You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளை குஷிப்படுத்திய வொண்டர்வுமன்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
வொண்டர்வுமனின் வருகை
பிரபல ஹாலிவுட் படமான வொண்டர்வுமன் படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மாநகரில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடந்துவருகிறது. படப்பிடிப்பில் கலந்துகொண்ட அப்படத்தின் நாயகி கல் கடோட் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளை மகிழ்விக்க வொண்டர்வுமன் கதாபாத்திரத்துக்கான உடையிலேயே சென்றார் கல் கடோட். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில், மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், அவரை உண்மையான வொண்டர்வுமன் (அதிசயப் பெண்) என்று மருத்துவமனை ஊழியர்கள் கொண்டாடினர்.
நூறு பேர் பலி
மேற்கு ஜப்பானில் கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது நூறு பேர் பலி ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது என ஜப்பான் அரசு செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை மாதத்தில் பெய்யும் மழை அளவைவிட மூன்று மடங்கு அதிகமான மழை மேற்கு ஜப்பானில் இந்தமாதத்தில் இதுவரை பெய்துள்ளது. மழை நீர் மெல்ல வடிந்து வருகிறது. மீட்பு பணியினர் கனமழையில் சிக்கியோரை மீட்கும் பணியில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார் ஒகயாமா பகுதியில் உள்ள அரசதிகாரி.
சிட்னி உணவகத்தில் தூக்கியெறியப்பட்ட பெண்கள்
சிட்னி உணவகம் ஒன்றில் அதிக குடிபோதையில் இருந்த இரண்டு பெண்களை தூக்கி வெளியே எரிந்த சம்பவம் மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இதன் காரணமாக அந்த உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிட்னியில் உள்ள கொரியன் உணவகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த உணவகத்திற்கு வந்த மூன்று பெண்கள் கொரியன் சொஜு மதுபானத்தை அருந்தி உள்ளனர். மதுபோதை அதிகம் ஆனதால் இருவர் உணவகத்திலேயே மயங்கி விழுந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் உணவகத்திற்கு வெளியே ஊழியர்கள் தூக்கி எரிந்துள்ளனர். இதன் காரணமாக அந்த உணவகத்திற்கு 1,650 அமெரிக்க டாலர்கள் அபராதமும் இன்னும் சில தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மருமகனை நிதிஅமைச்சராக்கிய அதிபர்
மீண்டும் துருக்கியின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ரிசெப் தயிப் எர்துவான், நாட்டின் நிதியமைச்சராக தனது மருமகன் பீரட் அல்பய்ராக்கை நியமித்துள்ளார். அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்ற செய்தியை அடுத்து அந்நாட்டுப் பணமான லிராவின் மதிப்பு 2 சதவீதம் குறைந்தது. துருக்கியின் ராணுவ ஜெனரலாக இருந்த ஹுலுசி அக்காரை பாதுகாப்பு அமைச்சராக நியமித்துள்ளார் எர்துவான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :