எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்: ஐ.நா எச்சரிக்கையை மீறி தாக்குதலை அறிவித்த பிரதமர்

எத்தியோப்பியா

பட மூலாதாரம், Getty Images

எத்தியோப்பியாவின் டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி (TPLF - Tigray People's Liberation Front) மற்றும் எத்தியோப்பிய மத்திய அரசாங்கத்துக்கு இடையிலான பிரச்னை உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அங்குள்ள மெக்கெல்லி நகரில் இறுதி கட்ட ராணுவ நடவடிக்கையை அறிவித்திருக்கிறார் அந்நாட்டுப் பிரதமர் அபீ அகமது.

டீக்ரே போராளிகள் சரணடைய அரசு கொடுத்த அவகாசம் புதன்கிழமையோடு முடிந்து விட்டது.

இந்த நிலையில், அங்குள்ள செல்போன், இன்டர்நெட் சேவைகள் என எல்லாமே துண்டிக்கப்பட்டு இருப்பதால், களத்தில் உள்ள தாக்குதல் நிலவரத்தை பிபிசியால் உறுதிப்படுத்த இயலவில்லை.

அபீ மது என்ன சொல்கிறார்?

டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக, ஐந்து லட்சம் பேர் வாழ்ந்து கொண்டிருக்கும் மெக்கெல்லி நகரில் தாக்குதலை நடத்த, எத்தியோபியாவின் ராணுவத்துக்கு பிரதமர் அபீ அகமது உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மக்களைக் காக்க அக்கறை கொள்ளப்படும் அதேவேளை, மெக்கெல்லியில் சேதாரங்களைக் கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும் என அவர் கூறி இருக்கிறார்.

இதனால் மெக்கெல்லி மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் மக்கள், ஆயுதங்களை விட்டு விட்டு, வீட்டில் இருக்குமாறும், ராணுவ இலக்குகளில் இருந்து தொலைவில் இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த ராணுவ நடவடிக்கையின்போது, வரலாற்று சிறப்புமிக்க தலங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படாது என்றும் அபீ அகமது கூறியிருக்கிறார்.

டீக்ரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போர் பதற்றம் காரணமாக அகதிகளாக முகாம்களில் வாழும் டீக்ரே சமூகத்தினர்

டீக்ரே மக்கள் இயக்கம் என்ன சொல்கிறது?

டீக்ரே பகுதியில் வலுவான பிராந்திய கட்சியின் தலைவரான டெப்ரெட்சியன் கெப்ரெமீக்கெல், "எங்கள் பிராந்தியத்தை நிர்வகித்துக் கொள்வதற்கான உரிமையைப் பாதுகாக்க, டீக்ரே வீரர்கள் இறக்கவும் தயாராக உள்ளார்கள்" என கூறியுள்ளார்.

இந்த போராட்டங்கள், ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தூண்டும், அத்துடன் அந்த பிராந்திய பகுதியில் ஒரு நிலையற்றதன்மைக்குத் தள்ளும் என்று உதவிக் குழுக்கள் அஞ்சுகின்றன.

இந்த நிலையில் ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதிகள், அபீ அகமதைச் சந்திக்கும் நோக்கில் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு வந்துள்ளனர்.

எப்படிப் பார்த்தாலும், அவர்கள் டீக்ரே பகுதிக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல, சமாதான பேச்சுவார்த்தைகள் வரவேற்கப்படவில்லை என்றும், எத்தியோப்பியாவின் விவகாரத்தில் தலையிடுவது சட்டப்படி தவறு எனவும் எத்தியோப்பியா தரப்பில் கூறப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

600 மக்களின் படுகொலைக்குப் பின், டீக்ரே இளைஞர் குழு ஒன்று இருப்பதாக, எத்தியோப்பிய அரசு நியமித்த மனித உரிமைகள் குழு குற்றம்சாட்டி இருக்கிறது.

ஆனால், டீக்ரே மக்கள் இயக்கம் அதை மறுத்து இருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணைக்கும் அந்த இயக்கம் அழைப்பு விடுத்து இருக்கிறது.

டீக்ரே

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, எரிபொருள் நிரப்புவதற்காக சாலையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்கள்

இவர்களுக்கு மத்தியில் என்ன பிரச்சனை?

டீக்ரே மக்கள் இயக்கம் தான், 2018-ல் அபீ அகமது அதிகாரத்துக்கு வரும் முன்பு வரை வலுவான அரசியல் சக்தியாக இருந்தது. இந்த அமைப்பு பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

ஜூன் 2020-ல், கொரோனாவை காரணம் காட்டி, அபீ அகமது தேர்தலை ஒத்திவைத்ததால் பிரச்னை மோசமடைந்து விட்டது.

எத்தியோப்பியாவின் மத்திய அரசு, ஆள்வதற்கான தகுதியை இழந்துவிட்டது என டீக்ரே மக்கள் இயக்கத்தினர் கூறுகிறார்கள்.

கடந்த செப்டம்பர் 2020-ல், திக்ரே மக்கள் இயக்கத்தினர், தாங்களே ஒரு தேர்தலை நடத்தினார்கள். அதை ஆளும் மத்திய அரசு சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டது.

கடந்த 4ஆம் தேதி, எத்தியோப்பிய பிரதமர், டீக்ரே மக்கள் இயக்கத்துக்கு எதிராக தாக்குதலை அறிவித்தார். எத்தியோப்பிய ராணுவத்தின் வடக்கு தலைமையகமான மெக்கெல்லியை இலக்கு வைப்பதாகக் கூறி இந்த தாக்குதலுக்கு அவர் உத்தரவிட்டார்.

டீக்ரே மக்கள் விடுதலை முன்னணி இயக்கத்தினரில் பெரும்பாலானவர்கள், துணை ராணுவப் படையில் இருந்து வந்தவர்கள். இவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். சுமாராக 2,50,000 பேர் அதில் இருக்கிறார்கள். டீக்ரே இயக்கத்தில் படை பலம் அதிகமாக இருப்பதால், இந்த பிரச்னை நீண்ட காலத்துக்கு நீடிக்கலாம் என்றும் இதில் ஏராளமான சேதாரம் ஏற்படலாம் என்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அஞ்சுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :