கொரோனா வைரஸ்: உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ்
    • பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர்

உலக அளவில் இறைச்சி சந்தைகளில் மீண்டும் விற்பனை துவங்கும்போது சில பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இறைச்சி சந்தைகளின் சுகாதார தரமும் மேம்படுத்தப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் உலக அளவில் வனவிலங்கு இறைச்சி விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் எனவும் அரசுகளிடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப புள்ளியாக சீனாவில் உள்ள வுஹான் வன விலங்குகள் இறைச்சி சந்தையொன்று தொடர்புபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் உலகின் பல இடங்களில், இறைச்சி சந்தைகள் பரவலாக உள்ளன. இங்கு பழங்கள், காய்கறிகள், மீன், கோழி வகைகள், சமயத்தில் வன விலங்குகளும் இறைச்சியாக விற்கப்படுகின்றன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

உலக சுகாதார அமைப்பு ஐ.நா வுடன் சேர்ந்து உணவு சந்தைகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டமைத்து வருகின்றது. மேலும் இறைச்சி சந்தைகள் மலிவு விலை உணவுக்கான முக்கிய ஆதாரமாகவும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆனால் பல இறைச்சி சந்தைகள் சுகாதாரம் இன்றி இயங்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் குறிப்பிட்டுள்ளார். எனவே மீண்டும் இறைச்சி சந்தைகள் இயங்கும்போது அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் அதன் சுகாதாரத்தையும், உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வன விலங்குகளின் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சமீபமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 70% வைரஸ்கள் விலங்குகளில் இருந்தே உருவானதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் நோய் குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெட்ரோஸ் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

கொரோனா வைரஸ் தொற்று பரவிய பிறகு, வன விலங்குகள் சார்ந்த அமைப்புகள் சில கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் தொடர்பான வர்த்தகத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறைச்சிக்காக ஏற்றுமதி செய்யப்படும் வனவிலங்கு வர்த்தகத்திற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரத்திற்கு மட்டுமல்லாமல் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடனும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பார்ன் ஃபிரி என்ற தனியார் அமைப்பின் தலைவர் மார்க் ஜோன்ஸ் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கூறுகையில், ''வனவிலங்கு ஏற்றுமதியினால் பல வன விலங்கு இனங்கள் அழியும் நிலைக்கு சென்றுவிட்டன. எனவே இயற்கைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த வன விலங்கு வர்த்தகத்திற்கு தடை கோர வேண்டும்'' என்கிறார். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திடம் வலியுறுத்தியும் உள்ளார்.

ஆனால், வனவிலங்கு வர்த்தகத்தை முடக்குவதால் பல எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

வனவிலங்கு வர்த்தகத்திற்கு தடை விதிப்பது நாமே நமக்கு எதிராக விளைவிக்கும் தீமை என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேன் மற்றும் எமி ஹெய்ன்ஸ்லி தெரிவித்துள்ளனர்.

''நாம் செய்யவேண்டியது எல்லாம் வனவிலங்கு வர்த்தகத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமே. குறிப்பாக, இன்னொரு முறை விலங்குகளில் இருந்து மனிதனுக்கு வைரஸ் தொற்று எதுவும் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஏன் இறைச்சி கூடங்கள் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ள இடமாக கருதப்படுகிறது ?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்பகட்டத்தில், அந்த வைரஸ் வுஹானின் கடல் உணவு விற்கும் சந்தையில் இருந்தே பரவத்துவங்கியது என பலரால் நம்பப்பட்டது.

உண்மையில் வனவிலங்கு இறைச்சி குறித்து இப்போது விவாதிக்கப்படுவதன் காரணமும் வுஹான் சந்தைகள் தான். அங்கு அனுமதி இன்றி வன விலங்குகள், குறிப்பாக பாம்பு, மான் போன்ற விலங்குகள் இறைச்சிக்காக விற்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நிலவியது. இதுவே உலக சுகாதார நிறுவனத்தின் இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணம்.

மேலும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு முன்பு இந்த வைரஸ் வவ்வால் இறைச்சியில் இருந்து உருவானது என்ற விவாதமும் இருந்தது குறிப்பிடத்தக்கது .

கொரோனா வைரஸ்

"நம் உணவு தேவைகளுக்காக வன விலங்குகளை கொன்று உணவாக உட்கொண்டால், ஒரு நாள் அந்த விலங்குகள் நம்மை வந்து கொன்று தின்னும் என்றே கூறவேண்டும். வனவிலங்கு இறைச்சிக்கூடங்கள் நிச்சயம் உலகம் முழுவதும் பரவும் உயிர் கொல்லி வைரஸ்களை உருவாக்க வாய்ப்புள்ளது" என்கிறார் லண்டனை சேர்ந்த பேராசிரியர் ஆன்ட்ரூ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: