அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், ZEZICO GUAJAJARA
அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஆசிரியரான இவர், அமேசான் காடுகளில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதை எதிர்த்து போராடும் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் குழுவின் ஆதரவாளரும் ஆவார்.
எண்ணற்ற வழிகளில் சுரண்டப்பட்டு வரும் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போராடி வருபவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதங்களில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காகவும், அங்கு வாழ்ந்து தொல்குடிகளின் நிலவுரிமைக்காக போராடியதற்காகவும் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் ஜெசிகோ.
குவாஜஜராஸ் என்பது 20,000 மக்களைக் கொண்ட பிரேசிலின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். 2012ஆம் ஆண்டில், அரேரிபோயா பிராந்தியத்தை பாதுகாக்க அவர்கள் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் அமைப்பை தொடங்கினர்.
ஜெசிகோவை கொன்றது யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை 93 வயது கேரள தம்பதி வென்றது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
ஒரே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வெவ்வேறு அறையில் இருந்த இருவரும் மருத்துவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று அந்த தம்பதியினருக்கு எரிச்சல்.
ஒரு வழியாக கண்ணாடியால் பிரிக்கப்பட்ட ஒரே அறையை மருத்துவர்கள் அவர்களுக்கு வழங்கினர். அதில் கணவருக்கு 93 வயது. அவரது மனைவிக்கு 88 வயது. இருவரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வந்தவர்கள்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் தொற்றை 93 வயது கேரள தம்பதி வென்றது எப்படி?

கொரோனா வைரஸ் நெருக்கடி: மோதி அரசு பதிலளிக்க வேண்டிய கேள்விகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அண்மையில் 'மான் கி பாத்' நிகழ்ச்சியில், பேசிய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டில் முடக்கநிலை அமல்படுத்தப்பட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மன்னிப்பு கோரினார்.
"நாட்டு மக்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நினைக்கிறேன்" என்று பிரதமர் மோதி அப்போது குறிப்பிட்டார்.

கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எப்படி செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், LIIA GALIMZIANOVA / GETTY IMAGES
உலகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டுமென்றும், எவர் உடலையும் அடக்கம் செய்ய கூடாது என்றும், மும்பை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை எப்படி நடத்த வேண்டும், அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலிலிருந்து வைரஸ் பரவுமா, அல்லது உடல் தகனம் செய்யப்படும்போது வைரஸ் முற்றிலும் அழிந்துவிடுமா, இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இந்த கட்டுரை அலசுகிறது.
விரிவாக படிக்க: கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எப்படி செய்ய வேண்டும்?

வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கோவிட்-19 அறிகுறியா?

பட மூலாதாரம், Getty Images
வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று.
தங்களுக்கு கோவிட் -19இன் அறிகுறிகள் இருக்கலாம் என்று நினைத்து, அறிகுறிகளை ஒரு செயலியில் பதிவிட்ட நான்கு இலட்சம் மக்களின் தகவல்களை லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரி குழு ஒன்று ஆய்வு செய்தது.
விரிவாக படிக்க: வாசனைகளை முகர முடியாததும், சுவை இழப்பதும் கொரோனா அறிகுறியா?













