கொரோனா வைரஸ்: கோவிட் 19 போர் - எந்த நாடுகள் வென்றன, எவை தோல்வியுற்றன? விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டேவிட் சுக்மான்,
- பதவி, அறிவியல் செய்தியாளர்
கொரோனா பெருந்தொற்று உலகளவில் 1 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் ஆபத்தான நிலையை எட்டி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேற்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பல நாடுகளில் வைரஸ் பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், உலகின் சில நாடுகள் இப்போது இந்த நோய் மிக வேகமாகப் பரவுவதைக் காண முடிகிறது.
கொரோனா தொற்று முதன் முதலில் 10 லட்சம் பேருக்குப் பரவ மூன்று மாதங்கள் ஆனது. ஆனால், தற்போது வெறும் 8 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பரவியுள்ளது.
எங்குத் தொற்று வேகமாகப் பரவுகிறது?
அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகள் தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே உலகிலே அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ள அமெரிக்காவில் தற்போது இன்னும் தொற்று அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு நாளும் 40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் அரிசோனா, டெக்சாஸ், புளோரிடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம் இரண்டாம் அலை தொற்று அல்ல. பொது முடக்கக் கட்டுப்பாடுகளை இந்த மாகாண அரசுகள் மிக விரைவிலே தளர்த்தியதால் ஏற்பட்ட விளைவு மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
10 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகளுடன் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பிரேசிலிலும், தொற்று அபாயகரமாக அதிகரித்து வருகிறது.
சாவோ பாலோ மற்றும் ரியோ டி ஜெனிரோ போன்ற பெரிய நகரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிரேசிலில் உள்ள மற்ற பகுதிகளில் மிகக்குறைவாகவே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் இங்கு உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் 15,000 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் மிகக்குறைவான அளவிலே பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அங்கெல்லாம் அதிக பரிசோதனைகள் செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வளர்த்து வரும் நாடுகளில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஏழை மக்களின் நோய்
கொரோனா வைரஸ்,’’ஏழை மக்களின் நோயாக மாறிவிட்டது’’ என கொரோனா தடுப்புக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி டேவிட் நாப்ரோ கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஒரு குடும்பமே ஒரு சிறிய அறைக்குள் வசிக்கும்போது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது சாத்தியமற்றது. போதிய தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் வசிக்கும் மக்கள் அடிக்கடி கைகழுவுவது கஷ்டம். தினக்கூலி தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகச் சாலைகளிலும், மார்க்கெட்களிலும் அதிகமான நபர்களைச் சந்திக்க வேண்டியதும் அவசியம்.
அமேசான் மலைக்காடு போன்ற தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதிகள் மிகக்குறைவாகவே இருக்கும்.
வளர்ந்து வரும் ஏழை நாடுகளில் நோய்த் தொற்றின் விகிதமும் அதிகமாக உள்ளது. மெக்ஸிக்கோவில் சோதனை செய்யப்படும் நபர்களில், பாதி பேருக்குத் தொற்று உறுதியாகிறது.
கொரோனா ஹாட் ஸ்பாட்களாக இருந்த நியூயார்க், வடக்கு இத்தாலியை விட இந்த நாடுகளில் தொற்று விகிதம் அதிகமாக உள்ளது.
வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஏற்கனவே பலவீனமாக உள்ள நிலையில், பொது முடக்கத்தை நீட்டிப்பது இந்த நாடுகளுக்குப் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

