You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜி.பி. முத்து ஆர்மி vs ஜனனி ஆர்மி: ட்விட்டரில் முதல் நாளே போட்டியை தொடங்கிய பிக் பாஸ் ரசிகர்கள்
பிக் பாஸின் ஆறாவது சீசன் துவங்கி இரண்டே நாட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான ஜிபி முத்துவுக்கும் இலங்கையைச் சேர்ந்த ஜனனிக்கும் ரசிகர் படை உருவாகிவிட்டது. ட்விட்டரில் இவர்கள் என்ன செய்கிறார்கள்?
பிக் பாஸின் ஆறாவது சீஸன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று துவங்கியது. இதில் முதல் கட்டமாக இருபது பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த இருபது பேரில் வீட்டில் நுழைந்த தருணத்திலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றவராக இருக்கிறார் டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து.
உடன்குடியைச் சேர்ந்த ஜிபி முத்து, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் வசிப்பவர். டிக்டாக் இருந்த காலகட்டத்தில், அதில் செய்த வீடியோக்கள் மூலம் பிரபலமான ஜிபி முத்து, டிக்டாக் தடைசெய்யப்பட்ட பிறகு, யூடியூபில் வீடியோக்கள் மூலம் தனது ரசிகர்களிடம் தொடர்புகொள்ள ஆரம்பித்தார். குறிப்பாக, அவருக்கு வந்து குவியும் கடிதங்களை அவர் படிக்கும் வீடியோக்கள், ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை.
பிக் பாஸின் கடந்த சீஸனிலேயே ஜி.பி. முத்து இடம்பெறுவார் எனப் பேச்சுகள் அடிபட்ட நிலையில், இந்த முறை அவரது அறிமுகம் ரசிகர்களிடம் பெறும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. துவக்க நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஆதாம் - ஏவாள் கதையைக் கூறியபோது, ஆதாம் என்றால் யார் என்று கேட்டு அதிரவைத்தார்.
அவருடைய எளிய பேச்சு, அப்பாவித்தனம் போன்றவை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், அவரை ஆதரிக்கும்விதமாக #GPMuthuArmy என்ற ஹாஷ்டாகை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆனால், ஜி.பி. முத்துவுக்குப் போட்டியாக இலங்கையைச் சேர்ந்த ஜனனி என்ற பெண்ணுக்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்துவருகிறது.
இலங்கையைச் சேர்ந்த ஜனனி, அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்துவருகிறார். 21 வயதேயான இவர், தன் சிறு வயதிலிருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்ததாக தன்னுடைய அறிமுகத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான், #GPMuthuArmy என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக ஆரம்பித்துள்ளது. அதே ஹாஷ்டாகையும் #JananiArmy என்ற ஹாஷ்டாகைப் பயன்படுத்தும் ஜனனியின் ஆதரவாளர்கள், ஜனனிக்கு ஆதரவாக பதிவுகளைச் செய்துவருகின்றனர்.
வழக்கமாக, பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி சில நாட்களுக்குப் பிறகுதான் அதில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, மனதைக் கவர்கிறார்களோ அவர்களுக்கு ஆர்மி என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தினர் திரள்வார்கள். ஆனால், ஜி.பி. முத்துவுக்கும் ஜனனிக்கும் முதல் நாளே ரசிகர்கள் திரண்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனைவிட, ஜி.பி. முத்துவுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதாக சிலர் பதிவிட்டுள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்தும் ஜி.பி. முத்துவின் அப்பாவித்தனத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த சீஸனில் மக்கள் பிக்பாஸைப் பார்ப்பதற்கே ஜி.பி. முத்துதான் காரணம் என்கிறார் இதற்கு முன் பிக்பாஸில் கலந்துகொண்ட ஜூலி.
ஜி.பி. முத்து கலந்துகொள்வதன் காரணமாக, கடந்த எல்லா சீசன்களையும்விட, இந்த முறை பிக் பாஸ் நிழ்ச்சியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்கிறார்கள் சிலர்.
சிலர் ஜனனிக்கு என தனியான ட்விட்டர் பக்கங்களையும் துவங்கியுள்ளனர்.
சிலர், ஜி.பி. முத்து, ஜனனி ஆகிய இருவரில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என வாக்கெடுப்புகளையும் நடத்திவருகின்றனர்.
இதுபோல ஆர்மிகளைத் துவங்கும் பழக்கம், பிக் பாஸின் முதல் சீசனில் ஓவியாவிலிருந்து ஆரம்பித்தது. அந்த சீசனில், அவர் பல்வேறு தாக்குதல்களுக்கும் நடுவில் நேர்மையாக நடந்துகொண்டது பலரது மனதையும் கவர்ந்த நிலையில், அவருக்கென ரசிகர்படை ட்விட்டரில் துவங்கப்பட்டது. ஆனால், அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்