9/11 இரட்டை கோபுர தாக்குதல்: அன்று நடந்தது என்ன? - புகைப்படங்களின் சாட்சியம்

அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய 9/11 தீவிரவாத தாக்குதலின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11).

இதே நாளில்தான் அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு டவர் பகுதியில் கடத்தப்பட்ட விமானம் ஒன்று மோதியது.

உலகத்தின் போக்கையே மாற்றி அமைத்த சம்பவம் அது. அதன் பிறகு உலகெங்கும் பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன.

இந்த 9/11 தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

இந்த தாக்குதலை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மற்றும் தீவிரவாத தாக்குதலில் பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் பெருநிலப்பரப்பில் மோசமான தீவிரவாத தாக்குதலின் தொடக்கத்திற்கான அறிவிப்பாக இந்த சம்பவம் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஜிஹாதிகள் அதிகமாக ஈர்க்கப்பட இந்த சம்பவம் தூண்டுதல் அளித்திருக்கிறது.

மேலும், பாலி தீவு முதல் பிரஸெல்ஸ் வரை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட இந்த தாக்குதல் முக்கியமாக அமைந்தது.

சரி அன்று என்ன நடந்தது?

அர்டி வேன் வொய் அப்போது சம்பவம் நடந்த இடத்தில் இருந்தார். அப்போது நடந்த விஷயங்களை முன்பு பிபிசியிடம் பகிர்ந்து இருக்கிறார்.

அதனை இங்கு தருகிறோம்.

"ஒர் அழகிய நாள்"

"அதுவொரு அழகிய நாள். இப்போதும் நீல வானத்தை பார்க்கும் போதெல்லாம் நான் அந்த நாளை நினைவு கூறுகிறேன்" என்கிறார் அர்டி வேன் வொய்.

இவர் உலக வர்த்தக மையம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் அந்த சமயத்தில் பணி செய்தார். சரியாக காலை 8.46 மணிக்கு பெரும் சத்தம் கேட்டதாக கூறுகிறார் அவர்.

"என்ன நடந்தது என அவதானிப்பதற்குள் அனைவரும் கட்டடத்தைவிட்டு வெளியேறினார்கள். ஏதோ வேறொரு உலகிற்குள் சென்றது போல உணர்ந்தோம். அனைத்தும் அமைதியாகிவிட்டது. அனைத்தும் ஏதோ ஸ்லோ மோசனில் நடப்பதுபோல ஆகிவிட்டது." என்று அப்போது பிபிசியிடம் தெரிவித்தார் அர்டி வேன் வொய்.

"தரை எங்கும் வெள்ளைதாள்கள் விழுந்து கிடந்தன. அப்படியே பனிபோல பரவி கிடந்தது. எங்கும் நெருப்பு, புகை மண்டலம். இந்த உலகின் மிகவும் சிறந்த நகரமான நியூயார்க் நகரம் அன்று வேறொரு வடிவில் இருந்தது." என்கிறார் அவர்.

பதிமூன்று ஆண்டுகள் தாம் பார்த்த பணியைவிட்டு வேறொரு பணிக்கு சென்றார்.

அதன்பிறகு இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட விஷயம் குறித்து பலருக்கு கடிதம் எழுதினார். அன்று நடந்த விஷயங்களை விவரித்தார். இது அவருக்கு பாராட்டுகளை வாங்கி தந்தன.

புகைப்படங்கள்

இரட்டை கோபுரம் தாக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து ஒரு குறுந்தகட்டை பழமையான பொருட்கள் சேகரிக்கும் ஒருவர் வாங்கினார். அதில் ஏறத்தாழ 2400 புகைப்படங்கள் இருந்தன. அவை அனைத்தும் நியூயார்க் 9/11 தாக்குதல் குறித்த புகைப்படங்கள்.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் அடையாளம் தெரியாத ஒரு கட்டட தொழிலாளியால் எடுக்கப்பட்டவை.

தாக்குதலுக்கு உள்ளான உலக வர்த்தக மையத்தின் சிதிலங்களை அப்புறப்படுத்திய போது எடுத்த புகைப்படங்கள்.

புகைப்படங்கள் உள்ள குறுந்தகடுகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தாலும், அத்தனை புகைப்படங்களையும் மீட்க முடிந்தது.

இந்த புகைப்படங்கள் அனைத்தும் ஃப்ளிக்கர் தளத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் பல்வேறு கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :