கோவையில் திமுக, அதிமுகவை விஞ்சி அண்ணாமலையால் சாதிக்க முடியுமா? பிபிசி கள ஆய்வு

காணொளிக் குறிப்பு, கோவை: திமுக, அதிமுக தோற்கடித்து அண்ணாமலை சாதிப்பாரா? பிபிசி கள ஆய்வு
கோவையில் திமுக, அதிமுகவை விஞ்சி அண்ணாமலையால் சாதிக்க முடியுமா? பிபிசி கள ஆய்வு

தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்த நாடாளுமன்றத் தொகுதியாக கோவை மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாகப் போட்டியிடும் திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்படி வாக்கு சேகரிக்கிறார்கள்?

களத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோவை தொகுதி அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதியாக உள்ளது.

பத்து ஆண்டுகளுக்குப் பின் கோவையில் திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் படித்த இளைஞரான சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார். கோவையில் மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் களம் எப்படி உள்ளது?

கோவை தொகுதிக்குள் மூன்று வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதைக் காண முடிந்தது.

அதற்கு சளைக்காமல் பதிலளித்து வரும் அண்ணாமலை, திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலத்தை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

வாக்கு சேகரிப்பின்போது அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், மத்தியில் ஆளும் பாஜகவையும் அண்ணாமலையையும் தாக்கிப் பேசுவதைத்தான் முதன்மையாக வைத்துள்ளார். அண்ணாமலை குறித்தான பேச்சுகள் மூலம் சமூக ஊடகங்களில் கவனம் பெறுகிறார். கடந்த முறை திமுக கூட்டணியில் வென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர் நடராஜன் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்று கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், அண்ணாமலை குறித்து நேரடி விமர்சனங்கள் எதையும் முன்வைப்பதில்லை. மாறாக திமுக நிறைவேற்றிய பெண்களுக்கு இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான உதவி, சிறு குறு தொழில்களுக்கான திட்டங்களை முன்வைத்தும், சில நேரங்களில் மத்திய பாஜகவை விமர்சித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

முழு விவரம் காணொளியில்.....

கோவை தொகுதி நிலவரம்

தொகுதியில் மக்களின் மனநிலை என்ன?

தொகுதியில் மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய, பிபிசி தமிழ் பல வாக்காளர்களிடம் பேசியது.

கோவை ஆவராம்பாளையத்தைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கணேஷ், ‘‘சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை அறிந்து, அவரின் செயல்பாடுகளை அறிந்து நான் வாக்களிப்பது வழக்கம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர் யார் என்பது எல்லாம் எனக்கு முக்கியமில்லை, கட்சியைப் பார்த்துதான் வாக்களிப்பேன்,’’ என்கிறார்.

அதே பகுதியில் உணவகத்தில் பணியாற்றும் மகேஸ்வரி, ‘‘பேருந்தில் தினமும் கட்டணமின்றி வந்து செல்கிறேன். இதன் மூலம் மட்டுமே மாதம் 700 ரூபாய்க்கு மேல் மிச்சமாகிறது. மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெற்றுள்ளேன். அதேநேரம் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் சிலிண்டர் பெற்றுள்ளேன்.

எந்தக் கட்சியிடம் நான் திட்டங்கள் பெற்றிருந்தாலும் நான் சொந்தமாக வாக்களிக்க முடிவெடுப்பது இல்லை. எனது கணவர் சொல்லும் கட்சிக்குத்தான் பல ஆண்டுகளாக வாக்களித்து வருகிறேன்,’’ என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியில் கம்மங்கூழ் கடை நடத்தி வரும் ராஜ், ‘‘கோவையில் அதிமுக, திமுக மற்றும் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏற்கெனவே கணபதி ராஜ்குமார் மேயராக இருந்ததால் அவரைத் தெரியும், அண்ணாமலை குறித்து தெரியும், மற்ற வேட்பாளர்கள் குறித்துப் பெரிய அளவில் எதுவும் தெரியாது. கட்சியைப் பார்த்துதான் வாக்களிப்பேன்,’’ என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)