You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக
திரைப்படத்துறை மற்றும் பிற வேலை இடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 300 நடிகைகள், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து ஒரு புதிய திட்டத்தை தொடங்கி உள்ளனர். `நேரம் முடிந்துவிட்டது` என்ற பெயரைக் கொண்ட இந்த திட்டம் குறித்த விளம்பரம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வந்துள்ளது.
வஞ்சக பாகிஸ்தான்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டில் பதிவிட்ட முதல் ட்வீட்டில் பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பல பில்லியன் டாலர்கள் பணத்தை உதவியாக பெற்றுக் கொண்டு, அமெரிக்காவை ஏமாற்றுகிறது, பொய் சொல்கிறது என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருகிறது என்ற அந்த ட்வீட்டில் அவர் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், "அல் கொய்தாவை அழித்தொழிக்க, பயங்கரவாதிகளுக்கு எதிரான ஒரு கூட்டாளியாக பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு நிலம், நீர், ராணுவ தளம், தொலைதொடர்பு உதவிகளை 16 ஆண்டுகளாக வழங்கி வந்தது. ஆனால், அமெரிக்கா நமக்கு வழங்கியது அவநம்பிக்கையைதான்" என்று ஒரு ட்வீட்டை பகிர்ந்துள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிராக
ஜெர்மன் வலதுசாரி ஏஃப்டி கட்சியின் துணை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீட்ரிக்ஸ் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு ட்வீட்டை பகிர்ந்து இருந்தார். இதற்காக அவர் இப்போது விசாரணையை சந்தித்து வருகிறார். அவருடைய ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
தொடரும் போராட்டம்
`விலைவாசியை கட்டுப்படுத்த இரான் அரசு தவறிவிட்டது` என்று தொடங்கிய அரசுக்கு எதிரான இரான் மக்கள் போராட்டம் ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகிறது. இரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் கார் எரிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன.
இளைஞன் கைது
தனது குடும்பத்தை சேர்ந்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றத்திற்காக 16 வயது இளைஞனை கைது செய்துள்ளது அமெரிக்க காவல்துறை. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நியூஜெர்ஸியில் ஒரு வீட்டிலிருந்து துப்பாக்கி சத்தம் வந்ததை அடுத்து, போலீஸார் அந்த வீட்டிற்கு விரைந்தனர். அந்த வீட்டில் நான்கு பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தனர். இந்த கொலை வழக்கில் அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞனை போலீஸ் கைது செய்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :