You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன விமானங்கள் அமெரிக்காவில் தரையிறங்க தடை?
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே தொடர்ந்து நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில் வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிப்பதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டெழ தொடங்கியபோதும், அமெரிக்க விமானங்களை தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காத சீனாவை தண்டிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
சமீபத்திய வாரங்களாக, கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஹாங்காங் விவகாரம் உள்ளிட்டவற்றில் இவ்விரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த சூழ்நிலையில், இப்போது விமானப் போக்குவரத்து அடுத்த மோதலாக உருவெடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இடைவிடாது, குறைந்த எண்ணிக்கையில் சீனா - அமெரிக்கா இடையே பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் ஹைனன் ஏர்லைன்ஸ் உள்ளிட்டவற்றின் விமானங்கள் ஜூன் 16ஆம் தேதி முதல் அமெரிக்காவில் தரையிறங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டின் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
எனினும், இந்த உத்தரவானது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைக்கு வரும். வர்த்தகம், கொரோனா வைரஸ் விவகாரம், ஹாங்காங் பிரச்சனை உள்ளிட்டவற்றில் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வரும் டிரம்ப் இதுகுறித்து விரைவில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அரசின் இந்த முடிவு குறித்து வாஷிங்டனிலுள்ள சீன தூதரகம் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அனைத்து விமான சேவை நிறுவனங்களுக்கும் பொருத்தும் என்று முன்னதாக சீன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: