இலங்கை பொருளாதார நெருக்கடியால் முடங்கிய வாழ்க்கை - தவிக்கும் முன்னாள் செய்தியாளர்

பட மூலாதாரம், Arul Jesu
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்து, ஓீஆண்டு கடந்துள்ள நிலையில், அதன் தாக்கம் இன்றும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் முன்னேற முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து, ஆட்சி மாற்றம் வரை நீடித்திருந்தது.
எரிபொருளுக்கான தட்டுப்பாடு, எரிவாயுக்கான தட்டுப்பாடு, மருந்துக்கான தட்டுப்பாட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எனப் பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இவ்வாறு பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலவியதை அடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகக் கோரி, மார்ச் மாதம் 31ம் தேதி பாரிய போராட்டம் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு கோணங்களில் தொடர்ந்த போராட்டம், கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் தேதி பாரிய போராட்டமாக மாறியது.
கொழும்பில் பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே தடவையில் ஒன்று கூடி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் உள்ளிட்டவற்றைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் நோக்கி தப்பிச் சென்றிருந்தார்.
இவ்வாறு சிங்கப்பூர் நோக்கிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்ததை அடுத்து, ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, நிலைமை படிப்படியாக வழமைக்கு திரும்பினாலும், இன்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் இருக்கத்தான் செய்கின்றன.
அவ்வாறு பாதிக்கப்பட்ட ஒருவரைச் சந்திப்பதற்காக பிபிசி தமிழ், பண்டாரவளை நகரை நோக்கிப் பயணித்தது.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் பல முன்னணி ஊடக நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராகவும், செய்தியாளராகவும் கடமையாற்றியர் மைக்கல் அருள் ஜேசு.
தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தி வாசிப்புகளின் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த மைக்கல் அருள் ஜேசு, இன்று நடமாட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளார்.
திடீரென நோய்வாய்ப்பட்ட மைக்கல் அருள் ஜேசுவின் வாழ்க்கை, இன்று ஒரே இடத்திலேயே முடங்கிவிட்டது.
மல்டிபிள் ஸ்களிரோசிஸ் என்ற நோய், மைக்கல் அருள் ஜேசுவை திடீரென தாக்கியது. பல்வேறு சிகிச்சைகளைப் பெற்ற போதிலும், அவரால் முன்பைப் போல செயற்பட முடியாதுள்ளது.
நடமாட முடியாத அருள் ஜேசு, இன்று சக்கர நாற்காலியிலேயே தனது பயணங்களை மேற்கொள்கிறார். அதேபோன்று, செய்தி வாசிப்பில் திறமைகளை வெளிப்படுத்திய அருள் ஜேசு, இன்று பேசுவதற்குக் கூட தடுமாறுவதை அவதானிக்க முடிந்தது.
அருள் ஜேசு எதிர்நோக்கியுள்ள இந்த நிலைமையை அடுத்து, அவரை 24 மணிநேரமும் ஒருவர் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட பின்னணியில், ஆசிரியையாகக் கடமையாற்றிய அவரது மனைவி தொழிலை விட்டு விலகி, தற்போது அவரைக் கவனித்து வருகிறார்.
குடும்ப தலைவரின் வருமானம் முழுமையாக இல்லாது போனதுடன், அவரது மனைவியின் வருமானமும் முழுமையாக இல்லாது போயுள்ளது.

பட மூலாதாரம், Arul Jesu
அருள் ஜேசுவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அவர்களின் கல்வியைக்கூட தொடர்வதற்கு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று பல்வேறு சவால்களை எதிர்நோக்கியவாறே, அருள் ஜேசுவின் குடும்பம் வாழ் நாட்களைக் கடத்தி வருகிறது.
''இலங்கையிலுள்ள பெரிய ஊடக நிறுவனத்தில் நான் செய்தி தயாரிப்பாளராகவும், வாசிப்பாளராகவும் வேலை செய்தேன். ஒரு நாள் வானொலி செய்தி வாசிக்கும்போது வாய் திக்கியது. அதற்குப் பிறகு நான் செய்தி வாசிக்கவில்லை. செய்தி தயாரிப்பை மாத்திரம் செய்தேன். இப்போது வீட்டில் இருக்கின்றேன். என்னால் பேச முடியாது. என்னால் நடக்க முடியாது," என அருள் ஜேசு குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட தான், கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காலப் பகுதியில் மேலும் பல்வேறு இன்னல்களை அனுபவித்ததாக மைக்கல் அருள் ஜேசு பிபிசி தமிழுக்கு கூறுகின்றார்.
''கொரோனா எனக்கு பெரிய அடி. பொருளாதார சிக்கல். இரண்டு பிள்ளைகள் படிக்கின்றார்கள். இப்போது ரொம்ப கஷ்டம். வீட்டில் யாருக்கும் வேலை இல்லை," என மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அருள் ஜேசு கூறினார்.
தனது கணவர் எதிர்நோக்கியுள்ள நிலை காரணமாகத் தனது குடும்பம் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து, மைக்கல் அருள் ஜேசுவின் மனைவி ஏசிலானி, பிபிசி தமிழுக்கு தெளிவூட்டினார்.

பட மூலாதாரம், Arul Jesu
''முதலில் ஆசிரியர் தொழிலைச் செய்தேன். கணவரைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததனால்; தொழிலை விட்டு விட்டேன். இந்த நோய் எப்படி வந்தது என்று சொல்ல முடியாது.
கிருமிகள் தலையைத் தாக்கியதே இதற்குக் காரணம் என டாக்டர்கள் சொன்னார்கள். ஒரு கிழமையில் சுகமாகலாம். இரண்டு மாதங்களில் சுகமாகலாம் ஓரிரு ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளில் சுகமாகலாம், அல்லது சுகமாகாமலும் போகலாம் என்று நேரடியாகவே சொன்னார்கள்.
கொரோனா, பொருளாதார நெருக்கடி காலங்களில் நிறைய சவால்களை எதிர்நோக்கினோம். பிள்ளைகளின் படிப்பு, வீட்டு செலவு எனப் பல பிரச்னைகளை எதிர்நோக்கினோம். நிறைய நகைகளை வைத்துத்தான் செலவுகளைச் செய்தோம். இவ்வளவு காலமும் அதைத்தான் செய்கின்றோம்," என அவர் கூறினார்.
தனது கணவருக்கு மருத்துவச் செலவுகளை மேற்கொள்ளும் விதம் மற்றும் மருத்துவத்திற்காகத் தாம் எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்தும், அருள் ஜேசுவின் மனைவி குறிப்பிட்டார்.
''நிலைமை சரியான மோசமாகத்தான் இருக்கின்றது. இவரை தூக்கிக் கொண்டுதான் போவோம். நிறைய கஷ்டமாகத்தான் இருக்கும். நிறைய சமாளித்து தான் செய்கின்றேன். அரச மருத்துவமனையில்தான் மருந்து எடுப்போம். மருந்துகளை டாக்டர்கள் மருந்துக் கடையில் வாங்கச் சொல்லித்தான் எழுதிக் கொடுப்பார்.
மருந்துகளை ஒன்றரை மாதங்களுக்கு தான் எழுதிக் கொடுப்பார்கள். அதற்கு 45 ஆயிரம் ரூபா வரை செல்லும். மருந்தகத்தில் கடன் வைத்து தான் மருந்தைவாங்குகின்றோம். சில மருந்துகள் இல்லை எனக் கூறுகின்றார்கள். சமாளிக்கின்றோம். மிகவும் சிரமப்பட்டுத்தான் வாழ்கின்றோம்," என அவர் கூறினார்.

பட மூலாதாரம், Arul Jesu
இலங்கையில் மருந்து தட்டுப்பாடு தொடர்கின்றது.
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கிய தருணத்தில் ஏற்பட்ட மருந்து தட்டுப்பாடுகள் இன்றும் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
''நம்மிடம் மருந்து பொருட்களுக்கு ஓரளவு தட்டுப்பாடு நிலவுகின்றது. மருந்து தட்டுப்பாடு தொடர்பில் முழுமையான அறிக்கையொன்றை நான் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.
தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த மருந்து தட்டுப்பாட்டை விரைவில் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறுகின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












