருமணச் சட்டத்தை திருத்த கோரிக்கை எழுந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை அனுமதிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான தேவையும் உள்ளது.
இருப்பினும், நாடு முழுவதும் உள்ள பழமைவாத சமூகம் அதை கடுமையாக விமர்சித்து வருகிறது.
"நான்கு மனைவிகளைக் கொண்ட ஒரு தொழிலதிபர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை மூஸ்ஸா மஸ்லேகு, "இது நமது ஆப்பிரிக்க கலாசாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களின் குழந்தைகளுக்கு என்ன நடக்கும்? அவர்கள் என்ன அடையாளத்தை வெளிப்படுத்துவார்கள்? பெண்களால் ஆண்களை மாற்ற முடியாது. அது பற்றி இப்போதுவரை யாரும் கேட்கவில்லை. பெண்கள் இப்போது ஆண்களுக்கு லோபோலா (மணமகளுக்கு கொடுக்கப்பட்ட தொகை) தருவார்களா? ஆண்கள் இப்போது மனைவியின் குடும்பப்பெயரை வைத்துக்கொள்வார்களா?" என்று மஸ்லேகு கேட்கிறார்.
அதே நேரத்தில், எதிர்கட்சியான ஆப்பிரிக்க கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் (ACDP) தலைவர் கென்னத் மெஷோய், இது சமுதாயத்தை அழித்துவிடும் என்கிறார்.
"நீங்கள் இன்னொரு மனிதனுடன் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என்று ஒரு மனிதன் சொல்லும் காலம் வரும். என்னுடன் வாழாதே என்றும் அவர்கள் கூறலாம். இது இரண்டு மனிதர்களிடையே மோதலுக்கு வழிவகுக்கும்," என்கிறார் கென்னத்
மக்களின் நம்பமுடியாத நம்பிக்கை
மூவும்பியின் கூற்றுப்படி, பலதார மண உறவுகளில் பெண்களுக்கு இது ஒரு முக்கியமான தருணம்.
"தற்போதைய பெண்களின் நிலைமை பதற்றமாக இருக்கிறது. பலரின் நம்பிக்கைகள் அசைக்கப்படுகின்றன. ஆண்கள் பல தலைமுறைகளாக வெளிப்படையாகவும் மகிழ்ச்சியாகவும் பலதார மணம் செய்து வருகின்றனர், ஆனால் பெண்கள் இதற்காக வெட்கப்பட வேண்டியே நிலையே உள்ளது. இதுபோன்ற மேலும் பல விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும்," என்கிரார் மூவும்பி.
மூவும்பி கடந்த 10 வருடங்களாக தாம் கொண்டிருக்கும் பல உறவுகள் குறித்து வெளிப்படையாக இருந்தார். அத்தகைய மக்கள் கூட்டாக 'பாலி' என்று அழைக்கப்படுகிறார்கள். பாலி என்பது வெறுமனே நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகளில் இருக்க முடியும் மற்றும் உங்களுக்கு உறவு உள்ள அனைத்து நபர்களின் முழு ஆதரவையும் நம்பிக்கையையும் பெறலாம் என்பதாகும்.
தற்போது, மூவும்பிக்கு இரண்டு இணையர்கள் உள்ளனர். அவருடன் தொடர்புடையவரும் ஒன்றாக வாழ்கிறார். இவர்கள் பரஸ்பரம் அடுத்தவரின் வளங்களைப் பயன்படுத்துகின்றனர். காதல் உறவு கொண்ட மற்றொரு இணையரும் இவருக்கு இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும்போது, "நாங்கள் டேபிள் பாலிமரி பாணியைப் பயிற்சி செய்கிறோம், அதில் மக்கள் ஒருவருக்கொருவர் சக இணையர்களைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். எல்லோரும் ஒருவருக்கொருவர் சந்திப்பது அவசியமில்லை, ஆனால் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். பழங்குடிகள் நடுவே இது காணப்படுகிறது," என்றார்.
மூவும்பி ஆரம்பத்தில் இதைப் பற்றி தன் குடும்பத்தினரிடம் சொல்வதில் தயக்கம் கொண்டிருந்தார். ஆனால் அவரது இணையர் மசு மைமகேலா நலபட்சியுடனான பிணைப்பு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வலுப்பெற்றபோது, அவர் தனது உறவு குறித்து அனைவருக்கும் வெளிப்படுத்த முடிவு செய்தார்.
"என் கூட்டாளி பலசாலி. அவர் மற்றொரு கூட்டாளியுடன் பொது இடத்தில் இருக்கும்போது என் குடும்பம் அவருடன் மோதுவதை நான் விரும்பவில்லை," என்று அவர் கூறினார்.
"எங்கள் மகளுக்கு ஐந்து வயதாகிறது. நான் பலதார மணத்திற்காக உள்ளூர் தொலைக்காட்சியில் பிரசாரம் செய்து வந்தேன். அப்போதுதான் தனது இணையர் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது."
மூவும்பி தங்களுடைய சமீபத்திய நிச்சயதார்த்தத்தை நினைவு கூர்ந்தார், அவரது இணையர் லோபோலா வழக்கத்தை கொண்டிருந்தார். அதாவது இந்த நடைமுறையின் கீழ் ஒரு மனிதன் தனது வருங்கால மனைவியின் குடும்பத்திற்கு, திருமணத்திற்காக பணம் செலுத்துகிறான்.
இதை விவரித்த மூவும்பி, "என் குடும்ப உறுப்பினர்கள் வேறு யாராவது வந்து லோபோலாவை ஏற்றுக்கொள்வார்களா என்று கேட்டார்கள். அது நடக்கலாம் என்று நான் பதிலளித்தேன். உண்மையை கடைப்பிடிப்பது எனக்கு முக்கியம். அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட," என்றார்.
ஆணாதிக்கத்தின் கேள்வி
தென்னாப்பிரிக்காவில் பாலின சமத்துவ செயற்பாட்டாளர்கள் சமத்துவத்துக்காக பிரசாரம் செய்கிறார்கள். பெண்களை தேர்வு செய்ய அனுமதிக்க, பலதாரங்களை சட்டபூர்வமாக்க விரும்புகிறார்கள். ஏனெனில் தற்போதைய அமைப்பு ஆண்கள் மட்டுமே பல மனைவியரைக் கொண்டிருப்பதை அனுமதிக்கிறது.
மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் திருமண சட்டத்தை மாற்றுவதற்காக 1994 க்குப் பிறகு முதல் முறையாக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆவணத்தில் அவரது முன்மொழிவு சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது செல்லுபடியாகாததாகக் கருதப்படும் முஸ்லிம், இந்து, யூத மற்றும் ரஸ்தாபரியன் திருமணங்களை சட்டபூர்வமாக்க இந்த ஆவணம் முன்மொழிகிறது.
பிரபல கல்விப் பேராசிரியர் கொலிஸ் மச்சோகோ, பலதார மணம் என்ற தலைப்பில் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தினார்,
"கிறிஸ்தவம் மற்றும் காலனித்துவத்தின் வருகையால் பெண்களின் பங்கு குறைந்துவிட்டது. அவர்கள் சமமாக இல்லை. சமுதாயத்தில் படிநிலையை நிறுவ திருமணங்களும் பயன்படுத்தப்பட்டன."
அவரைப் பொருத்தவரை, கென்யா, காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் நைஜீரியாவில் ஒரு காலத்தில் பலதார மணம் நடைமுறையில் இருந்தது,
அவர் மேலும் கூறுகையில், "குழந்தைகளுக்கு யார் அப்பா என்று கேள்வி வரலாம். அந்த உறவுகளில் எந்த குழந்தைகள் பிறந்தாலும், அவர்கள் அந்த குடும்பத்தின் குழந்தைகளே," என்றார்.
'இது வேறு சண்டை'
மூவும்பி தனது கடந்தகால உறவுகளில் சில ஆணாதிக்க நம்பிக்கைகள் புகுந்துகொண்டதைக் கண்டார். பின்னர் அவர்களுக்கு தாங்கள் பல துணைவர்களைக் கொண்டவர்களாக வாழ்வது எளிதானது.
மூவும்பி நினைவு கூர்ந்தார், "நான் 'பாலி' ஆகும் வரை அழகாக இருப்பதாக ஆண்கள் கூறுவார்கள், ஆனால் அதற்கு பிறகு 'நன்றாக இல்லை' என்பார்கள்.
"என்னைப் பொருத்தவரையில், என்னால் முடிந்தவரை பல காதலர்களைப் பெற முயற்சிப்பது போல் இல்லை. நான் உணரும்போது யாரோடும் ஒரு தொடர்பைக் கண்டுபிடிப்பது போல் இருக்கிறது."
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாலி மக்களை இணைக்கும் ஒரு ஆன்லைன் சமூகத்தில் மூவும்பி தனது இரு கூட்டாளிகளையும் சந்தித்தார்.
இந்த நாட்களில், மிலக் ஓபன் லவ் ஆப்பிரிக்கா என்ற ஆன்லைன் தளத்தை உருவாக்கினார். அது நாட்டில் நடந்துகொண்டிருக்கும் விவாதம் குறித்த கருத்துகளை மக்களிடம் இருந்து பெற பாலமாக இருந்தது. மூவும்பியின் கூற்றுப்படி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் நெறிமுறை உறவுகளை மேம்படுத்துவதே அவர்களின் முயற்சி.
"சமூகம் கருப்பின மக்களுக்கு அதிக ஆதரவளிக்கிறது, ஆனால் அது உள்ளடக்கியது மற்றும் நாம் முன்னேறும்போது விரிவடையும் தன்மை கொண்டதாக உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் மகிழ்ச்சியாக உறவில் இருக்கும் மக்களுக்கு ஒரு பரிசாக அவர்களைப் போன்ற பலரை இங்கே சந்திக்க முடியும். பிறகு வெளிப்படையாக வாழலாம். பொய் சொல்லத் தேவையில்லை என்று உணர்கிறேன்," என்கிறார் மூவும்பி.
"நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது, ஆணின் அனுமதியின்றி பெண்கள் கருத்தடை செய்வதற்காக என் அம்மா போராட்டங்களில் ஈடுபட்டார்," என்று கூறிய மூவும்பி. அந்த காலத்தில் அவர்கள் சமூகத்தில் போராடியது வேறு ஒரு வகை சண்டை என்றால் இப்போது நான் போராடுவதும் வேறொரு வகை சண்டை என்றார்.
(இந்த செய்திக்காக பும்சா பிஹ்லானி என்பவரும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளார்)
பிற செய்திகள்:
- இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா? சர்வதேச அரங்கில் இனி என்ன நடக்கும்?
- பதவி விலகிய பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்: "மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன்"
- குத்தி கொலை செய்யப்பட்ட பாலின தொழிலாளியின் பெயரை பெல்ஜியம் ஒரு சாலைக்கு வைப்பது ஏன்?
- பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதில் என்ன சிக்கல்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்