You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் பிரபல உணவகத்தில் சூப்பில் சிறுநீர் கழித்த இளைஞர்கள் - நிறுவனம் செய்தது என்ன?
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி நியூஸ்
சீனாவின் மிகப்பெரிய ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ, இரண்டு பதின்ம வயதினர் ஹாட்பாட் சூப்பில் சிறுநீர் கழித்த கிளைக்குச் சென்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.
தனி அறை ஒன்றில் உணவருந்தும்போது இரண்டு சிறார்கள் சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் காணொளி கடந்த மாதம் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டது. இந்தச் சம்பவத்தை யார் படம் பிடித்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
குடிபோதையில் இருந்த அந்த 17 வயது சிறார்கள் அந்தச் சம்பவம் நடந்தவுடன் கைது செய்யப்பட்டனர்.
யாரும் அந்த சூப்பை குடித்ததாகத் தெரியவில்லை. ஹைடிலோ அதன் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறது. அனைத்து ஹாட்பாட் உபகரணங்கள் மற்றும் உணவு உண்ணும் பாத்திரங்களையும் மாற்றியிருப்பதாகவும், மற்ற பாத்திரங்களையும் தூய்மைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் பிப்ரவரி பிற்பகுதியில் நிகழ்ந்துள்ளது. ஆனால் அந்த வீடியோ சமுக ஊடகங்களில் பரவிய பல நாட்களுக்குப் பின்னரே நிறுவனத்திற்கு இது குறித்துத் தெரிய வந்தது.
அந்த நேரத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அந்த சிறார்களைத் தடுக்கத் தவறிவிட்டதாக ஹைடிலோ தெரிவித்தது. நகரில் அதற்குப் பல கிளைகள் இருந்ததால் எந்தக் கிளையில் இந்தச் சம்பவம் நடந்தது என்பதைக் கண்டறிய மேலும் ஒரு வாரம் பிடித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹைடிலோவில் உணவு அருந்துபவர்கள், தங்கள் உணவைச் சமைக்கத் தங்களது சொந்த ஹாட்பாட் உபகரணங்களையே பயன்படுத்துகின்றனர் என்பதுடன், ஒருமுறை தயாரிக்கப்பட்ட சூப் மீண்டும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் அந்தக் குறிப்பிட்ட ஹாட் பாட்டை அடுத்த வாடிக்கையாளர் பயன்படுத்தும் முன்னர் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டதா என்பதில் தெளிவில்லை.
"இந்தச் சம்பவத்தால் எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட வேதனையை எந்த வகையிலும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்பதை முழுமையாக உணர்ந்திருக்கிறோம், ஆனால் அதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள எங்களால் ஆனதைச் செய்வோம்," என்று அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பிப்ரவரி 24 முதல் மார்ச் 8ஆம் தேதி வரை அந்தக் கிளையில் உணவருந்திய வாடிக்கையாளர்களின் பணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் அவர்கள் செலுத்திய தொகையைவிட பத்து மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜியான்யாங்கில் தனது முதல் உணவகத்தைத் தொடங்கிய ஹைடிலோ நிறுவனம் வேகமாக வளர்ந்துள்ளது. தற்போது அந்த நிறுவனம் உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட உணவகங்களை நடத்துகிறது.
ஹைடிலோ அதன் வாடிக்கையாளர் சேவைக்கும், குடும்பங்களுக்கு உகந்த சூழலுக்கும் புகழ்பெற்றது. அங்கு காத்திருக்கும் நேரத்தில் பெண்களுக்கு மெனிக்யூர் செய்யப்படுவதுடன், சிறுவர்களுக்கு பஞ்சுமிட்டாய் வழங்கப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)