ஆப்கானிஸ்தான்: காபூலுக்குள் தாலிபன்கள் - விமான நிலையத்துக்கு தூதரகத்தை மாற்றியது அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
ஆப்கான் தலைநகர் காபூலின் நாலா புறத்தையும் இன்று பிற்பகலில் சூழ்ந்த தாலிபன்கள், மாலையில் தலைநகருக்குள் நுழைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சூறையாடல்கள் நடப்பதை தடுக்க நகர எல்லையில் காத்திருந்த தமது ஆயுதமேந்திய போராளிகளை உள்ளே நுழைய உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை பிபிசியால் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த இயலவில்லை.
நகரின் பல இடங்களில் இருந்த சோதனைச் சாவடிகளில் இருந்து பாதுகாப்புப் படையினர் வெளியேறி விட்டனர். இதனால் குழப்பத்தையும் சூறையாடல்களையும் தவிர்க்கவே தங்களுடைய போராளிகள் நகருக்குள் நுழைந்ததாக அந்த செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
தங்களுடைய போராளிகளைக் கண்டு மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று தாலிபன்கள் அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தலைநகரின் பல இடங்களில் துப்பாக்கியால் சுடும் சத்தங்களை கேட்க முடிவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதிகளில் துப்பாக்கியால் சுடும் தாலிபன்கள்
வெளிநாட்டில் படித்து வரும் மாணவர் ஒருவர், தற்போதைய அசாதாரண நிலையைத் தொடர்ந்து மீண்டும் இஸ்தான்புல்லுக்குத் திரும்ப விமான நிலையம் வந்தார். ஆனால், வாகன வசதி கிடைக்காததால் சுமார் ஐந்து மணி நேரத்துக்கும் மேல் நடந்தே வந்ததாக சயீதி என்ற அந்த மாணவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயரை மாற்றிக் குறிப்பிட்டுளோம்.
"எனது கால்கள் காப்பு காய்ச்சியது போல் ஆகிவிட்டன. நிற்கவே சிரமப்படுகிறேன்," என்று அவர் கூறினார்.
"காபூலின் தற்போது ராணுவ நகரம் போல காட்சியளிக்கிறது. அங்கிருப்பவர்கள் பாரம்பரிய உடையில் ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்கள். வானை நோக்கி துப்பாக்கியால் சுடுகிறார்கள். அதை பார்க்கும்போது எனது பெற்றோர் கூறிய ஜிஹாதி கதைகள்தான் நினைவுக்கு வருகின்றன," என்று சயீதி தெரிவித்தார்.
இஸ்தான்புல்லில் முதுகலை பட்டப்படிப்பு கல்வியை தொடருவதற்காக விமான நிலையம் வந்துள்ளார் சயீதி. கல்லூரி விடுமுறையை கழிக்க காபூலுக்கு வந்த அவர், மீண்டும் தமது இஸ்தான்புல் திரும்புகிறார்.
"இப்போது நான் திரும்புகிறேன். ஆனால், எனது பெற்றோரின் நிலை தெரியவில்லை. அவர்கள் தப்பிக்க வழியே இல்லை. இங்கு எதிர்காலம் இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை," என்று அவர் கூறினார்.
தூதரகத்தை விமான நிலையத்துக்கு மாற்றிய அமெரிக்கா
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இயங்கி வந்த தமது தூதரகம், தற்காலிகமாக அந்த நகர விமான நிலைய வளாகத்துக்கு மாற்றப்படுவதாக அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஏபிசி நியூஸிடம் இது தொடர்பாக பேசிய அவர், "இதுபோன்ற சூழ்நிலைகளுக்காகவே எங்களுடைய சில படையினர் அங்கு உள்ளனர். அந்த நாட்டில் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் நாங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவே இதை செய்கிறோம். காபூலில் உள்ள தூதரகத்தில் இருப்பவர்கள் விமான நிலைய வளாகத்துக்கு வரழைக்கப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.
தூதரக ஊழியர்களின் பட்டியல் முழுமையாக உள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான இரட்டிப்பு முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையை, வியட்நாமின் செய்கான் சம்பவத்துடன் ஒப்பிடுவது தவறு என்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்து விட்டது என்றும் அன்டனி பிளிங்கென் கூறினார்.
சுற்றிவளைத்துவிட்டோம் - தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்து விட்டதாக தாலிபன் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை காலையில் அறிவித்தது.
