உலகப் பார்வை: சிரியா - மீண்டும் அரசு வசம் கிழக்கு கூட்டாவின் சில பகுதிகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப் பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.

மீண்டும் அரசு கட்டுப்பாட்டில் கிழக்கு கூட்டா பகுதிகள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கூட்டா நிலப்பரப்பின் 10 சதவீத பகுதிகளை மீண்டும் சிரிய அரசு கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை தாக்குதல் தீவிரமடைந்ததாக கூறியுள்ளது இப்பிரச்சனையை கண்காணித்து வரும் இங்கிலாந்தை சேர்ந்த சிரிய மனித உரிமை ஆய்வு மையம். டமாஸ்கஸ் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் செல் தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளனர். கிழக்கு கூட்டா பகுதியில் மட்டும் ஏறத்தாழ 393,000 மக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உணவு மற்றும் மருத்துவ இருப்புகள் விரைந்து குறைந்து வருகின்றன. தொடர் சண்டையின் காரணமாக உதவி பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்களும் உள்செல்ல முடியவில்லை.

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு

வெள்ளை மாளிகை வாசலில் துப்பாக்கிச் சூடு நடத்திய துப்பாக்கிதாரி, பின் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் துப்பாக்கியுடன் வெள்ளை மாளிகை வேலி அருகே வந்த ஒருவர், தன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு, பின் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் நடந்த சமயத்தில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இல்லை. இந்த துப்பாக்கி சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த செய்தியைப் படிக்க: வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு

துருக்கி வான் தாக்குதலில் இறந்த அரச படையினர்

அஃப்ரின் என்ற பகுதியில் துருக்கி நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 36 சிரிய அரச படையினர் இறந்துள்ளனர் என்று சிரியா பிரச்சனையை கண்காணித்து வரும் ஒரு குழு கூறி உள்ளது. வட சிரியா பகுதியில் உள்ள கஃப்ர் ஜினா முகாமை குறி வைத்து நடந்த தாக்குதல் இது என்று சிரிய மனித உரிமை ஆய்வு மையம் கூறி உள்ளது. குர்து படைகளுக்கு ஆதரவாக இரண்டு வாரங்களுக்கு முன் சிரிய படை அஃப்ரினிக்குள் நுழைந்தது.

பனியால் மூடப்பட்ட ரயில் பாதை

இங்கிலாந்தில் கடுங்குளிரின் காரணமாக ரயில்வே இருப்பு பாதை பனியால் மூடப்பட்டதால், தொடர்ந்து ரயில் பயணிகள் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக அங்கு பல பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மிக அவசியம் என்றால் மட்டும் தொடர் வண்டியை பயன்படுத்தவும் என்று வட கிழக்கு இங்கிலாந்து மற்றும் கிழக்கு மத்திய பகுதி மக்களை, ரயில்வே நிர்வாகத்தை கவனித்து வரும் நெட்வொர்க் ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதி கார்களுக்கு வரி: டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக தீர்வைகள் கூறித்து ஒரு சொற் போரில் இறங்கி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தி உள்ள டிரம்ப், அமெரிக்காவின் முட்டாள் தனமான வர்த்தக ஒப்பந்தங்களால் பல நாடுகள் பலனடைந்து வருவதாக கூறி உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :