You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனோஃபார்ம்: சீனாவின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்
சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்த கோவிட்-19 தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி வழங்கியுள்ளது.
மேற்கத்திய நாடு ஒன்றால் தயாரிக்கப்படாத தடுப்பூசி ஒன்று உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறுவது இதுவே முதல் முறையாகும் .
சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே கோடிக்கணக்கான மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஃபைசர் அஸ்ட்ராஜெனீகா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் மாடெர்னா ஆகிய தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மட்டுமே உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்திருந்தது.
ஆனால் பல நாடுகளில், குறிப்பாக ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் உள்ள சில ஏழை நாடுகளில் மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகள் சீனோஃபார்ம் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியிருந்தன.
முன்னதாக குறைவான தரவுகளே சர்வதேச அளவில் வழங்கப்பட்டு இருந்ததால் சீன தடுப்பூசியின் செயல்வீரியம் நீண்டகாலமாக உறுதியாகத் தெரியாமலே இருந்தது.
சீனோஃபார்ம் நிறுவனம் தயாரித்து தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்வீரியம் மற்றும் தரம் ஆகியவற்றை தாங்கள் பரிசோதித்து கண்டறிந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் வெள்ளியன்று தெரிவித்துள்ளது.
18 அல்லது அதற்கு அதிகமான வயதுடையவர்களுக்கு இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ்களாக வழங்கவும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
சீனா தயாரித்துள்ள இன்னொரு தடுப்பூசியான 'சீனோவேக்' குறித்த முடிவு அடுத்து வரும் சில நாட்களில் உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசி ஏற்கனவே உலக சுகாதார நிறுவனத்தால் மதிப்பிடப்பட்டு வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் ஏன் முக்கியமானது?
இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்வீரியம் மிக்கது என்பதை உலக நாடுகளின் சுகாதார ஒழுங்காற்று அமைப்புகளுக்கு, உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் சமிக்ஞையாகவே இந்த ஒப்புதல் கருதப்படும்.
உலக நாடுகளின் மருத்துவ ஒழுங்காற்று அமைப்புகள், தங்களது நாடுகளில் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த இது உதவும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.
பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் சென்று சேர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வரும் 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழ் சீனோஃபார்ம் தடுப்பூசியை பயன்படுத்தவும் இந்த ஒப்புதல் வழிவகுக்கும்.
போதுமான அளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெறாமல் கோவேக்ஸ் திட்டம் போராடி வருகிறது. சீனோஃபார்ம் தடுப்பூசிக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்புதல் திட்டத்திற்கு பெரும் உந்துதலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு சீனோஃபார்ம் 6.5 கோடி மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவைத் தவிர ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
சீனோஃபார்ம் தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாடு அனுமதி வழங்கியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை குழு, அறிகுறிகள் தென்படுபவர்கள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 79 சதவிகிதம் பேருக்கு பலனளிக்கிறது என்று கூறியுள்ளது.
60 வயதுக்கும் மேலான மிகச் சிலரே இந்த தடுப்பு மருந்துக்கான பரிசோதனையின்போது சேர்க்கப்பட்டனர் என்றும், அதனால் இந்த வயதினருக்கான வீரியம் எந்தளவுக்கு இருக்கிறது என்றும் மதிப்பிட இயலவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால் வயதானவர்களில் இந்த மருந்தின் வீரியம் மாறுபடும் என்று கூறுவதற்கான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் இன்னொரு தடுப்புசியான சீனோவேக்ஸ் தடுப்பூசி குறித்த முடிவை இன்னும் உலக சுகாதார நிறுவனம் எட்டவில்லை.
சீனாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் சாதகங்களில் ஒன்று இவற்றை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைப்பதே போதும் என்பதாகும்.
சீனாவின் தடுப்பூசிகள் எப்படி வேலை செய்யும்?
சீனா தயாரித்துள்ள இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் பிறகு தடுப்பூசிகளிலிருந்து மிகவும் மாறுபடுகிறது.
குறிப்பாக ஃபைசர் மற்றும் மாடெர்னா தடுப்பூசிகளிலிருந்து இது கணிசமாக மாறுபடுகிறது.
ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் முறைகளின்படி தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசிகள் inactivated vaccines எனப்படுகின்றன.
அதாவது இந்த தடுப்பூசிகள் கொல்லப்பட்ட வைரஸ்களை உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்குள் செலுத்துகின்றன. இந்த வைரஸால் உடலில் நோய் தாக்கம் ஏற்படாது.
ஆனால் ஃபைசர் மற்றும் மாடெர்னா ஆகியவை எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் ஆகும். கொரோன வைரஸின் மரபணு குறியீட்டில் ஒரு பகுதி உடலுக்குள் செலுத்தப்படும் இதன் மூலம் இந்த தடுப்பூசி நோயெதிர்ப்பு அமைப்புக்கு கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பயிற்றுவிக்கும்.
அஸ்ட்ராஜெனீகா தடுப்பூசி சிம்பன்சி குரங்குகளுக்கு சளி பிடிக்கக் காரணமான வைரஸை செயலிழக்கச் செய்து அதில் இருந்து இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நுண்மி மனித உடலில் நுழைந்ததும் தொற்றாக மாறி பல்கிப் பெருகாத வகையில் அதன் தன்மை மாற்றப்பட்டு தடுப்பூசி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் தடுப்பூசியில் கொரோனா வைரஸின் ஒரு சிறு பகுதியை நம் உடலில் எடுத்துச் செல்ல, ஒரு சளி வைரஸைப் பயன்படுத்துகிறார்கள். இந்த சளி வைரஸ் மனிதர்களை பாதிக்காது.
பிற செய்திகள் :
- கொரோனா அலை: தமிழகத்தில் 2 வாரம் முழு ஊரடங்கு, டாஸ்மாக், அம்மா உணவகம் நிலை என்ன?
- மு.க.ஸ்டாலின் பிறப்பித்த முதல் 5 உத்தரவுகள்: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம், பால் விலை குறைப்பு
- தலைமைச் செயலாளர் இறையன்பு: முதல்வரின் செயலாளர்களாக 4 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
- கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை விலக்களிக்க அமெரிக்கா ஆதரவு
- எதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்