You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசிய விமான விபத்து: ட்ரோன்கள் மூலம் தேடும் பணி தீவிரம்
ட்ரோன்கள் மற்றும் சோனார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தோனீசியாவில் கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது.
விமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனீசிய விமானத்தின் கருவிகளில் கோளாறு ஏற்பட்டிருந்ததாக பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் தெரிவித்துள்ளன.
விமானத்தின் தொழில்நுட்பம் குறித்த அந்த தகவலில் கருவி ஒன்று "நம்பமுடியாத நிலையில்" இருப்பதாகவும், விமானி அதனை இணை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்த அந்த விமானம் 189 பேருடன் கடலில் விழுந்தது.
ஜகார்தாவிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறிகள் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் லயன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமானது. விமான சேவை நிறுவனத்திடம் பிபிசியால் இந்த விபத்து குறித்து கருத்தை பெற முடியவில்லை.
மீட்புப் பணியாளர்கள் சில உடல்களையும், குழந்தைகளுக்கான காலணிகள் உட்பட பயணிகளுக்கு சொந்தமான சில உடமைகளையும் மீட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்களின் குடும்பங்கள் உயிரிழந்தவர்கள் குறித்து தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
போயிங் 737னின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பான போயிங் 737 மேக்ஸில் நடந்த முதல் பெரும் விபத்து இதுவாகும்.
விமானத்தில் என்ன கோளாறு?
விமானி இயக்கும் வேகத்தை காட்டும் கருவி நம்பமுடியாத நிலையில் இருந்ததாகவும், உயரத்தை அளக்கும் கருவியில் தகவல்கள் விமானி மற்றும் இணை விமானிக்கு வெவ்வேறாக இருந்ததாகவும் பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அந்த விமானக் குழு, பாதுகாப்பாக பறந்து ஜகார்த்தாவில் தரையிறங்கலாம் என முடிவு செய்தனர்.
முன்னதாக லயன் ஏர் முதன்மை நிர்வாக அதிகாரியான எட்வேர்ட் சிராய்ட், விமானம் பாலியின் டென்பசாரிலிருந்து ஜகார்த்தா பறக்கும் போது விமானத்தில் குறிப்பிடப்படாத தொழில்நுட்ப கோளாறு இருந்ததாகவும், ஆனால் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்திருந்தால் டென்பசாரிலிருந்து பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க மாட்டாது என அவர் தெரிவித்தார். விமானக் குழுவின் புகாரை நாங்கள் பெற்றவுடன் அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
போயிங் 738 மேக் 8 ரக விமாங்களில் 11 விமானங்களை லயன் ஏர் விமான சேவை இயக்கி வருகிறது. பிற விமானங்களில் இம்மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
விமானத்துக்கு என ஆனாது?
பங்கல் பினாங்கில் உள்ள டெபாட்டி அமிர் விமானநிலையத்தில் ஒரு மணி நேர தாமதத்துக்கு பிறகு தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் புறப்பட்ட 13 நிமிடத்தில் அதிகாரிகள் விமானத்தின் தொடர்பை இழந்தனர்.
ஜகார்த்தாவின் சோகர்னோ ஹட்டா விமான நிலையத்திற்கு திரும்பி வருமாறு விமானிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனீசியாவின் பேரழிவு மீட்பு முகமையின் தலைவர் கடலில் கண்டெடுக்கப்பட்ட உடமைகளின் படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
விமானியும் இணை விமானியும் இதற்கு முன்பாக 11,000 மணி நேரங்கள் ஒன்றாக பயணித்துள்ளனர்.
விமானக் குழுவில் மூன்றுபேர் பயற்சி ஊழியர்கள் ஒருவர் தொழில்நுட்ப வல்லுநர்.
இந்தோனீசியாவின் நிதித்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் இருபது பேர் விமானத்தில் இருந்ததாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ்
போயிங் 737 வரிசை விமானங்கள் அதிகமாக விற்பனையாகக்கூடிய ஒன்று இதில் மேக்ஸ்7,8,9,10 வரை உள்ளன.
விபத்துள்ளான போயிங் 737 மேக்ஸ் 8, 2016ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.
விசாரணையில் விபத்து குறித்த காரணம் தெரியும் வரை இந்த விமான சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மோசமான வான் பயண பாதுகாப்பு
தீவுகள் நிறைந்த நாடான இந்தோனீசியா விமான பயணங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அதன் விமான சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு மோசமான நிலையிலே இருந்து வந்துள்ளது.
லயன் ஏர் விமான சேவை 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் விமான சேவை மற்றும் தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்குக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
கடந்த காலங்களில் மோசமான நிர்வாகம் மற்றும் பராமரிப்பால் 2016ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய வான் வெளியில் பறப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
2013 ஆண்டு லயன் ஏர் விமானம் ஒன்று பாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலில் விழுந்து விபத்துள்ளானது. இருப்பினும் அதிலிருந்த 108 பேர் உயிர் தப்பினர்.
2004ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலிருந்து வந்த விமானம் ஒன்று சோலோ சிட்டியில் தரையிறங்கும்போது விபத்துள்ளானதில் 25 பேர் பலியாகினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :