அகிஹிட்டோ: பதவிவிலகும் சாமுராய் தேசத்தின் அரசர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Getty Images
பதவிவிலகும் சாமுராய் தேசத்தின் அரசர், கவலையில் மக்கள்
ஜப்பான் அரசர் அகிஹிட்டோ தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் பதவி விலகும் முதல் அரசர் இவர் ஆவார். அகிஹிட்டோவுக்கு 85வயது ஆகிறது. வயது மூப்பின் காரணமாக பதவி விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
"என் வயதின் காரணமாக என்னால் தினசரி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. என் உடல்நிலை நலிந்து வருகிறது" என்கிறார் அவர். இந்த அறிவிப்பு அரசரின் மீது பரிவை உண்டாக்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. ஜப்பானில் அரசருக்கு எந்த அரசியல் அதிகாரமும் இல்லை என்றாலும், தேசத்தின் அடையாளமாக அவர் இருப்பார்.

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த 'திமிங்கிலம்'

பட மூலாதாரம், Getty Images
நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் ரஷ்ய நாட்டு சேனம் பொருத்தப்பட்ட பெலுகா வகை திமிங்கிலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்திருக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் நார்வே நாட்டு வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அந்த சேனத்தில் கோப்ரோ கேமரா தாங்கி ஒன்று இருந்ததாகவும், அதில் இருந்த அடையாளம் ஒன்று அது ரஷ்யாவை சேர்ந்தது என்பதைக் காட்டுவதாகவும் கடல் உயிரியலாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற அந்த வல்லுநர் கூறியுள்ளார்.நார்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த சேனத்தை திமிங்கிலத்தில் இருந்து கழற்றினார்.

இந்தோனீசியா தலைநகரத்தை மாற்றுகிறது

பட மூலாதாரம், Getty Images
இந்தோனீசியாவின் தலைநகரை வேறு இடத்துக்கு மாற்ற அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டுத் திட்டமிடல் துறை அமைச்சர் பேம்பங் ப்ராஜ்ஜநெகோரோ தெரிவித்துள்ளார்.அந்நாட்டின் தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, உலகில் அதிவேகமாக கடலில் மூழ்கிவரும் நகரங்களில் ஒன்று. அத்துடன், இந்த நகரம் கடும் போக்குவரத்து நெரிசலையும் சந்திக்கிறது. அமைச்சர்கள் குறித்த நேரத்தில், குறித்த நிகழ்வுக்கு செல்லவேண்டும் என்றால், போலீசார் கடுமையாக போராடி போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது.
விரிவாக படிக்க:'மூழ்கும்' தலைநகரத்தை மாற்றுகிறது இந்தோனீசியா

பயங்கரவாதிகள் உடல்களை புதைக்க இடம் தரமறுக்கும் உலமா சபை

பட மூலாதாரம், Getty Images
இலங்கை சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவருடைய உடல்களையும் தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்றும் அந்த சடலங்களை தமது பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்ய இடமளிக்கப் போவதில்லை எனவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபை அறிவித்துள்ளது.சாய்ந்தமருது வர்த்தக சபை மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இந்த அறிவித்தலை விடுப்பதாகவும் ஜும்ஆ பள்ளிவாசல் உலமா சபையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு: தமிழ்நாடு, கேரளாவில் விரியும் விசாரணை

பட மூலாதாரம், ISLAMIC STATE
இலங்கை தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல்தாரியான சஹ்ரான் ஹாசிமை பின் தொடர்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கேரளாவில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.வன்முறை ஜிஹாத்தில் நம்பிக்கை உடையவர்கள் என சந்தேகிக்கும் நபர்களை அடையாளம் காணும் விசாரணையை தேசிய புலனாய்வு முகமையும் (என்.ஐ.ஏ) முழுவீச்சில் முடுக்கிவிட்டுள்ளது.ஹாசிமை பின் தொடரும் இந்த உதிரிகளை சந்தேகிக்க பல்வேறு விஷயங்கள் காரணமாக உள்ளன.
விரிவாக படிக்க:இலங்கை குண்டுவெடிப்பு: தமிழ்நாடு, கேரளாவில் விரியும் விசாரணை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












