You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா தொற்று பாதித்து ஒரே வாரத்தில் பணிக்கு திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஒரே வாரத்தில் பணிக்குத் திரும்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
பணிக்கு திரும்பிய அவர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கான எந்த அறிகுறியும் டிரம்புக்கு இல்லை என்றும், கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் எதுவும் இல்லை எனவும் டிரம்பின் மருத்துவர் கான்லே தெரிவித்துள்ளார்.
தான் சிறப்பாக உணர்வதாகவும், இது கடவுள் தனக்கு தந்த ஆசீர்வாதம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ரிஜெனரான் நிறுவனத்தால் தயாரிக்கும் மருந்துகள் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
தனக்கு கொடுக்கப்பட்ட ஆண்டிபாடி கலவை, ஒரு சிகிச்சை முறைக்கும் மேல் குணமாக்கக்கூடிய ஒன்று என அவர் தெரிவித்தார். மேலும் ரிஜெனரான் மருந்து பல நூறு டோஸ்களில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் இன்னும் மத்திய ஒப்புதல் குழுவினரின் ஒப்புதலை பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
"இது மாறுவேடத்தில் வந்த ஒரு ஆசிர்வாதம் - நான் இந்த மருந்து குறித்து கேள்விப்பட்டேன். இது சிறப்பானதாக உள்ளது," என தெரிவித்த அவர், இந்த மருந்து பயன்பாட்டிற்கு வர அவசர ஒப்புதலைப் பெறவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து பேசும்போது அவர் சீனாவை சாடினார். அமெரிக்கர்களிடம் "நீங்கள் இந்த மருந்துக்காக விலைகொடுக்க வேண்டாம். இம்மாதிரியான சூழலுக்கு நீங்கள் பொறுப்பில்லை. இது சீனாவின் தவறு. எனவே சீனா இதற்காக பெரும் விலை கொடுக்க வேண்டும்." என டிரம்ப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அக்டோபர் ஆறாம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
அப்போது டிரம்ப் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடையவில்லை என அவரின் மருத்துவர் தெரிவித்திருந்தார்.
அதிபருக்கு சிகிச்சை தொடரும் என்று தெரிவித்துள்ள அவரது மருத்துவர், அவர் பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை, அவரிடம் இருந்து பிறருக்கு கொரோனா பரவும் நிலை இன்னும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: