ஜனநாயகன் வழக்கில் தனி நீதிபதி உத்தரவு ரத்து - உயர் நீதிமன்ற தீர்ப்பு விவரம்

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடந்தது? வழக்கின் பின்னணி என்ன?

விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் நீடித்துவந்தது. படம் வெளியாகும் தேதி நெருங்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, "வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவு செய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஆகவே வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே மேல் முறையீடு செய்தது வாரியம். அந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவா, ஜி. அருள் முருகன் அமர்வு விசாரணை செய்துவந்தது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 20-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை நீதிபதிகள் ரத்து செய்தனர். மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தன் தரப்பை தெரிவிக்க வாய்ப்பளிக்காமல் வழக்கின் அம்சங்களுக்குள் தனி நீதிபதி சென்றிருக்கக் கூடாது எனக் கூறிய உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கை மீண்டும் தனி நீதிபதியே விசாரணை செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.

தயாரிப்புத் தரப்பு தாக்கல் செய்த மனுவில் வாரியத்தின் தலைவர் எடுத்த முடிவை எதிர்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை எதிர்க்கும் வகையில் மனுவை மாற்றித் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். இரு தரப்பிற்கும் தகுந்த வாய்ப்புகளை வழங்கி, தனி நீதிபதி இந்த வழக்கை முடிவுசெய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் பின்னணி

'ஜனநாயகன்' படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் பொங்கல் திருநாளை ஒட்டி ஜனவரி 9ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் தாமதம் நீடித்துவந்தது. படம் வெளியாகும் தேதி நெருங்கிய நிலையில், தயாரிப்பு நிறுவனம் ஜனவரி ஆறாம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் வாரியத்தின் சார்பாக கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜரானார். தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் சதீஷ் பராசரன் ஆஜரானார். ஜனவரி 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டிருக்கும் தாமதம் நிதி இழப்பையும் மன அழுத்ததையும் தயாரிப்பு நிறுவனத்திற்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்துவதாக சதீஷ் பராசரன் குறிப்பிட்டார்.

"இந்தப் படத்தின் பணிகள் முழுவதும் டிசம்பர் 15-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், டிசம்பர் 18-ஆம் தேதி வாரியத்தில் படம் கொடுக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் வகையிலான U/A சான்றிதழை வழங்க பரிந்துரைத்தனர்; படத்தில் சில மாறுதல்களைச் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த மாறுதல்களைச் செய்ய படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர்.

படத்தின் திருத்தம் செய்யப்பட்ட பிரதி டிசம்பர் 24-ஆம் தேதி வாரியத்திடம் அளிக்கப்பட்டது. வாரியம் சொன்னதையெல்லாம் செய்தும், அடுத்த பத்து நாட்களுக்கு எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகவிருந்ததால் பல முறை வாரியத்திற்கு நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், படத்தை மேல் முறையீட்டிற்கு (ரிவைசிங் கமிட்டி) அனுப்ப முடிவெடுத்திருப்பதாக வாரியத்தின் சென்னை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. இந்தப் படத்தில் ராணுவம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்தும் மத உணர்வுகளை சில காட்சிகள் புண்படுத்துவதாகவும் வந்த புகாரை அடுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதம் கூறியது. ஆனால், புகார் அளித்தவர் யார் என்ற விவரம் தயாரிப்புத் தரப்புக்கு அளிக்கப்படவில்லை" என தயாரிப்புத் தரப்பு வாதிட்டது.

இதற்குப் பிறகு இந்தப் படம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரையும் ஆவணங்களையும் ஜனவரி 7-ஆம் தேதி தாக்கல் செய்யும்படி வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 7ஆம் தேதி, படம் தொடர்பாக புகார் அளித்தவர் விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது ஆட்சேபங்களை சொல்லியும், படத்திற்கு சான்றிதழ் அளிப்பதற்கு முன்பாக அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லையென வாரியத்தின் தலைவருக்கு அவர் புகார் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் தலைவர் முடிவு செய்திருப்பதாகவும் அப்படி முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உண்டு எனவும் கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். "வாரியம் கூறிய திருத்தங்களைச் செய்த பிறகு சான்றிதழை வழங்க முடிவுசெய்யப்பட்டும், அதற்குப் பிறகு படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்ப முடிவுசெய்தது சட்டத்திற்கு அப்பாற்பட்டது. ஆகவே வாரியத் தலைவரின் முடிவைத் தள்ளிவைத்துவிட்டு, இந்தப் படத்திற்கு சான்றிதழை வழங்க வேண்டும்" என அன்றைய தினம் நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே தலைமை நீதிபதி அமர்வு முன்பாக ஆஜரான கூடுதல் சொலிஸிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார். அதனை மனுவாகத் தாக்கல்செய்யும்படி அந்த அமர்வு கூறியது. இந்த மனு ஜனவரி 9-ஆம் தேதி பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீ்வத்ஸவாவும் நீதிபதி ஜி. அருள் முருகனும் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியமென்ன என தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியது. தனி நீதிபதி முன்பாக நடந்த விசாரணை அவசர அவசரமாக நடந்ததாகவும் தங்கள் தரப்பு வாதங்களைச் சொல்ல போதுமான அவகாசம் கிடைக்கவில்லையென்று வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்திவைப்பதாகவும் வழக்கை ஜனவரி 20-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில், தயாரிப்புத் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, முன்கூட்டியே உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் தரப்பு அணுகியிருப்பதாக குறிப்பிட்டது. இதனால், மேல் முறையீட்டை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஜனவரி 20-ஆம் தேதி முடிவுசெய்ய வேண்டும் என்று கூறியது.

ஜனவரி 20ஆம் தேதி நடந்த விசாரணையில் இரு தரப்பின் வாதங்களும் நீண்டுகொண்டே சென்ற நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முடிவில், ஜனவரி 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு