இத்தாலி இரவு விடுதியில் நெரிசல்: ஆறு பேர் பலி; 100 பேர் காயம்

இத்தாலியிலுள்ள இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 100 பேர்களில் 10 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியின் கிழக்குப்பகுதியிலுள்ள கடற்கரை நகரமான அன்கோனாவிற்கு அருகிலுள்ள இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கோரினால்டோ என்ற இடத்திலுள்ள அந்த இரவு நேர விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தபோது, யாரோ ஒருவர் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கப்பட்டதாக கூறியதால் ஏற்பட்ட பீதியின் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் பிரபல ராப் இசை கலைஞரான எபஸ்தா என்பவர் 'தி லன்டேர்னா அஸ்ஸுரா' என்னும் இரவு விடுதியில் நடத்திய நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதாக தெரிகிறது.

கிறித்தவ மதம் தொடர்பான சிறப்பு நாள் கொண்டாட்டத்தின்போது, அதிகாலை சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்கள் செனிகாலியா, அன்கோனா ஆகிய பகுதியிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படன்னர்.

உள்ளூர் அவசரகால உதவி அமைப்பு இந்த சம்பவம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றி உள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் இத்தாலியின் டுரின் நகரில் கால்பந்து தொடரொன்றின் இறுதிப்போட்டி ஒளிப்பரப்பப்பட்டபோது, பட்டாசு சத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பீதி கூட்ட நெரிசலாக மாறியதில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: