You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிரெக்ஸிட் ஒப்பந்தம் - போரிஸ் ஜான்சனின் முயற்சியை தோற்கடித்த எம்பிக்கள்
ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றி பெற செய்ய பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முதல் கட்டத்தில் தோற்கடித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற பொதுஅவையில் நடந்த வாக்குப்பதிவில் இதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்தன.
இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத்தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழிசெய்யும் மசோதாவை தான் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் நடப்பதற்குமுன் பிரெக்ஸிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த 21 எம்பிக்கள் எதிர்கட்சிகளுடன் இணைந்து அரசின் முயற்சியை தோற்கடித்துள்ளனர்.
இந்த வாக்குப்பதிவுக்கு பிறகு, கட்சியின் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த எம்பிக்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்மூலம் அவர்கள் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பர் என்று கூறப்படுகிறது.
கட்சி நீக்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பது, மேலும் அதனால் வரவுள்ள தேர்தல் ஆகியவை அதிருப்தியாளர்களை கட்சியின் உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வைக்கும் என்று அரசு தரப்பு நம்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் தலைவர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் ஆரம்பத்திலேயே எச்சரித்திருந்தார்.
ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று அவர் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டார்.
பிரெக்ஸிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் எம்.பி.க்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கி சில நாள்களிலேயே நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கடந்த வாரத்தில் அறிவிக்கபட்டது.
நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அரசியின் உரை அக்டோபர் 14ம் தேதி இடம் பெறும் என்றும் அதில் தமது ஆச்சரியமளிக்கும் திட்டம் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
இதனால், ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தடை செய்யும் (நோ டீல் பிரெக்ஸிட் ) சட்டம் ஒன்றை அக்டோபர் 31-ம் தேதி நிறைவேற்றுவதற்கு எம்.பி.க்களுக்குத் தேவைப்படும் காலம் இருக்காது.
இது அரசமைப்புச் சட்ட விதிமீறல் என்று ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவைத்தலைவர் ஜான் பெர்கோ கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்