You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லண்டனில் "பயங்கரவாதம் தொடர்புடைய" சம்பவம் - பதற்றம்
லண்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த "பயங்கரவாதம் தொடர்பான" சம்பவத்தில் ஒரு நபர் ஆயுதமேந்திய அதிகாரிகளால் சுடப்பட்டதாக அந்நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லண்டனிலுள்ள ஸ்ட்ரியாத்தம் ஹை ரோடு எனும் பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு முன்னர், ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாக்குதலாளியால் கத்தியால் குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி, மதியம் சுமார் 2 மணியளவில், மூன்று முறை துப்பாக்கிச்சூடு சத்தங்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். இந்த கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்த உடனேயே, சம்பவ இடத்தில் அவசர சேவைகளை சேர்ந்த அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.
நிலைமை கட்டுக்குள் வரும்வரை இந்த பகுதிக்குள் நுழைவதை தவிர்க்குமாறு லண்டன் நகர காவல்துறையினர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
"ஸ்ட்ரியாத்தம் சாலையில் ஏதோ மிகப் பெரிய சம்பவம் நடக்கிறது. ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகள் மூடப்பட்டுள்ளன" என்று ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
காவல்துறையினர் குவிப்பு
" ஆயுதமேந்திய போலீசார் ஸ்ட்ரியாத்தம் சாலை முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பகுதி முழுவதும் தற்போது ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும், பொது மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை" என்று சம்பவ இடத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் பௌல் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: