பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்ற மனு பாக்கர் என்ன சொன்னார்?

காணொளிக் குறிப்பு,
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது பெற்ற மனு பாக்கர் என்ன சொன்னார்?

உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு இந்த விருதை வழங்கினர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். மனு பாக்கர் முன்னதாக பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனையாக 2021-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

விருது பெற்றுக் கொண்ட பிறகு பேசிய மனு பாக்கர், "இந்த விருதை வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. எனது விளையாட்டு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பயணம். நான் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது உங்கள் முன்பு இங்கு நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "இந்த விருது பெண்களுக்கு மட்டுமின்றி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூகத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் பெண்கள் அதற்காக போராடினர். இன்னும் நாம் இந்த பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது" என்று கூறினார்.

"நமது நாட்டில் முன்னோடியாக இருக்கும் பெண்களின் தியாகங்களும் கடின உழைப்பும் தற்போது உள்ள பெண்களுக்கு விஷயங்களை எளிதாக்கியுள்ளன. எந்த துறையாக இருந்தாலும் வரும் தலைமுறையினருக்கு அது இன்னும் எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்", என்றார் மனு பாக்கர்.

முழு விவரம் காணொளியில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)