இறந்த மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தை பெற விரும்பும் பெற்றோர் - அனுமதியளித்த டெல்லி உயர்நீதிமன்றம்

இறந்த மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தை பெற விரும்பும் பெற்றோர் - நான்கு ஆண்டு சட்டப் போராட்டம் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

இந்தியாவை சேர்ந்த தம்பதிக்கு, அவர்களது இறந்த மகனின் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களை அவர்களிடம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் பேரக்குழந்தை பெற முடியும் என்று அந்தத் தம்பதி மகிழ்ச்சியில் உள்ளனர்.

நான்கு ஆண்டுக்கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு டெல்லி உயர்நீதிமன்றம் சிறப்பு வாய்ந்த இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

“நாங்கள் அதிர்ஷ்டமில்லாதவர்கள், எங்கள் மகனை இழந்துவிட்டோம். ஆனால், நீதிமன்றம் எங்களுக்கு விலை மதிப்பில்லாத பரிசை வழங்கியுள்ளது. இப்போது நாங்கள் மீண்டும் எங்கள் மகனைப் பெற முடியும்,” என்கிறார், பிபிசியிடம் பேசிய ஹர்பீர் கௌர்.

வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2020ஆம் ஆண்டு, கருத்தரிப்பு ஆய்வகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தங்கள் மகனுடைய விந்தணுக்களை டெல்லி கங்கா ராம் மருத்துவமனை வழங்க மறுப்பு தெரிவித்த நிலையில், ஹர்பீர் கௌர், அவரது கணவர் குர்விந்தர் சிங் இருவரும் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுத்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அவர்களுடைய 30 வயது மகன் ப்ரீத் இந்தர் சிங், கடந்த ஜூன் 2020ஆம் ஆண்டு ஒருவகை ரத்தப் புற்றுநோயான நான்-ஹாட்கின்ஸ் லிம்போமாவால் (Non-Hodgkin’s Lymphoma) பாதிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

“என் மகனுக்கு கீமோதெரபி சிகிச்சை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு, சிகிச்சை காரணமாக அவருடைய விந்தணுக்கள் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்பதால் அவற்றைச் சேகரித்து வைக்குமாறு மருத்துவமனை கூறியது,” என பிபிசியிடம் தெரிவித்தார் குருவிந்தர் சிங்.

திருமணமாகாத ப்ரீத் இந்தர் இதற்கு சம்மதித்தார். கடந்த 2020, ஜூன் 27 அன்று அவருடைய விந்தணுக்கள் உறைநிலையில் வைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது. அந்த ஆண்டின் செப்டம்பர் தொடக்கத்தில் அவர் உயிரிழந்தார்.

பின்னர், சில மாதங்கள் கழித்து மகனின் மறைவால் துயருற்றிருந்த அவருடைய பெற்றோர், உறைய வைக்கப்பட்ட மகனின் விந்தணுக்களை கேட்டுள்ளனர். ஆனால் அதைத் தருவதற்கு மருத்துமனை மறுத்துவிட்டது. பின்னர், அவர்கள் இருவரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அறுபதுகளில் இருக்கும் அந்தத் தம்பதி, தங்கள் மகனின் விந்தணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையைத் தாங்கள் வளர்க்க நினைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்கள் இறப்புக்குப் பின்னர் அந்தக் குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பையும் அவருடைய இரு மகள்கள் ஏற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

இறந்த பின்னர் இனப்பெருக்கம் குறித்து சர்வதேச நாடுகளில் ஒருமித்த கருத்து இல்லை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இறந்த பின்னர் இனப்பெருக்கம் குறித்து சர்வதேச நாடுகளில் ஒருமித்த கருத்து இல்லை

கடந்த வாரம் நீதிபதி பிரதீபா சிங் வழங்கிய உத்தரவில், “விந்தணுக்களை வழங்கியவரின் சம்மதம் இருந்தால், அவர் இறந்த பின்னர் அதன்மூலம் இனப்பெருக்கம் செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகள் இல்லாத நிலையில், விந்தணு மாதிரிகளை பெற்றோர்கள் பெறுவதற்கு உரிமை இருப்பதாகவும் அக்குழந்தை அவர்களின் சட்டப்பூர்வ வாரிசாகக் கருதப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மகனின் “மரபை” தொடர வேண்டும் என்று விரும்பியதாலேயே தாங்கள் நீதிமன்றத்தை அணுகியதாக அத்தம்பதி தெரிவிக்கின்றனர். தங்கள் மகனுடனான பிணைப்பைப் பாதுகாக்கவும் தங்களின் குடும்பப் பெயர் தொடரவும் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு உதவி செய்யும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

"என் மகன் தனது சகோதரிகளை நேசித்தான். அவனுடைய நண்பர்களால் அவன் நேசிக்கப்பட்டான். ஒவ்வொரு நாள் காலையும் அவன் முகத்தைப் பார்த்த பிறகே நான் என் வேலையைத் தொடங்குவேன்,” என்கிறார் கௌர். தனிநபர் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, தனது மகனின் புகைப்படத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொள்ள அவர் விரும்பவில்லை.

தங்கள் மகனுடைய விந்தணுக்களை வாடகைத்தாய் மூலம் பயன்படுத்த விரும்புவதாகவும் அவர்களுடைய உறவுக்கார பெண் ஒருவர் வாடகைத் தாயாக இருக்க சம்மதித்து உள்ளதாகவும் கௌர் கூறினார்.

“எங்கள் குடும்பத்திற்கு உள்ளேயே இதைத் தக்கவைக்க நினைக்கிறோம்,” என்றும் அவர் தெரிவித்தார். இந்திய சட்டத்தின்படி வணிகரீதியாக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது சட்ட விரோதமானது.

இந்த வழக்கு அரிதானது என்றாலும், முன்னுதாரணம் இல்லாதது அல்ல என்று பிபிசியிடம் கூறுகிறார் வழக்கறிஞர் சுருச்சி அகர்வால்.

முந்தைய உதாரணங்கள்

இறந்த மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தை பெற விரும்பும் பெற்றோர் - நான்கு ஆண்டு சட்டப் போராட்டம் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதுபோன்ற முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

சுருச்சி அகர்வால், புனேவை சேர்ந்த 48 வயது பெண் ஒருவரின் வழக்கை நீதிமன்றத்தில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜெர்மனியில் அவரது 27 வயது மகன் மூளைப் புற்றுநோயால் இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளார்.

திருமணமாகாத அவருடைய மகனும், தன்னுடைய இறப்புக்குப் பின் விந்தணுக்களைப் பயன்படுத்த தனது தாய் மற்றும் சகோதரிக்கு அனுமதி வழங்கியுள்ளார். அவருடைய விந்தணுக்களை ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை அவர்களிடம் வழங்கியது.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்கையிங் சாகசத்தின்போது நிகழ்ந்த விபத்தில் இறந்துபோன தனது 21 வயது மகனின் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி, அவருடைய பெற்றோர் பேரக்குழந்தை பெற்றுக்கொள்ள நியூயார்க் உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இந்த உதாரணத்தையும் நீதிமன்றத்தில் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

நீதிபதி பிரதீபா சிங்கும் தனது உத்தரவில், கடந்த 2002ஆம் ஆண்டு காஸாவில் உயிரிழந்த 19 வயது வீரரின் பெற்றோர், தங்கள் மகனின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற சட்டரீதியாக அனுமதி பெற்றது உள்பட இறப்புக்குப் பின் இனப்பெருக்கத்திற்கு அனுமதியளித்த சில சம்பவங்களை மேற்கோள் காட்டினார்.

மருத்துவமனை மறுத்தது ஏன்?

இறந்த மகனின் விந்தணு மூலம் பேரக்குழந்தை பெற விரும்பும் பெற்றோர் - 4 ஆண்டு சட்டப் போராட்டம் வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் ஏற்கெனவே இருக்கும் நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அந்தத் தம்பதியின் கோரிக்கையை மறுத்தது ஏன்?

இந்தப் பிரச்னை தொடர்பாக, சர்வதேச அளவில் ஒருமித்த கருத்து நிலவவில்லை என்று நீதிபதி பிரதீபா சிங் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், செக் குடியரசு மற்றும் சில நாடுகளில் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற்று இறப்புக்குப் பின் இனப்பெருக்கத்திற்குப் (posthumous reproduction) பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. இறப்பினால் ஏற்படும் உணர்வுரீதியான சூழல் தணிவதற்காக ஓராண்டு காத்திருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா கூடுதல் நிபந்தனையை விதித்துள்ளது.

இத்தாலி, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், மலேசியா, பாகிஸ்தான், ஹங்கேரி, ஸ்லொவேனியா ஆகிய நாடுகளில் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் தெற்காசிய அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், பூடான், வங்கதேசத்தில் இதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை.

இதற்கென சட்டங்கள் உள்ள நாடுகளிலும், பெரும்பாலான வழக்குகளில் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகள் அல்லது விந்தணுக்கள் மூலம் அவர்களின் வாழ்க்கைத் துணையே கருவடைகின்றனர்.

