காணொளி: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் - உங்கள் வாக்குரிமையை பாதுகாப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் - உங்கள் வாக்குரிமையை பாதுகாப்பது எப்படி?
காணொளி: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் - உங்கள் வாக்குரிமையை பாதுகாப்பது எப்படி?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர், Special Intensive Revision - SIR) இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற இருக்கின்றன.

பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பல சர்ச்சைகளுக்குள்ளானது. தமிழ்நாட்டிலும் ஆளும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேவேளையில் அதிமுகவும் பாஜகவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. எஸ்.ஐ.ஆர் பற்றி வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

எஸ்.ஐ.ஆர் என்றால் என்ன?

வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) - Special Summary Revision (SSR) தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

எஸ்.எஸ்.ஆர் நடைமுறையில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது, இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவது மற்றும் வாக்காளரின் சுய விவரங்களில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் நடக்கின்றன. இது அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.

எஸ்.ஐ.ஆர் என்பது தேவையைப் பொருத்து தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் சிறப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் கடைசியாக 2002-2005 காலகட்டத்தில் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்பட்டது. எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

கடைசியாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

எத்தனை கட்டங்களாக இது நடைபெறும்?

நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி முடிவடையும் எஸ்.ஐ.ஆர் பணிகள் 5 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். இதற்காக அவர்களுக்கு அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

  • வீடுதோறும் கணக்கெடுப்பு: 04.11.2025 - 04.12.2025
  • வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.12.2025
  • பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் - 09.12.2025 - 08.01.2026
  • விசாரணை மற்றும் சரிபார்த்தல் - 09.12.2025 - 31.01.2026
  • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 07.02.2026

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு