ஆப்கானிஸ்தானில் குடும்ப வன்முறை: "என் மீது சந்தேகப்பட்ட கணவர், என் மூக்கை அறுத்துவிட்டார்" - ஒரு பெண்ணின் போராட்டம்

பட மூலாதாரம், BBC
- எழுதியவர், சுவாமிநாதன் நடராஜன் மற்றும் நூர் ஷபாக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் உள்ள புகைப்படங்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்)
10 வாரங்களுக்கு பிறகு, சார்காவின் வாழ்க்கையில் நம்பிக்கை திரும்பியுள்ளது.
''எனது மூக்கை திரும்ப பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது'' என மீண்டும் முக உருவம் பெற அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களிடம் சார்கா கூறினார். சார்காவின் மூக்கில் நிறைய தையல்கள் இருப்பதை காணமுடிகிறது.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மிகவும் அதிகம். 87% ஆஃப்கன் பெண்கள் உடல் ரீதியான துன்பங்களுக்கோ அல்லது பாலியல் வல்லுறவுக்கோ ஆளாக்கப்படுகின்றனர், மனதளவிலும் துன்புறுத்தப்படுகிறார்கள் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை அமைப்பு ஒன்று நடத்திய தேசிய கணக்கெடுப்பில் தெரியவந்தது.
கணவனோ அல்லது குடும்பத்தில் உள்ள வேறு ஆண்கள் கூட பெண்கள் மீது ஆசிட் வீசும் கொடுமைகளும் நடக்கின்றன.
சார்காவின் கணவர் ஓர் சிறிய கத்தியை வைத்து சார்காவின் மூக்கை அறுத்துவிட்டார்.
''என் கணவருக்கு எல்லோர் மீதும் சந்தேகம்'' என சார்கா கூறுகிறார். "என் மீது எழும் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அவர் என்னை அடிப்பார், இது தினமும் நடக்கும்."

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

''நான் ஒழுக்கம் இல்லாத பெண் என கூறுவார். அது உண்மை அல்ல என நான் அவரிடம் விளக்கியுள்ளேன்'' என்கிறார் சார்கா.
சார்காவிற்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 28 வயதுடைய சார்காவை அவரது கணவர் தினமும் அடிப்பது வழக்கம் தான். ஆனால் இது அவரின் மூக்கை அறுக்கும் கொடூரமாக மாறும் என சார்கா எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், BBC
''உடல்நலம் தேறி வருகிறார்''
''இன்று நான் என் மூக்கை கண்ணாடியில் பார்த்தபோது, எனது மூக்கு இயல்பு நிலைக்கு திரும்புவதை காணமுடிந்தது'' என பிபிசியிடம் பேசிய சார்கா கூறினார்.
போர் நடக்கும் நாடான ஆஃப்கானிஸ்தானில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ நிபுணர்கள் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். இருப்பினும் சார்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பலன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என மருத்துவர் சால்மாய் கான் அஹ்மட்சாய் கூறுகிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் கணவன், தந்தை, சகோதரர் என ஆண்களால் துன்புறுத்தப்பட்ட பல ஆஃப்கன் பெண்களுக்கு மருத்துவர் சால்மாய் சிகிச்சை அளித்துள்ளார். சார்காவை போல பலருக்கு கொடுமை நடந்துள்ளது என்றும் மருத்துவர் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமியர்களுக்கு முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு முகத்தின் வடிவத்தை மாற்றி அமைப்பது, இஸ்லாமிய சட்டப்படி குற்றமாகும். ஆனால் இவ்வாறான கொடுமைகள் நடக்கும்போது, சில பெண்கள் சட்டத்தை மீறி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

பட மூலாதாரம், Dr Zalmai Khan Ahmadzai
சார்காவின் நீண்ட பயணம்
காபூலில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சார்கா. இவருக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. இவரது கிராமம் தாலிபன் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. சார்காவை சிகிச்சைகாக காபூல் அழைத்து வர, உள்ளூர் அரசியல் தலைவர்கள் தாலிபன் குழுவினரிடம் பலமுறை கோரிக்கை வைத்து அனுமதி பெற்றனர்.
சார்காவை காபூலில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது, மருத்துவர் சால்மாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, மருத்துவரின் மனைவி கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். ஆனால் உயிரிழந்த மனைவியை ஜலாலாபாத்தில் புதைத்துவிட்டு, சார்காவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர் சால்மாய் மருத்துவமனைக்கு சென்றார்.

