You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாளிதழ்களில் இன்று: ''காஷ்மீரில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்''
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (புதன்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினமலர்
காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்து, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி திருமணி உயிரிழந்த நிலையில், காஷ்மீரில் மீதமுள்ள தமிழர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் என்றும், கல்வீச்சில் தமிழக சுற்றுலா பயணி உயிரிழந்தது மனிதநேயத்தின் மீது விழுந்த மரண அடி, இந்தத் துயர சம்பவத்திற்காக வெட்கி தலை குனிகிறேன் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளார் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தினத்தந்தி
புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த ஜாக்டோ-ஜியோ' கூட்டமைப்பின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேரை போலீசார் கைது செய்தனர் என தினத்தந்தி செய்தி கூறுகிறது.
தினமணி
அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவியை ஏற்பேன் என்றும், அதேவேளையில் மோதி மீண்டும் பிரதமராவது சாத்தியமில்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார் என தினமணி செய்தி கூறுகிறது.
தி இந்து (தமிழ்)
கொள்கையளவில் கடும் எதிரிகளான பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில், எதிரியான மம்தா பானர்ஜியை வீழ்த்துவதற்காகக் கைகோர்த்துள்ளனர். இருகட்சிகளின் கொள்கை வேறாக இருந்தாலும், திரிணமுல் காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன், இருகட்சிகளும் 'தொகுதி பகிர்வு' செய்து கொண்டதாக நாடியா மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் சுமித் டியோ கூறியுள்ளார் என தி இந்து (தமிழ்) செய்தி கூறுகிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வட இந்தியாவில் புழுதிப்புயலும், மழையும், மின்னலும் ஏற்பட்டது என்றும் பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது என்றும், இன்று(புதன்கிழமை) வானிலை இன்னும் மோசமாகலாம் என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்