You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திங்களன்று அடுத்த இணைய தாக்குதல் ; எச்சரிக்கும் கணினி பாதுகாப்பு வல்லுநர்கள்
கடந்த வெள்ளிக்கிழமையன்று உலகளவில் நடத்தப்பட்ட இணைய வழி தாக்குதலில் சுமார் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட கணினி அமைப்புகள் பாதிப்படைந்த நிலையில், அடுத்து ஒரு மிகப்பெரிய இணைய தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த கணினி பாதுகாப்பு வல்லுநரான ''மால்வேர் டெக்'' என்பவர், ''மற்றொரு இணைய தாக்குதல் வந்து கொண்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமையன்று தாக்கலாம்'' என்று எச்சரித்துள்ளார்.
ரான்சம்வேர் தாக்குதலின் வீரியத்தை கட்டுப்படுத்த இவர் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணினியில் பயன்பாட்டாளர்களின் தரவுகளை கட்டுப்பாட்டிற்குள் எடுத்த இந்த வைரஸ் ஸ்பெயின், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்பட 100 நாடுகளுக்கு பரவியது.
இணைய தாக்குதல் காரணமாக பிரிட்டனில் சில மருத்துவமனைகள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த சிகிச்சை ஆலோசனைகள் மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.
நேற்றைய தினம் (சனிக்கிழமை) பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஆம்பெர் ரட், பாதிக்கப்பட்ட மொத்த தேசிய சுகாதார சேவைகளில் 6-ஐ தவிர்த்து மற்றவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த கணினி வைரஸை எதிர்த்து செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
'இதை நிறுத்துவதற்கு காரணமில்லை'
கணினிகளை கட்டுப்பாட்டில் எடுத்தவுடன், தகவல்களை கட்டுப்படுத்தும் இந்த வைரஸ், கணினியில் உள்ள தரவுகளை மீண்டும் பயன்படுத்த சுமார் 300டாலர்கள் வரை மெய்நிகர் பணமான பிட்காயின் பணத்தை செலுத்துமாறு கணினி பயன்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுத்தது.
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய மூன்று கணக்குகளை பிபிசி ஆராய்ந்த போது, அவை ஏற்கனவே கணினியை ஊடுருவியவர்களுக்கு சுமார் 22,080 பவுண்டிற்கு ஈடான தொகையை கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.
பெயர் வெளியிடாமல் ரகசியமாக செயல்படும் மால்வேர் டெக் எனப்படும் தீய மென்பொருள் வல்லுநர் ஒருவர், வைரஸின் பரவலை அறிய இணைய தளத்தை பதிவு செய்தததை தொடர்ந்து வைரஸ் பரவல் முடிவுக்கு வந்தது.
அந்த வல்லுநரை ' ஆபத்து கால நாயகன்' என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
22 வயது நிரம்பிய வல்லுநர் பிபிசியிடம் பேசுகையில்,''தற்போது பொதுமக்கள் தங்களுடைய கணினிகளில் பேட்ச் எனப்படும் அப்டேட் மென்பொருளை உடனடியாக நிறுவ வேண்டும்.
''நாங்கள் இதை ஒருமுறை நிறுத்திவிட்டோம், ஆனால் மீண்டும் மற்றொன்று விரைவில் வரும். அதனை எங்களால் தடுத்து நிறுத்த முடியாது.
''இதில் நிறைய பணம் புழங்குகிறது. இதை நிறுத்துவதற்கு அவர்களுக்கு எந்த காரணமும் இல்லை. வைரஸின் கோட்டை மாற்றி மீண்டும் அனைத்தையும் ஆரம்பிக்க பெரிய முயற்சிகள் தேவைப்படாது'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்