You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பாதி எடை குறைந்த 500 கிலோ பெண்
அதிக எடை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகளில் முக்கியத்துவம் பெற்ற எகிப்து நாட்டின் ஏமான் அஹ்மத் அப்த் அல் ஏதி, மீண்டும் செய்திகளில் பிரபலமாகியிருக்கிறார்.
மும்பை சைஃபி மருத்துவமனையில் எடைகுறைப்பு அறுவைசிகிச்சை மேற்கொண்ட ஏமானின் எடை இப்போது 250 கிலோவாகிவிட்டதாம்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு, சைஃபி மருத்துவமனையில், மருத்துவர் முஃப்ஃபஜல் லக்டாவாலாவின் தலைமையில் மருத்துவர் குழுவினர் எடைகுறைப்பு அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.
அப்போது உலகில் அதிக எடை கொண்ட பெண்ணாக இருந்த அப்த் அல் ஏதி தற்போது எடையை இழந்ததால், முதலிடத்தையும் இழந்துவிட்டார். மற்ற விஷயங்களில் முதலிடத்தை இழந்தால் வருத்தப்படலாம், ஆனால் இந்த விசயத்தில் முதலிடத்தை இழந்த்து மகிழ்ச்சியளிக்கூடியது தானே?
கின்னஸ் சாதனை புத்தகத்தின் படி, உலகில் தற்போது அதிக எடை அதிகமானவர் அமெரிக்காவின் பாலின் பாட்டர். அவர் 2012 ஆம் ஆண்டு 293.6 கிலோ எடை இருந்தார்.
அப்த் அல் ஏதி, உடல் பருமன் காரணமாக 25 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தார், வெளியே எங்குமே சென்றதில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
இப்போது, ஏதியால் வீல் சேரில் நீண்ட நேரம் அமர முடிவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பின்பான ஏதியின் புகைப்படங்களும் வெளியிடப்படுள்ளன.
அப்த் அல் ஏதியின் எடை குறையத் தொடங்கிவிட்டதாக, மருத்துவர் லக்டாவாலா ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார். இளமைப்பருவத்தில் ஏதிக்கு ஏற்பட்ட பக்கவாத நோயினால் உடலின் ஒரு பகுதி முடங்கிப் போயிருக்கும் ஏதிக்கு பேசுவதிலும், விழுங்குவதிலும் பிரச்ச்னை இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்போது மருத்துமனை எதற்காக காத்திருக்கிறது தெரியுமா? சி.டி ஸ்கேன் இயந்திரத்தில் பொருந்தும் அளவுக்கு ஏதியின் எடை குறைந்தால், அவருக்கு ஸ்கேன் எடுத்து, அவருக்கு பக்கவாதம் வந்த்தற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளமுடியும் என்பதற்காக.
ஏதிக்கான அடுத்தக்கட்ட சிகிச்சையில், ஆறு மாதங்களுக்கு பிறகு, எடை குறைப்புக்கான சோதனை மருந்துகள் கொடுக்கப்படும். அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்றில் இருந்து இதற்காக மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளில் மருத்துமனை இறங்கியிருக்கிறது.
பிறந்தபோது அப்த் அல் ஏதியின் எடை ஐந்து கிலோ எடை. ஆனால், எலிஃபண்டியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, நோய்த்தொற்றின் காரணமாக அவருடைய உடல் எடை கூடத்தொடங்கியது என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
11 வயதில் மிகவும் அதிக எடையுடன் இருந்த அவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார்.
சிகிச்சைக்காக இந்தியா வர விரும்பியபோது, அதிக எடை காரணமாக அவருக்கு மருத்துவ விசா கிடைக்கவில்லை. ஏமானுக்கு மருத்துவ விசா கிடைப்பதில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவி செய்தார்.
கடந்த டிசம்பர் மாதம், மருத்துவர் லக்டாவாலா, ஏமானின் புகைப்படத்தோடு சுஷ்மா ஸ்வராஜுக்கு டிவிட்டர் செய்தியில் உதவி கோரியிருந்தார். "எகிப்து நாட்டைச் சேர்ந்த ஏமான் அகமதின் உடல் எடை 500 கிலோ, பொதுவான நடைமுறைகளின்படி அவருக்கு மருத்துவ விசா மறுக்கப்பட்டுவிட்டது"
மருத்துவரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர், "இந்த விசயத்தை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி, நான் அவருக்கு தேவையான உதவிகளை நிச்சயமாக செய்கிறேன்"என்று கூறியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்