You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜப்பானில் ஃபுகுஷிமாவிற்கு அருகில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம்
ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் 7.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் அதிர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது பெரிதாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளிவரவில்லை.
நிலநடுக்கத்தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஜப்பானின் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து நாட்டின் தென்மேற்கு பகுதி வரை உணரப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசு தொலைக்காட்சியான எஹெச்கே டிவி, ஃபுகுஷிமா அணுஉலை ஏதும் பிரச்னை ஏற்பட்டுள்ளதா என சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும், இருப்பினும் தற்போதுவரை அணுஉலையில் எந்த சேதாரமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஜப்பானின் கடலோர நகரமான நிமி நகரலிருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது என அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன.
2011ஆம் ஆண்டு என்ன நடந்தது?
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஜப்பானின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் 9.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து பெரும் சுனாமியும் ஏற்பட்டது.
ஃபுகுஷிமா அணு உலையிலிருந்து அணு கசிவு ஏற்படுவதைத் தடுக்கும் அமைப்புகள் நிலநடுக்கத்தில் தப்பித்தாலும், சுனாமியால் சேதமடைந்தன. அணு உலையை குளிரச்செய்யும் அமைப்பு பழுதடைந்ததால் அதனைத் தொடர்ந்து டன் கணக்கான கதிரியக்க பொருட்கள் வெளியாகின. 1986ஆம் ஆண்டு நடைபெற்ற செர்னோபிள் விபத்துக்கு பிறகு மிகப்பெரிய அணு உலை விபத்தாக இது கருதப்படுகிறது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 18,500 பேர் உயிரிழந்துவிட்டனர் அல்லது அவர்களை காணவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: