You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆண்கள் பேசாத 5 விடயங்கள்: வாழ்க்கை பிரச்சனையின் ஆரம்பம்
சுமார் ஒவ்வொரு 40 வினாடிக்கும் உலகில் ஏதாவது ஓரிடத்தில் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
பெரும்பாலும் இவ்வாறு தற்கொலை செய்துகொள்வோர் ஆண்கள். தங்களின் பிரச்சனைகள் பற்றி பேசாத அல்லது உதவி தேடாத ஆண்களே இந்த முடிவுக்கு வருகின்றனர். எனவே, எந்த தலைப்புகளை பற்றி ஆண்கள் அதிகமாக பேச வேண்டும்?
சமூக ஊடகங்களும், எதார்த்தமும்
சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவது மன ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிட்டால், அதிக தனிமையும், மன அழுத்தமும் அடைவதாக பென்சில்வேனிய பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், இந்த பாதிப்பை மாற்றிவிட முடியும்.
"வழக்கமாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற நேரத்தை குறைத்து கொண்டால், மன அழுத்தமும், தனிமையும் கணிசமான அளவுக்கு குறையும்" என்று இந்த ஆய்வை நடத்திய உளவியல் நிபுணர் மிலிசா ஹண்ட் கூறுகிறார்.
இந்த பாதிப்புகள் குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டோரில் அதிக மன அழுத்தம் பெற்றிருந்த எல்லோரிடமும் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
ஆனால், சமூக ஊடகங்கள் பாதிப்பு அளிப்பதாக எப்படி இருக்க முடியும்?
சமூக ஊடகங்களில் நடப்பவை அனைத்தும் உண்மையான வாழ்க்கையின் பிரதிபலிப்பாக இருப்பது அரிதே. ஆனாலும், ஒப்புமை ஏற்படுத்துவதைவிட நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிச்சிகன் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஆஸ்கார் யபார்ரா கூறுகிறார்.
"உலக நடப்புகள் பற்றி சிறந்த விழிப்புணர்வை மக்கள் பெற்றிருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், அதுதான் நிகழ்கிறது. நீங்கள் சமூக ஊடகங்களில் நேரத்தைக் கழிக்கும்போது, பிற பக்கத்தின் மட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கங்களையே நீங்கள் பொதுவாக பெறுகிறீர்கள். அதிக சமூக ஊடகங்களை நீங்கள் பயன்படுத்துகிறபோது, சமூக ஒப்பீடுகள் அதிகரித்து மக்களின் உண்மையான உணர்வுகள் மங்க தொடங்குகின்றன," என்று அவர் தெரிவிக்கிறார்.
தனிமை
வெல்கம் கலெக்ஷனோடு சேர்ந்து, தனிமை பரிசோதனை பற்றி பிபிசி நடத்திய மிக பெரியதோர் ஆய்வில், 16 முதல் 24 வயதிற்குள்ளான இளைஞர்கள் அதிக தனிமையைஉணர்வதாக தெரிய வந்தது.
ஆண்களை பொறுத்தமட்டில் தனிமையை விரட்டுவது மிகவும் கடினம் என்று 2017ம் ஆண்டு நடத்திய ஆக்ஸ்போர்டு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை நடத்திய ராபின் முன்பார், "பெண்களின் நட்பை பொறுத்தவரை, தொலைபேசியில் ஒருவருக்கொருவர் பேசுவதற்கு யார் அதிக முயற்சி எடுத்தார்களோ அவர்களின் நட்பு உறுதியாகியது," என்கிறார்.
"ஆண்களின் நட்பை பொறுத்தவரை கால்பந்து போட்டிக்கு செல்வது, மது அருந்த செல்வது, ஒர்அணியில் ஐந்து பேர் விளையாடும் கால்பந்து ஆடுவது என எல்லாமும் வேலை செய்துள்ளது. எனவே, அவர்கள் முயற்சி செய்ய வேண்டும். பாலின வேறுப்பாட்டில் இது குறிப்பிடும்படியான வித்தியாசம்," என்று அவர் கூறுகிறார்.
தனிமை தீவிரமடையும்போது, ஒருவருக்கு உடல் மற்றும் மன ரீதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
டிமென்சியா என்கிற நினைவாற்றல் இழப்பு நோய், தீவிர நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சனைகளுக்கான ஆபத்தோடு தனிமைக்கு தொடர்புள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
அழுதல்
அழுதுவிடுவதால் சுய-ஆறுதல் கிடைப்பதோடு, இரக்கமும், சமூகப் பிணைப்பும் உருவாவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. "ஆண்கள் அழுவதில்லை" என்கிற உணர்வு ஆழமாக வேரூன்றியுள்ளது.
பிரிட்டனில் நடத்தப்பட் ஆய்வில், 18 முதல் 24 வயதான 55 சதவீத ஆண்கள், அழுவது தங்களை ஆண்மை பண்பு குறைவானவர்களாக காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
"உணர்வுகளை வெளிகாட்டுவது பலவீனமானது என்பதால், இளம் வயதில் இருந்தே ஆண்கள் உணர்வுகளை வெளிக்காட்ட கூடாது," என்று நாம் நினைக்கிறோம் என்கிறார் பிரச்சனையை கையாள உதவி மற்றும் தற்கொலை தடுப்பு சேவைகளை வழங்குகின்ற லாபநோக்கமற்ற ஆஸ்திரேலிய நிறுவனமான லைஃப்லைனின் முன்னாள் செயல் இயக்குநர் கோல்மன் ஒ‘டிரிஸ்கோல்.
குடும்பத்திற்கு பணம் சம்பாதிப்பவராக இருப்பது
பிரிட்டனில் சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு, இயல்பான பாலுணர்வு கொண்ட குடும்ப ஆண்களில் 42 சதவீதத்தினர், தனது மனைவியைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டுமென நினைப்பதாக தெரிவிக்கிறது. அவ்வாறு எண்ணுபவரில் ஒருவர்தான் ஒலுமிடி டுரோஜாய்.
"எனது குடும்பத்திற்கு பணம் சம்பாதித்த எனது தந்தை இரவும், பகலும் வேலை செய்ததையும், நாட்டில் மேலும், கீழும் பயணம் செய்ததையும், பார்த்தேன். நானும் அவ்வாறு இருக்க வேண்டும்" என்று ஒலுமிடி கூறுகிறார்.
நான் எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும். இவ்வாறு எனது மனைவி எண்ணுகின்ற எடுத்துகாட்டான ஆணாக நான் இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.
நிதி சுமையை உணர்வது ஒருவருக்கு மன நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.
2015ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், ஒரு சதவீத வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்போது, தற்கொலை விகிதத்தில் 0.79 சதவீத அதிகரிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
"நமக்கு சரியிணையாக இருப்பவரோடு, பொருளாதார ரீதியாக வெற்றிகரமாக இருப்பதையும் நமது முழு வாழ்வையும் ஒப்பிட்டு முடிவு செய்பவர்களாக நாம் வளர்க்கப்பட்டுள்ளோம். பொருளாதார அம்சங்கள் இருக்கின்றபோது நம்மால் கட்டுப்படுத்த முடியாமல், கடினமாகிறது" என்கிறார் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு ஆண்களின் தற்கொலை தடுக்க செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயலதிகாரி சீமோன் கன்னிங்.
உடல் தோற்றம்
கடந்த ஆண்டு, "லவ் ஐலாண்ட்" என்கிற பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் பெற்ற ஜோஷ் இளைய நட்சத்திரமாக மாறினார்.
"இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னர், நான் ஜிம்-மில் அதிக பயிற்சி எடுத்துகொண்டேன். கண்ணாடியில் என்னை அடிக்கடி பார்த்து கொள்வேன். நான் தயாராகி இருந்தாலும், இன்னமும் இந்நிகழ்ச்சிக்கு செல்ல விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.
"இப்போது கூட சிக்ஸ்-பேக் உடைய ஒருவரை பார்த்தவுடன் உங்களை பலவீனமாக பார்க்க தோன்றலாம்,” என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்