பட மூலாதாரம், Dr Zalmai Khan Ahmadzai
''சார்கா என்னிடம் வந்தபோது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. மூக்கில் தொற்று ஏற்பட்டிருந்தது'' என்கிறார் மருத்துவர் சால்மாய். ஜூன் 15ம் தேதி அன்று தொற்று குணமடைய சார்காவிற்கு மருந்துகள் அளிக்கப்பட்டது. மேலும் அவர் உடல்நிலையில் அறுவை சிகிச்சையை எதிர்கொள்ளும் சக்தி இல்லாததால் அதற்கு தேவையான மருந்துகளும் கொடுக்கப்பட்டது. பிறகு 5 வாரங்கள் முடிந்து சார்கா மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகிக்கும் கணவன்
சார்கா தனது உடல்நலம் குணமடைந்தது குறித்து பிபிசியிடம் பகிர்ந்து கொண்டதை போல தனக்கு நடந்த குடும்ப வன்முறை குறித்தும் பகிர்ந்தார். ''எனக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டது, அப்போது எனக்கு திருமணம் குறித்தும் வாழ்க்கை குறித்தும் எதுவுமே தெரியாது. திருமணத்தின் போது எனது வயது என்ன என்பதும் எனக்கு தெரியாது. யாரும் என்னிடம் என் விருப்பம் குறித்து கேட்கவில்லை'' என்கிறார்.

பட மூலாதாரம், Dr Zalmai Khan Ahmadzai
பணத்திற்கு பதில் பெண்
தன் கணவரின் நான்கு சகோதரிகளை திருமணம் செய்த சார்காவின் உறவினர் ஒருவர், பதிலுக்கு சார்கா திருமணம் செய்து வைத்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு தான் சார்காவை ஏமாற்றிய உறவினர் குறித்து அவருக்கு தெரியவந்தது.
''என் கணவரின் 4 சகோதரிகளை திருமணம் செய்த என் மாமாவால் அதற்கான பணத்தை வழங்கமுடியவில்லை. அதற்கு பதிலாக என்னை கொடுத்துள்ளார்'' என்கிறார் சார்கா.
ஆஃப்கானிஸ்தானில் உள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்ணை திருமணம் செய்யும் நபரிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்வார்கள். இது சட்டபடியான வழக்கமாகவே பின்பற்றப்படுகிறது.
தனது கணவர், அவரின் சகோதரிகளையும் அடித்து துன்புறுத்துவது தெரியவந்தது என சார்கா கூறுகிறார். ஆனால், தன் கணவர் எந்த போதை பழக்கத்திற்கும் அடிமை இல்லை, அவருக்கு மனநல பாதிப்பும் எதுவும் இல்லை என சார்கா கூறுகிறார்.

வாழ்க்கை குறித்த பயம்
''எனக்கு உன்னை பிடிக்கவில்லை நான் வேறொரு திருமணம் செய்ய போகிறேன் என என் கணவர் என்னிடம் கூறினார். நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன்'' என்கிறார் சார்கா. ஆனால் அவரது கணவரால் பெண் வீட்டாருக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தமுடியாத காரணத்தால், அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் கணவர் தினமும் அடிப்பதால், சார்கா, கணவரிடம் சொல்லிக்கொள்ளாமல் தாய் தந்தையிடம் சென்று தஞ்சம் அடைந்துள்ளார். சார்காவை அழைத்து செல்ல வந்த அவரின் கணவர் கையில் கத்தியுடன் சென்றுள்ளார். முதலில் சார்காவை திருப்பி அனுப்ப அவரது தந்தை ஒப்பு கொள்ளவில்லை, ஆனால் சார்காவை பாதுகாப்பதாக பார்த்துக்கொள்வதாக அவரது கணவர் வாக்கு அளித்து அவரை மீண்டும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் சார்கா மீண்டும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அவ்வப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சார்காவை காப்பற்றியுள்ளனர்.

