You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்ப்பிணிப் பெண் காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கடித்து குதறிய நாய்கள்
பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள வில்லெர்ஸ் - கோடோரேட் எனும் நகரின் அருகே காட்டுக்குள் வேட்டையாடச் சென்ற கர்ப்பிணி பெண்ணை வேட்டை நாய்கள் கடித்துக் குதறியதால் அவர் உயிரிழந்தார்.
அந்த நாய்கள் காட்டுக்குள் மான் வேட்டையாட அழைத்துச் செல்லப்பட்டவை.
ஆறு மாத கருவைச் சுமந்திருந்த, 29 வயதான எலிசா பிலார்ஸ்கியின் உடல் ரெட்ஸ் எனும் காட்டுப் பகுதியில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
எலிசாவை கடித்துக் குதறியவை எந்த நாய்கள் என்று அடையாளம் காண 93 நாய்களிடம், எலிசாவின் டி.என்.ஏ மாதிரிகளை அடையாளம் காண சோதனை நடத்தி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவற்றில் ஐந்து நாய்கள் எலிசாவுக்கு சொந்தமானவை.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.00 மணி முதல் 1.30 வரை இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது.
சம்பவம் நடக்கும் சிறிது நேரத்துக்கு முன்னர் தனது துணைவர் கிறிஸ்டோபுக்கு தன்னை சுமார் 30 நாய்கள் சூழ்ந்துள்ளதாக அலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
பிற நாய்கள் தனது எஜமானியை தாக்குவதைப் பார்த்து தங்கள் நாய் ஒன்று அழும் தொனியில் கத்திய ஒலியை வைத்து, எலிசா இருக்கும் இடத்தை இவர் கண்டறிந்தார்.
தான் பார்த்தபோது அவரது ஆடைகள் கிழிந்து, பல காயங்கள் எலிசாவுக்கு இருந்ததாக கிறிஸ்டோப் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
எலிசாவின் தலை, உடல், கைகள், கால்கள் என உடல் முழுதும் பல காயங்கள் இருந்தன. காயங்கள் மூலம் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் இறந்தார்.
இவர் இறந்த ரெட்ஸ் காட்டுப்பகுதி சுமார் 13,000 ஹெக்டேர் பரப்பளவு உள்ளது. அங்கு மான்கள், நரிகள் உள்ளிட்ட பல காட்டுயிர்கள் வாழ்கின்றன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்