கழுத்தை சுற்றி பயணியின் முகத்தை மறைத்த மலைப்பாம்பு - இங்கிலாந்து பேருந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

பட மூலாதாரம், PA Media
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்களுக்கு இருக்கும் ஒரே நடைமுறை வாய்ப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் பல்வேறு நாடுகளின் அரசும் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால்,இங்கிலாந்தின் கிரேட்டர் மேன்செஸ்டரில் பயணி ஒருவர் வித்தியாசமாக மலைப்பாம்பை முக கவசம் போல மூடிக்கொண்டு பயணம் செய்த சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஸ்வின்டொனில் இருந்து மேன்செஸ்டர் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய அந்த பயணி திடீரென தனது மலைப்பாம்பை கழுத்தில் சுற்றிக் கொண்டு முக கவசம் போல அதை அணிந்துள்ளதாகக் கூறினார்.
அவரது செயலைப் பார்த்த சக பெண் பயணி, ஏதோ நகைச்சுவையாக பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பொருளை முகத்தை சுற்றி அந்த நபர் மூடியிருப்பதாகக் கருதியதாகத் தெரிவித்தார்.
ஆனால், பிறகுதான் அந்த நபர் நிஜ பாம்பை முக கவசம் போல சுற்றியிருப்பதைக் கண்டு அனைவரும் பீதியடைந்தனர்.
அந்த பாம்பு பயணியின் கழுத்தில் அமைதியாக இருந்ததாகவும், வேறு பயணிகளுக்கு அது எந்த தொந்தரவையும் தரவில்லை என்றும் பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
இதை விவரித்த அந்த பெண் பயணி, நல்ல வேளையாக யாருடைய கண்ணையும் அந்த பாம்பு கொத்தவில்லை என்றார்.

பட மூலாதாரம், PA Media
இங்கிலாந்தில் பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர், முக கவசம் அணிவது கட்டாயமாகும். அதே சமயம், 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் உடல் சுகவீனம் உள்ளவர்கள் அல்லது முக கவசத்தை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
"முக கவசம் என்பது அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் உறை மட்டுமின்றி பயணிகள் தங்களின் வீடுகளிலேயே முக கவசத்தை தயாரிக்கலாம் அல்லது கைகுட்டை போன்ற பொருளால் முகத்தை மூட பயன்படுத்தலாம்" என்று மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இந்த வரிகளை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு பிற பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த "பாம்பு மாஸ்க்" பயணி, தனது வளர்ப்புப் பாம்பை முக கவசமாக பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்த செயல் அவருக்கு புகழை தேடிக்கொடுத்திருந்தாலும், ஆபத்தான வகையில் பாம்பை பேருந்தில் கொண்டு வந்ததற்காக பலரது எதிர்ப்புக்கும் அந்த பயணி ஆளாகியிருக்கிறார்.
கிரேட்டர் மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள், முக கவசாக பாம்பை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி அந்த பயணியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
பிற செய்திகள்:
- கிழக்கு லடாக் எல்லை பதற்றம்: "தவறுகளை திருத்திக் கொண்டு பின்வாங்குங்கள்" - இந்தியாவை மீண்டும் எச்சரிக்கும் சீனா
- சசிகலா விடுதலை விவகாரம்: அபராதத்தொகை செலுத்த அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு
- தமிழ்நாட்டில் திருடப்பட்ட 15ஆம் நூற்றாண்டு சிலைகள் லண்டனில் மீட்கப்பட்டது எப்படி?
- ஜப்பான் புதிய பிரதமர் யோஷீஹிடே சுகா யார்? - 10 முக்கிய தகவல்கள்
- காஷ்மீர் வரைபடத்தை காட்டி இந்தியாவை கோபப்படுத்திய பாகிஸ்தான் தரப்பு
- இந்தியாவில் கொரோனா தடுப்பூசி 'எப்போது கிடைக்கும் எனக் கூறுவது கடினம்'
- 22,000 ஆண்டுகளுக்கு முந்தைய பனி யுகக் கரடியின் உடல் கண்டெடுப்பு
- 'எல்லையில் சீனா படைகளை குவித்து வருகிறது' - இந்திய பாதுகாப்பு அமைச்சர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