அரசியல் காரணம்
கொரோனா தொற்று இந்த நாடுகளில் எல்லாம் வேகமாகப் பரவ மேலே கூறப்பட்டுள்ளவை மட்டும் காரணங்கள் அல்ல.
பல அரசியல் தலைவர்கள், மருத்துவ நிபுணர்கள் கூறிய அறிவுறுத்தல்களை ஏற்காமல் தங்களது சொந்த முடிவுகளை எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
தான்சானிய அதிபர் தங்களது நாடு கொரோனாவை வீழ்த்திவிட்டது என அறிவித்ததுடன், மே மாதம் முதல் கொரோனா தொற்று குறித்த தரவுகளை வெளியிடுவதையும் நிறுத்தினர். அந்த நாட்டின் இன்னும் கொரோனா அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குச் சீனாவையும், உலக சுகாதார நிறுவனத்தையும் குறை கூறுவதிலே அமெரிக்க அதிபர் டிரம்ப் குறியாக இருந்தார். பொது முடக்கத்துக்கு எதிராக இருந்ததுடன், அமெரிக்கப் பொருளாதாரத்தை விரைவாக மீண்டும் திறக்க வேண்டும் எனவும் கூறினார்.
அமெரிக்காவில் பொது முடக்கத்தை முதலில் தளர்த்திய மாகாணங்களில் ஒன்றான டெக்சாஸ் மாகாணத்தின் ஆளுநர் கிரேக் அபோட்டை டிரம்ப் பாராட்டினார். டெக்சாஸ் ஆளுநர் எடுத்த அவசர முடிவால், தற்போது அங்கு தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது.
அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என ஏப்ரல் மாத தொட்டத்திலே அமெரிக்க அரசு அறிவுறுத்தினாலும், டிரம்ப் பொது இடங்களில் மாஸ்க் அணியாமலே தோன்றினார்.
இதே போல பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவும், மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்குச் சென்றார். ஆனால், அவர் மாஸ்க் அணிய வேண்டும் என தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஒரு சாதாரண சளியைப் போன்றதுதான் என கூறி வந்த அவர், பொருளாதாரம் பாதிக்கப்படும் என கூறி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதையும் அவர் தடுக்க முயன்றார்.
’’தற்போது மிகப்பெரிய ஆபத்தாக இருப்பது வைரஸ் மட்டுமல்ல, உலகளாவிய ஒற்றுமை மற்றும் உலகளாவிய தலைமை இல்லாததும் பெரிய ஆபத்துதான்’’ என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

எங்குத் தொற்று கட்டுக்குள் உள்ளது?
தீவு நாடான நியூசிலாந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு கொரோனா வைரஸை வீழ்த்தியது. அங்கு கடந்த 24 நாட்களாக புதிய தொற்று எதுவும் ஏற்படவில்லை.
தென் கொரியா தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணித்தது. அதிகளவில் சோதனைகளைச் செய்தது. இதன் மூலம் தொற்று எண்ணிக்கையைக் குறைத்தது.

பட மூலாதாரம், Getty Images
தற்போது தென் கொரியாவில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இப்போதும் தொற்று எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
மூன்று நாட்களாகத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 30ஐ தாண்டினால், சமூக இடைவெளி நடவடிக்கைகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என தென் கொரிய தலைநகர் சோல் மேயர் தெரிவித்துள்ளார்.
வியட்நாமில் ஒரு கொரோனா மரணம் கூட ஏற்படவில்லை. விரைவான பொது முடக்கம், கடுமையான எல்லைக்கட்டுப்பாடு போன்றவற்றால் இந்த நாடு தொற்றைக் கட்டுப்படுத்தியது.
ஆப்ரிக்காவில் அடுத்து என்ன ஆகும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. பலரும் அச்சப்பட்டதை போல அல்லாமல், அங்கு தற்போது வரை தொற்று எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது.
அதிகளவில் பரிசோதனைகளைச் செய்யாமல் இருப்பது தொற்று பரவலை அதிகரிக்கும் என்ற முதல் பாடத்தைப் பல நாடுகள் உணர்த்தியுள்ளன.
இரண்டாவது, இளம் வயதினர் நோய் தொற்றுக்கு உள்ளாவது சற்று குறைவாகவே உள்ளது.
உலகத்துடன் அதிக தொடர்பில் இல்லாமல் தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள், கடைசியாகவே பெருந்தொற்றால் பாதிக்கப்படுவார்கள் என்பது மூன்றாவது பாடம்.
கொரோனா வைரஸை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகள், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












