'பாஜக-வின் வெற்றி 2024ஆம் ஆண்டின் ஹாட் டிரிக்கை உறுதி செய்துள்ளது' - தேர்தல் முடிவுகள் குறித்து மோதி

ஐந்து மாநிலத் தேர்தல்கள்

பட மூலாதாரம், Getty Images

நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்க வைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறது என பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார்.

நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து இன்று டெல்லியில் பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோதி. அப்போது அவர், “இன்றைய ஹாட் டிரிக் வெற்றி, 2024ம் ஆண்டுக்கான ஹாட் டிரிக்கை உறுதி செய்துள்ளது.” என்றார்.

தொண்டர்களிடம் 40 நிமிடங்கள் உரையாற்றிய நரேந்திர மோதி, “இன்றைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்ற கோஷம் வெற்றி அடைந்துள்ளது. நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் வெற்றியடைந்துள்ளன” என்று கூறினார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மக்கள் தம் மீது அன்பை பொழிந்துள்ளனர் என்று தெரிவித்த மோதி, “பாஜக வெற்று வாக்குறுதிகளை வழங்காது, மக்களுக்கான ஆட்சியை வழங்கும். இந்திய வாக்காளர்களுக்கு யார் சுயநலவாதிகள், யார் தேசத்தின் நன்மைக்காக பாடுபடுகிறார்கள் என்பது தெரியும்.” என்ன பேசினார்.

இந்த வெற்றி பெண்கள் பழங்குடிகள் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வெற்றி என்று அவர் தெரிவித்தார்.

“ ‘நான் வெற்றி பெற்றுளேன்’ என ஏழைகள், விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இன்றைய வெற்றி அமைந்துள்ளது. அவர்கள் ஒவ்வொருக்குமான தனிப்பட்ட வெற்றியாகும். ஒவ்வொரு ஏழையும், ஒவ்வொரு பழங்குடி சகோதர சகோதரியும், ஒவ்வொரு விவசாயியும் இன்று வெற்றி பெற்றுள்ளார். 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக பார்க்க விரும்பும் ஒவ்வொரு இந்தியரும் இன்று வெற்றி பெற்றுள்ளார்” என்று அவர் பேசினார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்வைத்ததை மறைமுகமாக சாடினார் பிரதமர் நரேந்திர மோதி. “இந்த தேர்தலில் சாதியால் நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சிகள் நடந்தன. எனக்கு நான்கு சாதிகள் தான் எப்போதும் முக்கியம் – பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள். இந்த நான்கு பேரை மேம்படுத்துவதன் மூலமே, நாடு முன்னேற முடியும்” என்று அவர் கூறினார்.

'பாஜக-வின் வெற்றி 2024ஆம் ஆண்டின் ஹாட் டிரிக்கை உறுதி செய்துள்ளது' - தேர்தல் முடிவுகள் குறித்து மோதி

பட மூலாதாரம், Getty Images

மேலும் பாஜகவின் பலத்துக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்தார். “பெண்கள் சக்தி பாஜகவின் முக்கிய தூண். இந்த தேர்தல்களில், இந்த நாட்டின் பெண்கள் நம்மை வாழ்த்தியுள்ளனர்.” என்றார்.

“ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் ஆட்சியில் இருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளனர். ஏனென்றால் இந்நாட்டின் இளைஞர்களுக்கு பாஜக அவர்களின் நலன்களுக்காக பாடுபடுகிறது என தெரியும்.” இன்று பேசிய மோதி தெலுங்கானா மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

“தெலங்கானா மக்கள் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தெலங்கானாவில் பாஜக வளர்ந்து கொண்டே வருகிறது” என்று அவர் கூறினார்.

மேலும்“இந்த தேர்தல்களின் அதிர்வுகள் உலகெங்கிலும் உணரப்படும். உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு, 2047ம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கும்” என தெரிவித்தார்.

பாஜக அல்லாத பிற கட்சிகளின் மாநில அரசுகளையும் எதிர்க்கட்சிகளையும் சாடி பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “ஊழல், பிரிவினைவாதம், குடும்ப அரசியலுக்கு இடம் இல்லை என்பதை இன்றைய முடிவுகள் உணர்த்துகின்றன.

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களிலிருந்து மக்கள் பலன் பெறுவதை தடுக்கும் மாநில அரசுகளுக்கு இந்த முடிவுகள் ஒரு பாடமாகும்.” என்றார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக வினர் இதே உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், “இன்று கிடைத்திருக்கும் உற்சாகத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாஜக தொண்டரின் பொறுப்பும் இப்போது அதிகரித்துள்ளது.” என்று அவர் கூறினார்.

பா.ஜ.க, காங்கிரஸ், தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்

பட மூலாதாரம், Getty Images

தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றி உறுதியாகிவிட்டது.

மற்ற மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.வின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

இவற்றில், மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே இருந்த தனது ஆட்சியை பா.ஜ.க தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சத்தீஸ்கரிலும், ராஜஸ்தானிலும் காங்கிரசிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இது தொடர்பாக பிபிசியின் நேரலைப் பக்கங்களின் இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி என்ன சொன்னார்?

இந்த வெற்றிகளுக்குப் பின், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோதி, மக்களின் தீர்ப்புக்கு அடிபணிவதாகத் தெரிவித்திருக்கிறர்.

மேலும், மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வின் வெற்றி, மக்கள் நல்ல நிர்வாகத்துடன் உறுதியாக நிற்பதைக் காட்டுகிறது என்றிருக்கிறார்.

அதே சமயம், தெலங்கானா தோல்வி குறித்துப் பதிவிட்டிருக்கும் அவர், அம்மாநிலத்தோடு பா.ஜ.க.வுக்கு இருக்கும் பந்தம் வலுவானது என்றும், அம்மாநில மக்களுக்காகத் தொடர்ந்து உழைக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், X/Narendra Modi

ரேவந்த் ரெட்டி

பட மூலாதாரம், RevanthReddy/Twitter

படக்குறிப்பு, ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றிய காங்கிரஸ்

தெலங்கானாவில் காங்கிரசின் வெற்றி உறுதியாகிவிட்டது.

காங்கிரஸ் 64 தொகுதிகளிலும், பாரத் ராஷ்டிர சமிதி 39 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸின் மாநிலத் தலைவரான ரேவந்த் ரெட்டியின் பெயர் பெருமளவில் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களிடையே அவர் மிகப்பிரபலமாக இருந்தார். பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்தனர்.

இந்நிலையில் அடுத்த தெலங்கானா முதல்வராக அவரது பெயர் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரேவந்த் ரெட்டி, தலைமைச் செயலகத்தின் கதவுகள் சாமானியர்களுக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என்றார்.

இனி, தெலங்கானாவில் நிர்வாகம் கடந்த காலத்தில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றார்.

மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஏற்றுக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்ற காங்கிரஸுக்கு ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம் என்று ரேவந்த் ரெட்டி கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அதிகாரம் அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

தெலங்கானா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தங்களது வேட்பாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்ல, சொகுசுப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன

தெலங்கானா மாநில பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் என்.வி.சுபாஷ், இது காங்கிரஸ் கட்சிக்குத் தனது வேட்பாளர்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது என்றார்.

தெலங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்டிர சமிதி தற்போது ஆளும் கட்சியாக உள்ளது. தெலங்கானாவில் கடந்த 2018-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கு ராஷ்டிர சமிதி 88 தொகுதிகளை வென்றது, அப்போது, காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

தெலங்கானாவில் போட்டி மிகக் கடுமையாக இருந்தது. தெலங்கானா மாநிலம் உருவானதிலிருந்து இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது பி.ஆர்.எஸ். (முன்பு டி.ஆர்.எஸ்.). தான் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தீவிரமாகக் களமிறங்கியது அந்தக் கட்சி.

ஆனால், கடந்த இரண்டு தேர்தல்களிலும் படுதோல்வியைச் சந்தித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்த முறை, பி.ஆர்.எஸ்-க்கு கடுமையான போட்டியைக் கொடுத்தது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் 118 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது.

பா.ஜ.க. 111 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. இது தவிர ஏ.ஐ.எம்.ஐ.எம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் களத்தில் இருந்தன.

ராஜஸ்தான் தேர்தல், வசுந்தரா ராஜே

பட மூலாதாரம், ANI

ராஜஸ்தானின் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க

ராஜஸ்தானில் பா.ஜ.க 115 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், பிற கட்சிகள் 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

ஆட்சியமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போது, பாஜக 115 இடத்தில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதலமைச்சரும், ஜல்ரபதன் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளருமான வசுந்தரா ராஜே 3,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராஜஸ்தானில் 5 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திய வசுந்தரா ராஜே, இது பிரதமர் மோதியின் ‘அனைவருக்குமான வளர்ச்சி’ திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றார்.

மேலும் பேசிய அவர், ராஜஸ்தான் மக்கள் காங்கிரஸ் அரசின் மோசமான நிர்வாகத்தையும் நிராகரித்துள்ளனர் என்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகிறது. தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 199 இடங்களில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மத்தியப் பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவ்ராஜ் சிங் சவுகான்

மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்த பா.ஜ.க

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க 166 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது. காங்கிரஸ் 62 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றது.

பாஜக சுமார் 72% தொகுதிகளிலும், காங்கிரஸ் 28% தொகுதிகளிலும் பெற்றுள்ளன.

தற்போதைய முதல்வரும் பா.ஜ.க.வின் புத்னி தொகுதி வேட்பாளருமான சிவ்ராஜ் சிங் சவுகான் சுமார் 1 லட்சத்து 60 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மத்தியப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது. பெரும்பான்மையான இடங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றிருக்கிறது. கருத்துக் கணிப்புகளில் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

முன்னிலை நிலவரம் குறித்து பேசிய மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, "பாஜக 125-150 இடங்களில் வெற்றி பெறும்," என்றார்.

மேலும், மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்லாமல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரிலும் பாஜக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 இடங்கள் உள்ள நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் பெறவேண்டும்.

முன்னிலை வகிக்கும் பா.ஜ.க.வின் தொண்டர்கள் மத்தியப் பிரதேசத்தில் கொண்டாட்டங்களை நடத்தித் தங்கள் மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது குடும்பத்தினருடனும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருடனும் சேர்ந்து தொண்டர்களைச் சந்தித்தார்.

பா.ஜ.க இந்தத் தேர்தலை, மகளிருக்கான தனது திட்டங்களை நம்பிச் சந்தித்தது. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதம் 1,250 ரூபாய் வழங்கும் ‘லாட்லி பெஹ்னா யோஜனா’ போன்ற திட்டங்களை பா.ஜ.க செயல்படுத்தியிருந்தது.

காங்கிரஸ் கட்சி இதனை தேர்தல் விளம்பரம் என்று விமர்சித்திருந்தது.

இந்தத் தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.கவும் தனித்துப் போட்டியிட்டன. இரு கட்சிகளுமே 230 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் (பி.எஸ்.பி) துலேஷ்வர் சிங் மார்க்கம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரக் கட்சியும் (ஜி.ஜி.பி) கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஜிஜிபி கட்சியானது, கோண்ட் இன மக்களுக்கென தனியாக கோண்ட்வானா என்ற மாநிலத்தை அமைக்க வேண்டுமெனப் போராடிவரும் கட்சி. இந்தக் கூட்டணியில் ஜிஜிபி 52 இடங்களிலும் பிஎஸ்பி 178 இடங்களிலும் போட்டியிட்டது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து போட்டியிடவே விரும்பியது. ஆனால், அது நடக்காத நிலையில் 80 இடங்களில் தனித்துப் போட்டியிட்டது. சந்திரசேகர ஆஸாத் தலைமையிலான ஆஸாத் சமாஜ் கட்சி 80 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 69 இடங்களிலும் போட்டியிட்டன. இவை தவிர, இடதுசாரிக் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவையும் சில இடங்களில் போட்டியிட்டன.

சத்தீஸ்கர், ரமன் சிங்
படக்குறிப்பு, ரமன் சிங்

சத்தீஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய பா.ஜ.க

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.

பாஜக 56 தொகுதிகளிலும் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.

தற்போது முதலமைச்சராக இருக்கும் பூபேஷ் பாகெல், பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அவர் தனது உறவினரும் பா.ஜ.க வேட்பாளருமான விஜய் பாகெலை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ரமன் சிங், ராஜ்னந்த்காவ் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.

ரமன் சிங், தற்போதைய முதல்வர் பூபேஷ் பகல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் அதனால்தான் மக்கள் பிரதமர் மோதியின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய அவர், பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்பியிருக்கின்றனர் என்றார். மேலும் அவர் காங்கிரஸ் ஆட்சியின் மீது ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பெண்களுக்கான நலத்திட்டங்களும், முன்னேற்றத்திற்கான திட்டங்களும் தங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததாக அவர் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)