''இரண்டு நாட்களில் முகாபே நீக்கப்படுவார்'': ஆளும் கட்சியினர் உறுதி

முகாபே

பட மூலாதாரம், முகாபே

படக்குறிப்பு, ``முகாபேவின் மனைவி அரசை இயக்க எவ்வித உரிமையும் இல்லாதபோதும், அவர் அரசியலமைப்பு அதிகாரத்தை கைப்பற்ற முகாபே அனுமதித்தார்``

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிரான குற்றச்சாட்டு நடவடிக்கைகளை ஆளும் சானு பி.எஃப் கட்சி செவ்வாய்கிழமை தொடங்க உள்ளது.

இதற்கான செயல்முறை நிறைவு செய்ய இரண்டு நாட்களுக்குள் ஆகலாம். புதன்கிழமையன்று முகாபே நீக்கப்படுவார் என சானு பி.எஃப் கட்சியின் உறுப்பினர் பால் மாங்வானா கூறியுள்ளார்.

முகாபேவின் மனைவி அரசை இயக்க எவ்வித உரிமையும் இல்லாதபோதும், அவர் அரசியலமைப்பு அதிகாரத்தை கைப்பற்ற முகாபே அனுமதித்தார் என அவர் கூறினார்.

முன்னதாக முகாபே பதவி விலக அளிக்கப்பட்ட காலக்கெடு முடிந்த நிலையில், சானு பி.எஃப் கட்சியினர் இம்முடிவை எடுத்துள்ளனர்.

பதவி விலக வேண்டும் என வலுத்துவரும் கோரிக்கையை நிராகரித்திருந்தார். அடுத்த சில வாரங்களுக்கு தொடர்ந்து பதவியில் இருப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

தொலைக்காட்சி நேரலையில் பேசிய அதிபர் முகாபே, டிசம்பர் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தை தலைமையேற்று நடத்துவேன் என்று தெரிவித்தார்.

முகாபே

பட மூலாதாரம், STR/AFP/Getty Images

அவரின் சானு பி.எஃப் கட்சி, அவரை கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்கியதோடு, அதிபர் பதவியிலிருந்து விலக 24 மணிநேரத்திற்கு குறைவான கெடு அளித்திருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனக்கு அடுத்த பதவியில் இருந்த எமர்சன் மனங்காக்வாவை, முகாபே பதவி நீக்கம் செய்ததை தொடர்ந்து இந்த நெருக்கடி உருவானது.

முகாபேவிற்குப் பிறகு அவரின் மனைவியை அதிபராக்கும் நடவடிக்கையாக இதை, ராணுவ தலைவர் பார்த்தார்.

முகாபே

பட மூலாதாரம், AFP/Getty Images

எதிர்பார்ப்புகளை உடைத்த முகாபே

முகாபே பதவி விலகுவதை அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தொலைக்காட்சி பேச்சைக் காண மக்கள் கூட்டம் ஹராரேவில் கூடியது.

பதவி விலகலுக்கு பதிலாக, அவர், "கட்சியின் நாடாளுமன்ற கூட்டம் இன்னும் சில வாரங்களில் நடக்கவுள்ளது. அதற்கு நான் தலைமையேற்பேன் " என்றார்.

ஸானு பி.எஃப் கட்சி, ராணுவம் மற்றும் பொதுமக்கள் தெரிவித்த விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட அவர், நாடு மீண்டும் பழைய நிலைக்கு மாறவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

"ராணுவத்தினரின் நடவடிக்கைகளில் என்ன சாதக பாதகங்கள் இருந்தாலும், அவர்களின் கவலைகளை, தலைமைத் தளபதி என்ற முறையில் நான் ஒப்புக்கொள்கிறேன்" என்று அவர் தொலைக்காட்சியில் பேசினார்.

கடந்த வாரம், அரசு ஒளிபரப்பை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்த நகர்வை அவர் குறிப்பிட்டு இவ்வாறு தெரிவித்தார்.

முகாபே பதவி விலக ஒப்புக்கொண்டு, பிறகு தன் எண்ணத்தை மாற்றிருக்கலாம் என்று இந்த சூழ்நிலையை புரிந்துகொள்வதாக, பிபிசியின் ஆஃப்ரிக்க சேவை ஆசிரியர் ஃபெர்கல் கேன் தெரிவிக்கிறார்.

காணொளிக் குறிப்பு, ராபர்ட் முகாபே: ஜிம்பாப்வேயின் புரட்சி நாயகனா, அடக்குமுறையாளரா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :