You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பார்சிலோனா தாக்குதல்: ஃப்ரிட்ஜுக்குள் ஒளிந்த நடிகையின் பயங்கர அனுபவம்
பார்சிலோனாவில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஒரு உணவு விடுதியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்டது பயங்கர அனுபவமாக இருந்தது என்று நடிகையும் நடனக் கலைஞருமான லைலா ரோஸ் கூறியுள்ளார்.
பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹோல்பி சிட்டி, ஃபுட் பாலர்ஸ் வைவ்ஸ் போன்ற படங்களில் நடித்த லைலா, விடுமுறையைக் கழிக்க அங்கு சென்றுள்ளார்.
46 வயாதான அந்த நடிகை, டிவிட்டர் மூலம், அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
"ஒரு தாக்குதல் சம்பவத்தின் நடுவில்," என்று முதல் பதிவில் அவர் கூறியுள்ளார்.
"ஒரு குளிர் சாதனப் பெட்டியினுள் இப்போது ஒளிந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்," என்று அடுத்து பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கி சத்தங்களையும் அவர் கேட்டுள்ளார்.
உணவு விடுதியை விட்டு வெளியே வந்ததும், அங்கு பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரின் காணொளியைப் பதிவு செய்து அதையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
தனது 10 வயது மகள், இனேஸ் கானுடன் அவர் அங்கு சென்றிருந்தார்.
வியாழன் மாலைக்குப் பிறகு அவர் புதிய பதிவுகளை தனது பக்கத்தில் குறிப்பிடவில்லை.
ஸ்னூகர் விளையாட்டு வீரர் ரோனி ஓ'சல்லிவனுடன் தற்போது உறவில் உள்ள அவர், நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு தொடரில் நடித்து வருகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :