கிரிப்டோகரன்சி பணப்பரிமாற்றம்: திருடிய பணத்தை திருப்பி கொடுத்த ஹேக்கர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
கிரிப்டோகரன்சிகளாக பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்படும் இணையதளம் ஒன்றில் இருந்து சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை இணையவழியில் திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.
திருடப்பட்ட பணம் பெருமளவில் திரும்ப டிஃபோர்ஸ் நிறுவனக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டாலும், திருடப்பட்ட வகை கிரிப்டோகரன்சிகளாக அல்லாமல் வெவ்வேறு வகை கிரிப்டோ கரன்சிகள் மூலம் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது.
அந்த நபர் யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சீனாவிலிருந்து இயங்கும் டிஃபோர்ஸ் எனும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளத்தில் திருடப்பட்ட பணம் மீண்டும் வந்து சேர்ந்துள்ளது.
பணத்தை திருடியவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டதால் அவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர் என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் மிண்டோ யாங் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ்: உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள்

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் இறைச்சி சந்தைகளில் மீண்டும் விற்பனை துவங்கும்போது சில பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இறைச்சி சந்தைகளின் சுகாதார தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் உலக அளவில் வனவிலங்கு இறைச்சி விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுகளிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப புள்ளியாக சீனாவில் உள்ள வுஹான் வன விலங்குகள் இறைச்சி சந்தையொன்று தொடர்புபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாயகம் அழைத்து வரப்பட்ட மலேசியர்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக உலகம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இன்னும் 22 நாடுகளில் 511 மலேசிய மக்கள் சிக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அவர்களை அழைத்து வர வெளியுறவு அமைச்சு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
"தாயகம் திரும்பியுள்ள மலேசியர்களில் பெரும்பாலானோர் சொந்தச் செலவிலோ அல்லது தனியார் ஏற்பாட்டிலோ வந்து சேர்ந்துள்ளனர்.

பால்கர் சாதுக்கள் கொலை: வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் நகர் அருகேயுள்ள கிட்சிஞ்சலே கிராமத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று துறவிகள் அடித்துக் கொல்லப்பட்ட காணொளி வைரலானது. அதே நேரத்தில், இந்த சம்பவத்திற்கு அரசியல் வண்ணத்தை பூசும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வியாழக்கிழமையன்று இரவு, மூன்று பேரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. கொல்லப்பட்டவர்கள் 70 வயதான மகாராஜ் கல்பவ்ரிக்ஷ்கிரி, 35 வயதான சுஷில் கிரி மகாராஜ் என்ற இரண்டு சாதுக்கள் மற்றும் அவர்களது வாகன ஓட்டுநரான நீலேஷ் தெல்கானே என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் 45 விநாடி வீடியோ பகிரப்பட்டு வைரலாகிறது. "மார் ஷோயிப் மார்" என்று கத்திக் கொண்டு வெறித்தனமான கூட்டம் கொலைவெறி தாக்குதல் நடத்துவதாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிரப்படும் இந்த வீடியோவுடன் எழுதப்பட்டுள்ளது.
இது உண்மையா என்பதை தெரிந்துக் கொள்வதற்காக, இந்த வீடியோவை நாங்கள் கவனமாக ஆராய்ந்தோம். இந்த வீடியோவின் 43 வது வினாடியில், சாதுக்களைக் கொன்ற கூட்டத்தினரிடம் "ஓ போதும், போதும்" என்று ஒருவர் கூச்சலிடுவதை கேட்க முடிகிறது. ஆனால், சமூக ஊடகங்களில் சிலர் இந்த சம்பவத்திற்கு 'அடி, ஷோயிப் அடி" என்று கூறி பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க அவசர சட்டம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் இதுவரை 20,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 3959 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 652 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்தியாவை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் முயற்சித்து வருவதாகவும், அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
விரிவாக படிக்க:20 ஆயிரத்தை கடந்த எண்ணிக்கை, மருத்துவ பணியாளர்களை பாதுகாக்க அவசர சட்டம் - அண்மைய இந்திய தகவல்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