இஸ்ரேலில் இறந்த தங்கள் மகன்களின் விந்தணுக்களைக் கோரும் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரஷ்யாவுடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், யுக்ரேன் படையினர் இலவசமாகத் தங்களின் விந்தணுக்களை உறைநிலையில் (cryopreservation) வைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் இன்னும் இது அரிதாகவே உள்ளது.

யுக்ரேன் படையினர் இலவசமாக தங்களின் விந்தணுக்களை உறைநிலையில் வைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் படையினர் இலவசமாக தங்களின் விந்தணுக்களை உறைநிலையில் வைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

சட்டப்படி வாழ்க்கைத் துணையிடம் மட்டுமே விந்தணுக்களை வழங்க முடியும் என்று கங்கா ராம் மருத்துவமனை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

திருமணமாகாத, இறந்த ஒருவரின் விந்தணுக்களை அவர்களுடைய பெற்றோர்கள் அல்லது சட்டப்படியான உரிமையாளரிடம் வழங்குவதற்குத் தெளிவான சட்டங்களோ அல்லது வழிகாட்டு நெறிமுறைகளோ இல்லை என மருத்துவமனை தெரிவித்தது.

குழந்தையில்லாத தம்பதிகள் அல்லது பெண்களுக்கானதே வாடகைத்தாய் குறித்த சட்டங்கள் என்றும் பேரக்குழந்தை வேண்டும் என விரும்புபவர்களுக்கானது அல்ல என்றும், இந்திய அரசும் அத்தம்பதியின் மனுவை எதிர்த்தது.

மேலும், ப்ரீத் இந்தர் திருமணமாகாதவர் எனத் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவின் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சட்டம் 2021இன் படி, தனிநபர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்குத் தடை உள்ளது. மேலும், அவர்களிடம் ப்ரீத் இந்தர் எழுத்துப்பூர்வ ஒப்பதலோ அல்லது வாய்வழி ஒப்புதலோ இல்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், அதனால் அவருடைய பெற்றோருக்கு அவரின் விந்தணுக்களை தானாகவே பயன்படுத்தும் அதிகாரம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு வெற்றி பெற்றது எப்படி?

அவருடைய பெற்றோரின் வழக்கறிஞர் சுருச்சி அகர்வால், விந்தணுக்களைச் சேமித்து வைப்பதற்கான படிவத்தை நிரப்பும்போது, செயற்கை கருத்தரிப்புதான் அதன் நோக்கம் என்பதை ப்ரீத் தெளிவாகக் குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

டெல்லி உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

அந்தப் படிவத்தில், தந்தை, மகன் இருவருடைய மொபைல் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவை அவர்களின் ஒப்புதலைக் குறிப்பதாக அவர் பபிபிசியிடம் தெரிவித்தார். விந்தணுக்களைப் பாதுகாத்து வைக்க அவருடைய தந்தை ஆய்வகத்திற்குப் பணம் செலுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

வாடகைத் தாய் முறையை வணிகரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் அதை ஒழுங்குபடுத்தி, மருத்துவமனைகளைக் கண்காணிக்கவும் இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், துயரத்தில் உள்ள பெற்றோரின் தனிப்பட்ட சுதந்திரத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்படவில்லை என்றும் வாதிட்டார்.

குழந்தை பெறும் நோக்கில் விந்தணுவை பயன்படுத்த ப்ரீத் இந்தர் இசைவு தெரிவித்ததாக, அகர்வாலின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

“ப்ரீத் இந்தருக்கு திருமணமாகவில்லை. குழந்தை பெறும் நோக்கிலேயே அவர் விந்தணுவை வழங்கினார். அவர் இறந்தபோது, அந்த விந்தணுக்கள் மரபியல் ரீதியான உடைமை எனும் வகையில், அவருடைய சட்டபூர்வ உரிமையாளர்களான பெற்றோருக்கு வழங்கப்பட வேண்டும்.”

இத்தகைய சூழலில், தங்கள் மகனின் விந்தணுக்களைப் பெறுவதில் இருந்து அவரது பெற்றோரைத் தடுக்க முடியாது, என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவின் மூலம், “எங்கள் மகனை திரும்பி கொண்டு வர முடியும் என்று எங்களுக்கு சிறு நம்பிக்கை கிடைத்துள்ளது.”

“என் மகனின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று நான் தினமும் வேண்டினேன். என்னுடைய பிரார்த்தனை நிறைவேற நான்கு ஆண்டுகள் ஆகியுள்ளன,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)