You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கைகுலுக்காத வீரர்கள்: டாஸ் முதல் பரிசளிப்பு வரை நீடித்த இறுக்கம் - பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆசிய கோப்பையில் குரூப் ஏ பிரிவில் துபாயில் நடைபெற்ற ஆறாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 11 முறை பாகிஸ்தானை வீழ்த்தி (11-3) தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் முதல் கடைசியில் கைகுலுக்காதது வரையிலும் விளையாட்டைத் தாண்டிய ஒருவித இறுக்கம் இரு அணி வீரர்களிடையே தென்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சி வரையிலும் அது நீடித்தது.
பஹல்காம் தாக்குதல் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன? பாகிஸ்தான் பயிற்சியாளர் என்ன சொன்னார்?
நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்த கேப்டன்கள்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமர், டாஸ் நிகழ்விலேயே தொடங்கிவிட்டது. இரு அணி கேப்டன்களும் நேருக்கும் நேர் பார்ப்பதை தவிர்த்ததோடு சம்பிரதாயத்துக்கு கைகுலுக்குவதையும் கூட தவிர்த்தனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி 8 ஆட்டங்களில் 7 இல் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்ற போதிலும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, பேட்டிங்கை தேர்வுசெய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இரு அணிகளும் தத்தமது முந்தைய ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடனே களமிறங்கினர்.
பாகிஸ்தானின் அதிவேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப்புக்கு இந்தமுறையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணியில் ரோஹித், கோலி, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் ஓய்வுபெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியும் பாபர் ஆஸம், முகமது ரிஸ்வான் இல்லாத ஓர் இளம் அணியுடன் இம்முறை களமிறங்கியது.
பவர்பிளேவில் பட்டையை கிளப்பிய பாண்ட்யா-பும்ரா
சல்மான் அகாவின் டாஸ் முடிவு தவறு என்பது ஆட்டத்தின் முதல் பந்திலேயே நிரூபணமானது. இன்னிங்ஸை 'வைடு'டன் தொடங்கிய பாண்ட்யா, அடுத்த பந்தில், அதிரடி இளம் பேட்டர் சைம் அயுப்பை 'கோல்டன் டக்' ஆக்கினார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட லென்த் பந்தை ஸ்கொயர் டிரைவ் ஆட முயன்ற சைம், சரியான டைமிங் இல்லாததால் பாயிண்ட் திசையில் பும்ராவிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் இது அவருக்கு இரண்டாவது 'கோல்டன் டக்'.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய, அதிரடி பேட்டர் முகமது ஹாரிஸ், பும்ரா பந்தில் பிக்-அப் ஷாட் விளையாடுகிறேன் என்று, டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இப்படியாக, பாண்ட்யாவும் பும்ராவும் ஒருவர் பந்தில் மற்றொருவர் கேட்ச் பிடித்து தங்கள் நன்றியை பரிமாறிக் கொண்டனர்.
பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் 42/2
முதல் ஓவரில் விக்கெட் எடுத்த பாண்ட்யா இரண்டாவது ஓவரில் லைனையும் லெங்த்தையும் தவறவிட, ஸமான் இரு பவுண்டரிகளை விளாசினார். தனது இரண்டாவது ஓவரில் பும்ரா வீசிய முழு நீள பந்தை, ஃபர்ஹான் லாங்-ஆன் திசையில் ஒரு அபாரமான சிக்ஸரை பறக்கவிட்டு, சோர்ந்து போயிருந்த பாகிஸ்தான் ரசிகர்களை தலைநிமிரச் செய்தார். முதல் நான்கு ஓவர்களில், ஆடுகளத்தில் கிடைத்த ஸ்விங்கை பும்ராவும் பாண்ட்யாவும் சரியாகப் பயன்படுத்தி வீசினர்.
கடந்த ஆட்டத்தை போலவே இந்தமுறையும் பவர்பிளேவிலேயே மூன்று ஓவர்களை பும்ரா வீசி முடித்தார். தட்டுத்தடுமாறி இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் ஸமான், ஃபர்ஹான் கைகொடுக்க பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் என்ற நிலைக்கு நகர்ந்தது.
இந்தியாவின் மும்முனை சுழலில் சிக்கிய பாகிஸ்தான்
பவர்பிளேவுக்கு பிறகு இருமுனையும் சுழல் தாக்குதலை கையிலெடுத்தார் சூர்யகுமார் யாதவ். கிரீஸில் இருந்து இறங்கிவந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆடிக் கொண்டிருந்த ஸமான், அக்சர் படேல் பந்தில் அதேபோல விளையாடி சிக்ஸர் அடிக்க முயன்று, லாங்-ஆன் திசையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய சுழலர்களின் பந்துகள் உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்தில், பாகிஸ்தான் பேட்டர்கள் குத்துமதிப்பாக விளையாடுவதை பார்க்க முடிந்தது.
குறைவேக பிட்ச் என்பதால், வழக்கமாக வேகமாக வீசும் அக்சர் படேல் கூட, வேகத்தை மாற்றி மாற்றி வீசினார். முதல் ஓவரில் ஸமான் விக்கெட்டை தூக்கிய அக்சர், இரண்டாவது ஓவரில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவை பெவிலியனுக்கு அனுப்பினார். 10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 49 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
ஒன்றிரண்டாக ரன் சேர்க்க தவறிய பாகிஸ்தான்
ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஃபர்ஹான், 12-வது ஓவரில் அக்சர் படேல் பந்தில் தனது மூன்றாவது சிக்ஸரை அடித்தார். சுழற்பந்து வீச்சுக்கு கிடைத்த அனுகூலத்தை பார்த்த சூர்யகுமார் யாதவ், நான்காவது சுழலராக அபிஷேக் சர்மாவை கொண்டுவந்தார். கடந்த ஆட்டத்தில் யூஏஇ அணியை நிலைகுலைய செய்த குல்தீப், இந்த ஆட்டத்தில் தனது முதல் விக்கெட்டாக, அபாயகரமான பேட்டர் ஹசன் நவாஸை வீழ்த்தினார். கேப்டன் சல்மான் அகா போலவே, தேவையின்றி ஸ்லாக் ஸ்வீப் ஆடப் பார்த்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அவர்.
ஹசன் நவாஸை அனுப்பி வைத்த கையோடு, அடுத்த பந்திலேயே இன்னொரு நவாஸை (முகமது) எல்பிடபிள்யூ ஆக்கினார் குல்தீப். இந்திய சுழலர்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமான பந்துகளை ஸ்டம்ப் லைனிலேயே வீசினர். கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து விளையாடி ஓரிரு ரன்களாக சேர்க்கும் திறனற்றவர்களாக பாகிஸ்தான் அணியினர் காணப்பட்டனர்.
கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த ஷஹீன் அஃப்ரிடி
பாபர், ரிஸ்வான் இல்லாத வெறுமையை பாகிஸ்தானின் ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. ஓரளவுக்கு தாக்குப்பிடித்த ஃபர்ஹான் 40 ரன்களுக்கு லாங்-ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து, குல்தீப்பின் 3-வது இரையாக மாறினார். 20 ஓவர்களை முழுமையாக விளையாடி 100 ரன்களை பாகிஸ்தான் கடக்குமா என்பதே சந்தேகமாக இருந்த நிலையில், ஷஹீன் ஷா அஃப்ரிடி, 2 சிக்சர்களை வெளுத்தார்.
தனது கடைசி ஓவரில் நோ பால் உள்பட 12 ரன்களை விட்டுக்கொடுத்த பும்ரா, ஸ்பெல்லின் கடைசி பந்தில் முகீம் (10) விக்கெட்டை தூக்கினார். குல்தீப், அக்சர் வரிசையில் வருண் சக்ரவர்த்தியும் தன் பங்குக்கு ஆல்ரவுண்டர் ஃபஹீம் அஷ்ரஃப் விக்கெட்டை கைப்பற்றினார். இன்னிங்ஸின் கடைசி ஓவரில் பாண்ட்யா பந்துவிச்சில் அஃப்ரிடி மேலும் 2 சிக்ஸர்களை அடிக்க, பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 127 ரன்கள் என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
கடைசி கட்டத்தில் அஃப்ரிடி (33*), முகீம் (11) அதிரடி கைகொடுத்திருக்காவிட்டால், பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்கும். மொத்தமாக 20 ஓவர்களில் 63 பந்துகளை டாட் பந்துகளாக இந்தியா வீசியது.
பவர்பிளேவில் பாகிஸ்தானை பதம் பார்த்த அபிஷேக் சர்மா
128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய் அணிக்கு அபிஷேக் சர்மா, நம்ப முடியாத தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். முழு நீளத்தில் ஷஹீன் அஃப்ரிடி வீசிய முதல் பந்தை ஸ்ட்ரைட் டிரைவ் செய்த அவர், அடுத்த பந்தை கவர் திசையில் அநாயசமாக சிக்ஸருக்கு அனுப்பினார். பேட்டிங்கில் சொதப்பிய சைம் அயுப், அதற்கு பரிகாரமாக ஒரு அட்டகாசமான கேரம் பந்தில் கில் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து இறங்கிவந்து இரு பவுண்டரிகளை விளாசிய கில், மூன்றாவது முறையும் முயன்று ஸ்டம்பிங் ஆனார்.
நேரம் செல்லசெல்ல பிட்ச் சுழலுக்கு சாதமாக மாறும் என்பதை புரிந்துகொண்ட அபிஷேக் ஷர்மா, ஷஹீன் பந்துவீச்சை குறிவைத்து தாக்கினார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் பாயிண்ட் திசையில் பந்தை வெட்டி பவுண்டரி அடித்த அவர், அதே ஓவரில் மிட் விக்கெட் திசையில் பிரமாதமான ஒரு சிக்ஸரை அடித்தார். தனது இரண்டாவது ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை வழங்கிய சைம் அயுப், அடுத்த பந்திலேயே அபாயகரமான அபிஷேக் சர்மா (31) விக்கெட்டை கைப்பற்றினார்.
பேட்டிங் பாடமெடுத்த சூர்யாகுமார்-திலக் ஜோடி
தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானுக்கு எதிராக 20 ரன்களை தாண்டியதில்லை என்ற குறையை போக்கும் திட்டத்துடன் களம்புகுந்தார். ஆறாவது ஓவரில் முகமது நவாஸ் ஓவரை குறிவைத்த திலக் வர்மா, 2 பவுண்டரிகள் உள்பட 13 ரன்கள் குவித்து, பவர்பிளேவில் இந்திய அணி 60 ரன்களை கடக்க உதவினார். பாகிஸ்தான் பேட்டர்கள் போல பவுண்டரி, சிக்ஸர் மட்டும்தான் அடிப்பேன் என்று முரண்டு பிடிக்காமல், ஓடி ரன் எடுப்பதில் கவனம் செலுத்தினர்.
திலக் வர்மா-சூர்யகுமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை சேர்க்க, பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் அப்ரார் அஹமது சிக்கனமாக பந்துவீசி 16 ரன்கள் மட்டும் கொடுத்து தன் கோட்டாவை முடித்தார். டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரி வைத்துள்ள திலக் வர்மா, சைனாமேன் சுழலர் முகீம் பந்தில் அதிரடியாக சிக்ஸரை விளாசினார். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக குறைவேக ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் அணிக்கு பாடம் எடுக்கும் விதமாக இந்திய பேட்டர்கள் விளையாடினர்.
30 ரன்களில் திலக் வர்மா கொடுத்த எளிமையான காட் & பவுல்ட் (caught & bowled) வாய்ப்பை முகமது நவாஸ் கோட்டைவிட்டார். ஆனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத திலக், சைம் அயுப் வீசிய அடுத்த ஓவரிலேயே பவுல்டானார்.
ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்ற குல்தீப்
இடக்கை பேட்டர் என்றால் ஆஃப் பிரேக், வலக்கை பேட்டர் என்றால் கேரம் பந்து என்ற வியூகத்துடன் சைம் வீசினார். 13-வது ஓவர் முடிவில் இந்தியா 100 ரன்களை எட்டியது. முகமது நவாஸின் ஓவரில் பேக்புட்டில் இரண்டு பவுண்டரிகளை வெட்டிய சூர்யகுமார் யாதவ், வெற்றிக்கு தேவையான ரன்களை 18 ஆக குறைத்தார். சைம் அயுபின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் துபே இறங்கிவந்து கோடு போட்டது போல ஒரு மகத்தான் சிக்ஸர் விளாச, வெற்றிக்கு 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 16-வது ஓவரில் 25 பந்துகள் மீதமிருந்த நிலையில், முகீம் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு அபாரமான சிக்ஸர் அடித்து, சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை முடித்துவைத்தார். சூர்யகுமார் யாதவ், தனக்கு தானே கொடுத்து கொண்ட பிறந்தநாள் பரிசாக இந்த இன்னிங்ஸ் அமைந்த்தது.
பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசிய போதும், பவர்பிளேவில் அபிஷேக் சர்மாவின் ருத்ர தாண்டவத்தால் வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்ட இந்திய அணி, மிடில் ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மாவின் பேட்டிங் கைகொடுக்க எளிதாக இலக்கை எட்டியது. பேட்டிங்கில் பவர்பிளேவில் சொதப்பியதும் மிடில் ஆர்டரில் பேட்டிங் வரிசையில் இருந்த அனுபவ குறைவும் பாகிஸ்தானுக்கு பாதகமாக முடிந்துவிட்டது.
துபாயில் சேஸ் செய்யும் அணி வெற்றிபெறவே வாய்ப்பிருந்தும் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா பேட்டிங் தேர்வு செய்தது முதல் கோணலாக அமைந்து பாகிஸ்தானுக்கு ஆட்டத்தை காவு வாங்கிவிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக குல்தீப் யாதவ் (3/18) ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
பஹல்காம் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?
சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்ததும் கேப்டன் சூர்யகுமார், மறுமுனையில் நின்றிருந்த ஷிபம் துபேவை அழைத்துக் கொண்டு உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பாகிஸ்தான் வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கல் ஏதும் நிகழவில்லை.
பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது இந்திய வீரர்களின் டக்அவுட்டை நோக்கி நடந்து வருவது போல் தோன்றியது. ஆனால் இந்திய வீரர்கள் அதற்கு முன்னதாகவே ஓய்வறைக்குத் திரும்பிவிட்டனர்.
இந்த ஆட்டத்தில் டாஸ் போடப்பட்ட போதும் சூரியகுமார் - பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா ஆகிய இருவரும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய சூர்யகுமார் வெற்றியை "இந்தியாவுக்கு ஒரு சரியான பரிசு" என்றார்.
"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நாங்கள் துணை நிற்கிறோம், இன்றைய வெற்றியை மிகுந்த துணிச்சலைக் காட்டிய எங்கள் ராணுவத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புகிறோம்." என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியது என்ன?
பரிசளிப்பு நிகழ்ச்சியில் எந்தவொரு பாகிஸ்தான் வீரர்களும் பேசவில்லை. பின்னர் பேசிய பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹெசன்"நாங்கள் கைகுலுக்க அங்கு சென்றோம். ஆனால், அவர்கள் ஏற்கனவே உடை மாற்றும் அறைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்," என்று கூறினார்.
"ஒரு போட்டியை இந்த வகையில் முடிப்பது ஏமாற்றமளிக்கும் ஒன்று. நாங்கள் விளையாடிய விதத்தில் நாங்கள் ஏமாற்றமடைந்தோம். ஆனால் நிச்சயமாக நாங்கள் சென்று கைகுலுக்க தயாராக இருந்தோம்." என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானுடன் மீண்டும் பலப்பரீட்சைக்கு வாய்ப்புள்ளதா?
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, புள்ளிகள் பட்டியலில் குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2 ஆட்டங்களில் 1 இல் மட்டும் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
புதன்கிழமை (செப்டம்பர் 17) யுஏஇ அணியுடன் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெறும்பட்சத்தில் பாகிஸ்தான் அணியால் எளிதாக சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேற முடியும். ஆகவே, மீண்டும் ஒன்று அல்லது இருமுறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.
இந்திய அணி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 19) தனது அடுத்த ஆட்டத்தில் கத்துக்குட்டியான ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 14 ஆட்டங்களில் 11 இல் இந்தியாவும் 3 இல் பாகிஸ்தானும் வென்றுள்ளன. நாளை நடைபெறும் ஆட்டங்களில் (double-header) குரூப் ஏ பிரிவில் யூஏஇ, ஓமன் அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, ஹாங்காங் அணிகளும் மோதுகின்றன.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு