கொரோனா வைரஸால் பெட்ரோலிய எண்ணெய் விலை வீழ்ச்சி: வாங்கவே பணம் கொடுக்கும் அமெரிக்கா மற்றும் பிற செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக எதிர்மறையாக (நெகடிவ்) மாறி இருக்கிறது அமெரிக்க பெட்ரோலிய எண்ணெய் விலை.

அதாவது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்குவதற்கு பதிலாக , எண்ணெயை எடுத்து செல்ல வாடிக்கையாளர்களுக்கு பணம் தருகிறார்கள் அமெரிக்காவில் உள்ள கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள்.

கொரோனா காரணமாக உலகமே முடக்கப்பட்டுள்ளதால் நுகர்வானது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக எண்ணெய்க்கான தேவையும் குறைந்திருக்கிறது.

எண்ணெயை யாரும் வாங்காததால் அவை சேமித்து வைக்க அடுத்த மாதம் முதல் இடப் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் பணத்தையும் கொடுத்து எண்ணெய்யையும் தருகிறது அமெரிக்கா.

எரிசக்தி துறை பங்கு வர்த்தக நிபுணர் ஸ்டீவார்ட் கிளிக்மேன், "எண்ணெய் நிறுவனங்களின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக இல்லை,' என்கிறார்.

அமெரிக்க எண்ணெய் விலை வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் வகை கச்சா எண்ணெயின் விலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதன் விலை பேரல் ஒன்றுக்கு மைனஸ் 37.63 டாலராக உள்ளது.

எதிர்காலத்தில் இருக்கும் விலைகளின் அடிப்படையில் கச்சா எண்ணெய் இப்போது வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

வெஸ்ட் டெக்சாஸ் இன்டெர்மீடியேட் வகை கச்சா எண்ணெயின் ஜூன் மாத விலையும் பேரல் ஒன்றுக்கு 20 டாலருக்கு அதிகமாக உள்ளது.

ஆனால், முடக்கநிலை நீடித்தால் ஜூன் மாத எண்ணெய் விலையும் குறையலாம் என்கிறார் கிளிக்மேன்.

இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பின் (ஒபெக்) உறுப்பு நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை 10% அளவுக்கு குறைக்க ஒப்புக்கொண்டன. இதுதான் வரலாற்றிலேயே உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

நாட்டின் தேசிய கையிருப்புக்காக எண்ணெய் வாங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

எனினும் அமெரிக்க எண்ணெய் கையிருப்பின் முக்கிய சேமிப்பு கூடமான குஷிங்கில் அதிகமாக இருக்கும் 50% உள்பட அமெரிக்காவின் முக்கிய சேமிப்பு கிடங்குகளில் எண்ணெய் இருப்பு கூடிக்கொண்டே போவதாக ஏ.என்.சீ வங்கி கூறுகிறது.

அதனால் சேமிக்க இடம் குறைந்து வருகிறது.

"இறந்த உடலிலிருந்து கொரோனா தொற்று பரவாது''

தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு இன்று கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1520ஐத் தொட்டுள்ளது. 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை திங்கட்கிழமை மாலை வெளியிட்ட தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 46 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1520 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 457 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பையில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கோவிட்-19 தொற்று

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 171 பத்திரிகையாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ்: வதந்திகளும், உண்மைகளும் - பிபிசி ஆய்வு

கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் உலாவும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள போலியான மற்றும் தவறாக வழிகாட்டும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிபிசி குழுக்கள் ஆய்வு செய்தன.

பிபிசி மானிட்டரிங் பிரிவு மூலம் இந்த வாரத்தில் அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்களை ஜேக் குட்மேன் முன்வைக்கிறார். ட்ரெண்டிங் மற்றும் உண்மைநிலை அறிதல் பற்றி விளக்குகிறார்.

உருளைக் கிழங்கிற்கு வந்த லேட் பிலைட் நோய்

2020ம் ஆண்டில் மனித இனத்திற்கு பெரிய சவாலாக கொரோனா வைரஸ் இருப்பது போலவே, 1961ல் உதகையில் விளைந்த உருளைக் கிழங்குகள் ’லேட் பிலைட்’ என்ற பூஞ்சை தொற்று நோய் தாக்கத்திற்கு ஆளானபோது, ‘நீலகிரி உருளை’ என்ற ரகமே அழியும் நிலை ஏற்பட்டு ஓர் அசாதாரண சூழலை உண்டாக்கியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: