You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண், பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் - விரிவான தகவல்
சௌதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருடன் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவர்களுக்குத் தெரியாமல் குவைத்தில் இருந்து தப்பித்து ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 18 வயதுப் பெண், வழியில் தாய்லாந்து வந்து சேர்ந்தார்.
அவரது பாதுகாப்பு கருதி, அவரது விருப்பத்துக்கு மாறாக சௌதிக்கு திருப்பி அனுப்பமாட்டோம் என்று தாய்லாந்து குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா. அகதிகள் குழுமத்தின் பாதுகாப்பில் அந்தப் பெண் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து கிளம்பினார் என்று தாய்லாந்து குடியேற்றப் பிரிவு போலீஸ் தலைவர் கூறினார்.
என்ன நடந்தது?
பதினெட்டு வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தனது குடும்பத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்ததாகவும் ஆனால் தாய்லாந்தில் தரையிறங்கியதும் சௌதி அதிகாரிகள் தனது பாஸ்போர்ட்டை பிடித்துவைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், பேங்காக்கில் உள்ள சௌதி தூதரகம், அப்பெண்ணிடம் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான பயணச் சீட்டு இல்லை என்ற காரணத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பாஸ்போர்ட் அப்பெண்ணிடம்தான் இருக்கிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அவர் குவைத்தில் தனது குடும்பத்தோடு பயணத்தில் இருந்தபோது இரண்டு நாள்களுக்கு முன்பாக விமானம் மூலமாக தப்பினார். பேங்காக்கில் உள்ள இணைப்பு விமானம் வழியாக ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயற்சித்துள்ளார்.
இஸ்லாமைத் துறந்து...
பிபிசியிடம் பேசிய அப்பெண், தாம் இஸ்லாம் மதத்தைத் துறந்ததாக கூறினார். ''சௌதி அரேபியாவுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்டால் எனது குடும்பத்தால் கொல்லப்படுவேன்'' என்றும் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.
மொஹம்மத் அல்-குனன் பயந்துபோய் இருப்பதாகவும் குழப்பத்தில் ஆழ்ந்திருப்பதாகவும் பேங்காக்கில் இருந்து ஜோனாதன் ஹெட் தெரிவிக்கிறார்.
தன்னிடம் ஆஸ்திரேலிய விசா இருப்பதாக கூறிய அல்-குனன் சுவர்ணபூமி விமானநிலையத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தை பிடிக்க முயன்றபோது தன்னைச் சந்தித்த சௌதி அதிகாரி தனது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
புன்னகையின் நிலம்
தாய்லாந்து குடியேற்ற போலீஸ் தலைவர், "ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் தாய்லாந்தில் தங்குவார். அவர் விமாநிலையத்திலிருந்து புறப்பட்டார்” என கூறி உள்ளார்.
மேலும், "புன்னகையின் நிலம் தாய்லாந்து. இந்நிலம் யாரையும் சாக அனுப்பாது" என்று கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்