பிற நகரங்கள் அனைத்தையும் கைப்பற்றிய பிறகு ஞாயிற்றுக்கிழமை காபூல் நகரில் அவர்கள் நுழைந்தனர். தலைநகரைத் தவிர பிற நகரங்கள் அனைத்தையும் பிடிப்பதற்கு அவர்களுக்கு வெறும் 10 நாள்கள்தான் ஆனது.
அப்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், காபூல் நகரைக் கைப்பற்றிய பிறகு கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தக்கூடாது என்று போராளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தாலிபன் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்கன் ராணுவ வீரர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
விமான நிலையங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும், அவற்றுக்கான சப்ளைகள் நிறுத்தப்படாது என்றும் அந்த அதிகாரி கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிநாட்டவர்கள் வெளியேற விரும்பலாம். அல்லது அவர்கள் தங்களை தாலிபன் அதிகாரிகளிடம் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் ஆப்கானிஸ்தானில் உள்ள 5 ஆயிரம் அமெரிக்கப் படையினர் உதவியுடன் தங்கள் தூதரக ஊழியர்களை வெளியேற்றுவதை அமெரிக்கா விரைவுபடுத்துகிறது.
எனினும், காபூல் வீதிகளில் தாலிபன் போராளிகள் தங்களுடைய கொடிகளை ஏந்தியவாறு நிற்பதையும் சில இடங்களில் துப்பாக்கி சூடு சத்தமும் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன.
நாட்டை விட்டு வெளியேறிய அதிபர்

பட மூலாதாரம், Getty Images
முன்னதாக,, காபூலுக்குள் தாலிபன்கள் வந்து விட்ட தகவலை அறிந்ததும், ஐ.நா. சிறப்புப் பிரதிநிதியுடன் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி அவசர ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைப்பது பற்றி அரசு தரப்புடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, துணை அதிபர் அம்ருல்லா சாலே ஆகியோர் நாட்டை விட்டு சென்று விட்டதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நிலைமை, மனிதாபிமான பேரழிவாகி விட்டது என்று ஐ.நா சர்வதேச வளர்ச்சிக்குழுவின் முன்னாள் செயலாளர் ரோரி ஸ்டீவார்ட் கூறியுள்ளார்.
"இந்த நாட்டில் எல்லாமே தவறாக நடக்கிறது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மருத்துவ நிலையங்கள் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். எங்கும் சூறையாடல்கள் நடக்கின்றன. சொந்த நாட்டை விட்டே மக்கள் அகதிகள் போல வெளியேறுகிறார்கள். நடக்கும் சம்பவங்களைப் பார்த்து பல ஆப்கானியர்களும் அச்சம் அடைந்து காணப்படுகின்றனர்", என்று அவர் தெரிவித்தார்.
காபூலுக்கு முன்னர் கடைசி முக்கிய நகரை கைப்பற்றிய தாலிபன்கள்

பட மூலாதாரம், Getty Images
தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள் வலுவாக இருந்த வடக்குப் பகுதியின் கடைசி முக்கிய நகரமான மசர் இ ஷரீஃப்பையும் தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர்.
பன்னெடுங்காலமாகவே மசர் இ ஷரீஃப் நகரம் தாலிபன்களுக்கு எதிராக இருந்தது. அப்படிப்பட்ட நகரத்தை தாலிபன்கள் கைப்பற்றி இருப்பது, தாலிபன்களின் முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு தான் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நகரத்தில் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் மசர் இ ஷரீஃப் உட்பட பல்வேறு முக்கிய நகரங்கள் தொடர்ந்து தாலிபன்கள் வசமாகி வருகின்றன. மேலும் தாலிபன்கள் ஆப்கன் தலைநகரான காபூலை நோக்கி முன்னேறி வருவதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வன்முறையால் சுமார் 2.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு பாதுகாப்புக்காக காபூலுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுவரை தாலிபன்கள் கைப்பற்றிய நகரங்களில், பெண்கள் புர்கா அணிய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சமூக விதிகளை பின்பற்றாதவர்களை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளோ ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் இருக்கின்றனர்.
மசர் இ ஷரீஃப் வீழ்ந்தது எப்படி?

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகர் மற்றும் ஆப்கனின் நான்காவது பெரிய நகரமான மசர் இ ஷரீஃப் பெரிய போராட்டங்களின்றி தாலிபன்கள் வென்றதாக அந்நகரத்தின் உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்நகரத்தில் தேசிய ராணுவம் முதலில் சரணடைந்ததால், மற்ற அரசுக்கு ஆதரவான படைகள் மற்றும் ஆயுதமேந்திய போர் குழுக்கள் சரணடைய வேண்டி வந்ததாக பால்க் மாகாணத்தைச் சேர்ந்த அபாஸ் இப்ராஹீம்சாதா அசோசியேடட் பிரஸ் முகமையிடம் கூறியுள்ளார்.
மசர் இ ஷரீஃப் ஒரு முக்கிய பொருளாதார மையம். இந்நகரம் உஸ்பெகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப் புறத்தில் அமைந்திருக்கிறது. 1990-களில் இந்நகரம் தாலிபன்கள் வசம் இருந்தது நினைவுகூரத்தக்கது.
உஸ்பெக் இனத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் டோஸ்டம் மற்றும் தஜிக் தலைவர்களில் ஒருவரான அட்டா மொஹம்மத் நூர் ஆகியோர் அம்மாகாணத்தை விட்டு தப்பி ஓடியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அப்துல் ரஷீத் டொஸ்டம்மின் ஆளில்லா வீட்டில் தாலிபன்கள் இருப்பது போன்ற சில காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த தோல்விக்கு ஆப்கன் அரசுப் படைகளே காரணம் என சனிக்கிழமை வெளியான ஃபேஸ்புக் பதிவில் தஜிக் தலைவர் அட்டா மொஹம்மது நூர் குறை கூறியுள்ளார். மேலும் அரசுப் படைகள் தங்களின் ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை தாலிபன்களிடம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தானும் (நூர்), டோஸ்டமும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
"தாலிபன்கள் ஒவ்வொரு வீடாக சோதனை செய்கிறார்கள். நாங்கள் வீட்டிலேயே தான் இருக்கிறோம். துரதிர்ஷ்டவசமாக எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என அந்நகரத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் கூறியுள்ளார்.
மேலும் "நாங்கள் மிகவும் பயத்தில் இருக்கிறோம். என் குழந்தைகள் பயத்தில் இருக்கிறார்கள். என் மனைவி அழுது கொண்டிருக்கிறார். நாளை என்ன செய்யப் போகிறோம்?" என்கிறார் அவர்.
மசர் இ ஷரீஃப் போலவே, சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) பக்திகா மற்றும் குன்வார் மாகாண தலைநகரங்களும் தாலிபன்கள் வசமாகியுள்ளன.
குன்வர் மாகாணத்தைச் சேர்ந்த அசாதாபாத் நகரத்து மக்கள் தாலிபன்களின் கொடியை ஏந்திக் கொண்டு சாலைகளில் நடப்பது போன்ற காட்சிகள், சரிபார்க்கப்படாத காணொளி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்கள் தாலிபன்கள் வசம் உள்ளன. முக்கிய நகரங்களை எடுத்துக் கொண்டால் காபூல் மற்றும் ஜலாலாபாத் மட்டுமே இப்போதும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
தாலிபன் கமாண்டர்கள், ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் திருமணமாகாத பெண்களை தங்களின் போராளிகளுக்கு திருமணம் செய்து கொடுக்கும் படி கோருவதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன.
"தாலிபன்கள் என்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, என் உயிரை விட்டுவிடுவேன்" என தன் இரு சகோதரிகளோடு பர்வான் நகரத்தை விட்டு வெளியேறி தற்போது காபூல் நகரத்தில் இருக்கும் 35 வயதான முஸ்டா என்கிற பெண் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- நரேந்திர மோதி: "விவசாயிகள் நலனில் கவனம் செலுத்துவோம்" - சுதந்திர தின உரை முக்கிய தகவல்கள்
- எதிரிகளின் ரத்தம் குடித்த சிதியர்கள் - யார் இந்த திகில் உலக ராஜாக்கள்?
- கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீளவில்லை - சுதந்திர தின உரையில் ராம்நாத் கோவிந்த் எச்சரிக்கை
- ஆப்கானிஸ்தானில் போருக்காக சுமார் 60 லட்சம் கோடி ரூபாய் செலவழித்த அமெரிக்கா
- கோவை தலித் அரசு ஊழியர் காலில் விழுந்தது ஏன்? புதிய வீடியோ காட்டும் தலைகீழ் திருப்பம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












