You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் சார்ஸ் தாக்குதலை விஞ்சியது - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? 10 முக்கிய தகவல்கள்
இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 258 பேர் இறந்துள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள ஹுபே மாகாணத்திலிருந்து 324 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதில் 211 மாணவர்களும் அடங்குவர். இவர்களுக்காக, ஹரியாணா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது.
இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லை காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
சரி. கொரோனோ வைரஸ் குறித்து கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.
- சீனாவுக்கு வெளியே 22 நாடுகளில் இந்த வைரஸ் நூற்றுக்கும் அதிகமான மக்களை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- 2003ஆம் ஆண்டு உலகெங்கும் பரவிய சார்ஸை இந்த கொரோனா வைரஸ் விஞ்சி உள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக சார்ஸால் 24க்கும் அதிகமான நாடுகளில் 774 பேர் பலியானார்கள். இப்போது வரை கொரோனோ வைரஸால் 258 பேர் சீனாவில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
- 2003ஆம் ஆண்டு எட்டு மாதம் சர்வதேச அளவில் பல நாடுகளை வாட்டிவதைத்த சார்ஸ் 8,100 பேரை தாக்கியது. இப்போது வரை கொரோனோ வைரஸ் 10,000 பேரை தாக்கி உள்ளது.
- கடந்த இரண்டு வாரங்களில் சீனா சென்றவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்துள்ளது அந்நாடு. அதுமட்டுமல்லாமல் பொது சுகாதார அவசர நிலையையும் பிரகடனப்படுத்தி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கடந்த வியாழக்கிழமை பொது சுகாதார அவசரநிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார நிறுவனம்.
- சீனாவில் இந்த வைரஸுக்கு பலியான 258 பேரில், 249 பேர் ஹூபே பகுதியை சேர்ந்தவர்கள்.
- சுவீடனில் 20 வயதுடையை பெண் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரத்திற்கு சென்றுவிட்டு ஜனவரி 24 நாடு திரும்பி இருக்கிறார். இந்த வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி வுஹான் ஆகும்.
- இந்த வைரஸ் தொற்று தாக்கிய இருவர் ரஷ்யாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
- சீனாவிலிருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டுக்குள் வர தடைவிதித்துள்ளது சிங்கப்பூர். மங்கோலியாவும் மார்ச் 2 ஆம் தேதி வரை சீனர்கள் தங்கள் நாட்டுக்குள் வர தடைவிதித்துள்ளது.
- சீனாவுடனான 4,300 கிலோமீட்டர் நீளம் கொண்ட தங்கள் எல்லையை மூடி உள்ளது ரஷ்யா.
- கேரள மாநிலத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், "சீனாவில் இருந்து வரும் அனைவரையும் நோயாளியாகப் பார்க்க வேண்டாம்" என சீனாவிலிருந்து புதுக்கோட்டைக்குத் திரும்பிய மருத்துவ மாணவர் அமிஸ் பிரியன் கூறி உள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: