You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'1965' போர்: சிறப்பு ஆபரேஷனில் சறுக்கிய பாகிஸ்தான் - இந்தியா சுற்றி வளைத்தது எப்படி?
- எழுதியவர், ரெஹான் ஃபைசல்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
1965 செப்டம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில், பாகிஸ்தானின் பி -57 விமானம் இந்திய நிலைகள் மீது குண்டு வீச புறப்பட்டபோது, மூன்று சி - 130 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்களும் அதைப் பின்தொடர்ந்து, இந்திய எல்லையை நெருங்கின.
ஒவ்வொரு விமானத்திலும் சிறப்புப் படைக் குழுவின் அறுபது கமாண்டோக்கள் இருந்தனர்.
இரவின் இருளில் மூன்று இந்திய விமான தளங்களான ஹல்வாரா, ஆதம்பூர் மற்றும் பதான்கோட் ஆகியவற்றில் பாராசூட் மூலம் தரையிறங்கி, அந்த தளங்களை கைப்பற்றி அங்குள்ள இந்திய விமானப்படை விமானங்களை அழிப்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.
இரவு 2 மணியளவில், மேஜர் காலித் பட் தலைமையிலான 60 பாகிஸ்தான் கமாண்டோக்கள் பதான்கோட் விமானப்படை தளம் அருகே தரையிறங்கினர். ஒன்றன் பின் ஒன்றாக பல பிரச்னைகள் அவர்களை சோதித்தன.
விமான தளத்தைச் சுற்றியிருந்த கால்வாய்கள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் சேறு நிரம்பிய வயல்கள் காரணமாக அவர்கள் முன்னேறிச்செல்வது சிரமமாக இருந்தது.
மூன்று மணி நேரத்திற்குள் பொழுது விடியத்தொடங்கியது. அதற்குள் ஒரு கிராமவாசி, பாகிஸ்தானியர்கள் அங்கு தரையிறங்கியிருப்பது குறித்து பதான்கோட் துணை பகுதி தலைமையகத்திற்கு தகவல் கொடுத்தார்.
திரும்பி ஓடிய ஒரு கமாண்டோ
இந்த சலசலப்புக்கு இடையே சுமார் 200 பேர் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். அடுத்த இரண்டு நாட்களில் பெரும்பாலான கமாண்டோக்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கமாண்டோக்களை வழிநடத்திய மேஜர் காலித் பட்டும் பிடிபட்டார்.
ஹல்வாராவில் இரவின் இருள் இருந்தபோதிலும், பாரசூட் மூலம் வீரர்கள் மேலிருந்து கீழே வருவது தெளிவாகத் தெரிந்தது.
விமானதள பாதுகாப்பு அலுவலர் எல்லா விமானப்படை பணியாளர்கள்(ஏர்மென்) மற்றும் அதிகாரிகளுக்கும் துப்பாக்கிகளை விநியோகித்தார் விமான தளத்தை ஒட்டியுள்ள புல்வெளிகளில் எந்த அசைவைக்கண்டாலும் தயங்காமல் சுடுமாறு அறிவுறுத்தினார்.
சில பாகிஸ்தான் கமாண்டோக்கள் விமான தள முற்றத்தில் விழுந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பிப்பதற்கு முன்பே போர்க் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
"கமாண்டோக்களில் ஒருவரான மேஜர் ஹசூர் ஹஸ்னெய்ன் ஒரு இந்திய ஜீப்பை வலுக்கட்டாயமாக கடத்தி, தனது தோழர்களில் ஒருவரோடு பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றார்," என ஜான் ஃப்ரிகர் தனது 'பேட்டில் ஃபார் பாகிஸ்தான்' (Battle for Pakistan) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஹல்வாரா விமான தளத்தில் நிதித் துறை தலைவராக பணிபுரிந்த ஸ்க்வாட்ரன் லீடர் கிரிஷன் சிங், பாகிஸ்தான் கமாண்டோக்களின் தலைவரை கைது செய்தார். 1965 மற்றும் 1971 போர்களில் இதே போன்ற சாதனைகளுக்காக வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது அவருக்கு. போர் வீரர் அல்லாத ஒருவருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குரைத்த நாய்கள்
ஆதம்பூரிலும் பாகிஸ்தான் வீரர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். அவர்கள் விமான தளத்திலிருந்து வெகுதூரத்தில் தரையிறக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் அணிசேர முடியவில்லை. இரவில் குரைக்கத்தொடங்கிய நாய்கள் பாகிஸ்தான் வீரர்கள் பதுங்கி வரும் ரகசியத்தை வெளிப்படுத்தின.
சூரியன் உதித்தவுடன் அவர்கள் சோள வயல்களில் தஞ்சமடைந்தனர். லூதியானாவில் இருந்து வந்த என்சிசி இளைஞர்களால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். கோபம் கொண்ட கிராம மக்களால் சிலர் கொல்லப்பட்டனர்.
மொத்தம் இருந்த 180 பாராசூட் வீரர்களில் 138 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். 22 பேர் ராணுவம், காவல்துறை அல்லது கிராமவாசிகளுடனான மோதல்களில் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பதான்கோட் விமான தளத்தில் தரையிறங்கியவர்கள். அங்கிருந்து பாகிஸ்தான் எல்லைக்கு 10 மைல் தூரம் மட்டுமே இருந்தது.
"60 கமாண்டோக்களின் குழு, மக்களின் கவனத்தை ஈர்க்காமல் தங்கள் பணியைச் செய்ய முடியாத ஒரு பெரிய குழுவாக இருந்தது. அதே நேரத்தில், சுற்றி வளைக்கப்படும் நிலை உருவானால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் இல்லாத சிறிய குழுவாகவும் அது இருந்தது," என பிவிஎஸ் ஜெகன்மோகன் மற்றும் சமீர் சோப்ரா தங்களது 'இந்தியா பாகிஸ்தான் ஏர் வார்' என்கிற புத்தகத்தில் எழுதியுள்ளனர்.
கெளஹாதி மற்றும் ஷில்லாங்கிலும் சில பாராசூட் வீரர்களை பாகிஸ்தான் இறக்கியது. ஆனால் அவர்கள் அனைவரும் தங்கள் பணிகளைத் தொடங்கும் முன் கைது செய்யப்பட்டனர்.
பாரசூட் வீரர்களுக்கு பயந்து டெல்லிக்கு ஓடினர்
இதுபோன்ற சம்பவங்கள் இரு நாடுகளிலும் சிலநேரங்களில் மிகவும் நகைச்சுவையான சூழ்நிலைகளை உருவாக்கியது. ஒரு முறை அதிகாரி ஒருவர் பாரசூட் வீரரை கனவில் பார்த்தார்.
அவர் தூக்கத்தில் "எதிரி, எதிரி, சுடுங்கள், சுடுங்கள்" என்று கத்தினார்..
ப்ளாக் அவுட் காரணமாக சுற்றிலும் இருட்டாக இருந்ததால், இந்த ஒலி எங்கிருந்து வருகிறது என்பதை பார்க்க முடியவில்லை. பலர் எழுந்துவிட்டனர்.
கூச்சல் குழப்பம் நிலவியது. கைத்துப்பாக்கிகள் வெளியே எடுக்கப்பட்டன, ஆனால் துப்பாக்கிச்சூடு தொடங்குவதற்கு முன்பு, கமாண்டிங் அதிகாரி முழு விவரத்தையும் புரிந்து கொண்டார்.
"பார்சூட் படைகள் ஹல்வாராவில் தரையிறங்கிய பிறகு, டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமான தளத்திலும் பாகிஸ்தான் வீரர்கள் தரையிறங்கப் போகிறார்கள் என்கிற வதந்தி பரவியது.
ஹிண்டன், வீரர்களின் குடும்பத்தினர் தங்கும் தளம். எனவே வீரர்கள் விரும்பினால் அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிட்டு திரும்பி வரலாம் என்று தளத்தின் கமாண்டிங் அதிகாரி கூறினார்.
எந்த வாகனம் கிடைத்தாலும் அதில் தனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக்கொண்டு வீரர்கள் டெல்லி நோக்கி விரைந்தனர்,"என ஏர் மார்ஷல் பூப் பிஷ்னோய் நினைவு கூர்கிறார்.
பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு
இதைவிட சுவாரசியமான சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது. சர்கோடா விமான தளத்தில், இந்திய பாரசூட் வீரர்கள் இறங்க இருப்பதாக செய்தி வந்தது. விமானப்படை தலைமையகம், கமாண்டோக்கள் நிறைந்த சி -130 விமானத்தை சர்கோடாவுக்கு அனுப்பியது.
அந்த விமானம் இருட்டில் சர்கோடா விமான தளத்தில் தரையிறங்கியதும், அதிலிருந்து கமாண்டோக்கள் இறங்கத் தொடங்கினர். ஒரு காவலாளி அவர்கள் இந்திய துருப்புக்கள் என்று தவறாக புரிந்துகொண்டார்.
அதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.. இந்தத்தவறான புரிதல் காரணமாக நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை என 'ஏர் காமாடோர் மன்சூர் ஷா, தி கோல்ட் பெர்ட்: பாகிஸ்தான் அண்ட் இட்ஸ் ஏர்ஃபோர்ஸ்' என்கிற புத்தகத்தில் எழுதியுள்ளார்
இதேபோல், பதான்கோட்டில் பாரசூட் தாக்குதல் நடந்தால் அதை சமாளிக்க, எல்லா அதிகாரிகளுக்கும் 9 மிமீ ஸ்டென் கார்பைன் துப்பாக்கி வழங்கப்பட்டன. ஃப்ளைட் லெப்டினன்ட் பதானியாவுக்கும் ஒரு கார்பைன் கிடைத்தது.
அவருக்கு அதை இயக்கத்தெரியாததால், ஃப்ளைட் லெப்டினன்ட் துஷார் சென் அவருக்கு கார்பைனை இயக்க கற்றுக்கொடுத்தார்.
அப்போது அவரது விரல் நழுவியதால், கார்பைனில் இருந்து 9 மிமீ குண்டுகள் எல்லாமே, அங்கு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த விமானிகளின் தலைக்கு சில அங்குலங்கள் மேலே வெடித்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்