''தோட்டத்தில் வைத்து மூக்கை அறுத்துவிட்டார்''
''நான் அவரிடம் சொல்லாமல், என் தாய் தந்தை வீட்டிற்கு சென்றது அவருக்கு அவமானமாகிவிட்டது. என்னை ஒரு தோட்டத்திற்கு அழைத்து சென்று, ஏன் என்னிடம் சொல்லாமல் சென்றாய் என கேட்டு அடித்தார். அவரிடம் துப்பாக்கியும் இருந்தது. ஆனால் அவரின் சட்டை பையில் ஒரு கத்தியை எடுத்து என் மூக்கை அறுத்தார். இரத்தம் வழிந்தது. ஆனால் அவர் என்னை அங்கேயே தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்'' என நடந்தவற்றை சார்கா விவரித்தார்.
இதன் பிறகு சார்காவின் தந்தை மற்றும் உறவினர்கள், அவரின் கணவரை பழிவாங்க அவரை தேடி அலைந்துள்ளனர். ஆனால் சார்காவின் உறவினர்கள் அவரை தாக்கும் முன்பு, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.
சார்காவிற்கு உள்ளூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் எந்த பயனும் இல்லை. ''அறுவை சிகிச்சை மூலம் எந்த வடிவம் கொடுத்தாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு மூக்கு வேண்டும்'' என்றார் சார்கா.
சார்காவின் மூக்கு சிதைக்கப்பட்ட புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது, அதை பார்த்த மருத்துவர் சால்மாய் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

மருத்துவர் சால்மாய், சார்காவிற்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அவரின் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதேபோல் அறுவை சிகிச்சையும் முடிந்தது. தற்போது சார்காவின் மூக்கில் நல்ல இரத்த ஓட்டம் இருப்பதாகவும் நரம்புகளும் செயல்பட தொடங்கின என்றும் மருத்துவர் கூறுகிறார். இந்த அறுவை சிகிச்சையை வேறு யாருக்காவது மேற்கொண்டிருந்தால், 2,000 டாலர்கள் (சுமார் 1.5 லட்சம் ரூபாய்) வசூலித்திருப்பேன் என மருத்துவர் சால்மாய் கூறினார். இதன் பிறகு சார்காவிற்கு தேவையான 500 டாலர்கள் மதிப்புள்ள மருந்தையும் மருத்துவர் சால்மாய் இலவசமாக வழங்கியுள்ளார். ஆனால் சார்கா தன்னம்பிக்கையை திரும்ப பெரும் வகையில் அவரால் மனநல ஆலோசனை மட்டும் வழங்க முடியவில்லை.
மகனுக்காக காத்திருக்கும் சார்கா
தற்போது வரை தனது கணவன் குடும்பத்தினரிடம் இருக்கும் தனது மகன் குறித்துதான் சார்கா கவலை கொள்கிறார்.
''எனது மகன் மாஷ்ஹுக்கை மூன்று மாதங்களாக நான் பார்க்கவில்லை. என் மகன் என்னிடம் வரவேண்டும்'' என்கிறார் சார்கா.
ஆனால் நடந்தவற்றை தன் மகன் பார்க்கவில்லை என்பது மகிழ்ச்சி அளிப்பதாக சார்கா கூறுகிறார். சார்காவிடம் வருமானம் எதுவும் இல்லாததால், தன் மகன் தனது கணவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் வளர வேண்டும் என உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சார்கா தனது கணவரிடம் திரும்பி செல்ல விரும்பவில்லை. அத்துடன் விவாகரத்து பெறவும் விரும்பவில்லை. ''விவாகரத்து பெற்றால், என் மகனிடம் இருந்து முழுமையாக பிரிய நேரிடும். அதுவே கவலையாக உள்ளது'' என்கிறார்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












