ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.

தாய்லாந்து: மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை

சுமார் 40,000 முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி, 160 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அந்த தண்டனை பாதியாகக் (6,637 ஆண்டுகள், 6 மாதங்கள்) குறைக்கப்பட்டுள்ளது.

எகிப்து: துப்பாக்கித் தாக்குதலில் 9 பேர் பலி

எகிப்தில் கிறிஸ்த்தவ மதத்தவர்களைக் குறிவைத்து ஒரு துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட இருவேறு தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய அரசு அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுக் குழந்தையால் உண்டான பெரும் தீ விபத்து

வியாழன் இரவு 12 பேர் பலியான நியூ யார்க் தீ விபத்து சம்பவம், கண்காணிக்க ஆள் இல்லாத மூன்று வயதுக் குழந்தை ஒன்று விளையாட்டாக நெருப்பைப் பற்றவைத்தால் உண்டானது என்று தெரியவந்துள்ளது.

அக்குழந்தையின் தாய், தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பித்தபோது வீட்டைத் திறந்த நிலையிலேயே விட்டுச் சென்றதால், தீ பிற இடங்களுக்கும் பரவியுள்ளது.

இரானில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

இரானில் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடங்கிய போராட்டம், அரசின் திட்டங்கள் மற்றும் மதகுருக்கள் ஆட்சி நிர்வாகத்தில் தலையீடு செய்வதற்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காவல்துறை அடக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவருவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களலால் இரானின் பல்வேறு நகரங்களும் ஸ்தம்பித்துள்ளன.

ரஷ்யா: தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த புதனன்று நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆள் சேர்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டங்கள், கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்திருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :