You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம், தேவைகளை பட்டியலிடும் தொகுதி மக்கள்
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஜூலை 10ஆம் தேதி இடைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மும்முனைப் போட்டி நிலவும் இந்தத் தொகுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதத்தில் வாக்காளர்களை அணுகுகிறார்கள். ஆனால், களம் யாருக்குச் சாதகமாக இருக்கிறது?
விழுப்புரம் மாவட்டத்தில் விரிந்து பரந்து கிடக்கும் தொகுதிகளில் ஒன்று விக்கிரவாண்டி. இடைத்தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களும் உள்ளடங்கிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் கிராமப்புற பகுதிகளே அதிகம் என்பதால், நகரங்களில் நடக்கும் தேர்தல்களைப் போலன்றி, வீட்டுச் சுவர்களில் வரையப்பட்டிருக்கும் சின்னங்கள், ஆங்காங்கே கட்சிக் கொடிகள் என தேர்தலுக்கான எல்லா அம்சங்களுடனும் பரபரப்பாக இருக்கிறது விக்கிரவாண்டி.
கடந்த 2007ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பாக, இந்தத் தொகுதியின் பெரும்பகுதிகள் கண்டமங்கலம் சட்டமன்றத் தொகுதியாக இருந்தன.
இந்தத் தொகுதி உருவான பிறகு இதுவரை இங்கே நான்கு தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2016, 2021 தேர்தல்களில் திமுகவும் 2019இல் நடந்த இடைத்தேர்தலில் அதிமுகவும் இங்கே வெற்றி பெற்றிருக்கின்றன.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கடந்த 2021இல் வெற்றி பெற்ற திமுகவின் நா. புகழேந்தி, சமீபத்தில் காலமான நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி.
சுமார் 2,35,000 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் இந்தத் தொகுதியில் கடந்த முறை சுமார் 49 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் திமுக வேட்பாளரான நா. புகழேந்தி. அதற்கு அடுத்ததாக அதிமுகவின் வேட்பாளரான ஆர். முத்தமிழ் செல்வன் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்றார். ஆனால், இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துவிட்டது. அதன் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.கவும் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறது.
இந்தத் தொகுதியில் பெரும் எண்ணிக்கையில் சமூகரீதியில் வன்னியரும் அதற்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவரும் அதற்கு அடுத்தபடியாக பிற இடைநிலை சாதியினரும் வசிக்கிறார்கள்.
இந்த முறை பிரதானமான மூன்று கட்சிகளுமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருக்கின்றன. திமுக சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர்கள் அணியின் செயலாளரான அன்னியூர் சிவா என்ற சிவசண்முகமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர சுயேச்சைகளும் களத்தில் நிற்கிறார்கள். மொத்தமாக 29 பேர் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஜூலை 10ஆம் தேதி இங்கே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
அடிப்படையில், விவசாயத்தை மையமாகக் கொண்ட தொகுதி விக்கிரவாண்டி. ஒரு காலகட்டத்தில் பெரிய அளவில் அரிசி வர்த்தகம் நடந்த பகுதி இது. தற்போது அரிசி வர்த்தகம் குறைந்திருந்தாலும் விவசாயம், இங்குள்ள கடைத் தெருவில் நடக்கும் வர்த்தகத்தை மையமாக வைத்தே இந்தப் பகுதியின் பொருளாதாரம் இயங்கி வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதியின் தேவைகள் என்ன?
இந்தப் பகுதி பெரிதும் கிராமப்புறங்களைக் கொண்ட பகுதி என்பதால், சில இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன.
"அத்தியூர் திருக்கைக்கு அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றுகூட இல்லை. ஒன்று ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ள புதுக்கருவாட்சிக்கு போக வேண்டும். இல்லாவிட்டால், கெடாருக்குச் செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தேவை. வரும் சட்டமன்ற உறுப்பினர் இங்கிருக்கும் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தையும் மேம்படுத்தித் தர வேண்டும்" என்கிறார் அத்தியூர் திருக்கையைச் சேர்ந்த வீரமணி.
அதேபோல, இப்பகுதியில் பெரிய தொழில் வாய்ப்புகள் இல்லை என்பதால் சிறிய சிப்காட் ஒன்றை உருவாக்கி, தொழிற்சாலைகள் ஏதும் வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார் விக்கிரவாண்டி டவுனை சேர்ந்த பிரகாஷ். அதேபோல, இங்கிருக்கும் பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்கிறார் அவர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரு நகரங்களுக்கும் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது விக்கிரவாண்டி. ஒரு காலத்தில் தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான முக்கிய நிறுத்தமாக இந்தப் பகுதி இருந்தது. ஆனால், நான்கு வழிச்சாலை வந்த பிறகு, தென் தமிழகத்தை நோக்கிச் செல்லும் பேருந்துகளும் அங்கிருந்து சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் தங்கள் ஊரில் நின்று செல்வதில்லை என்ற குறையை இப்பகுதியைச் சேர்ந்த எல்லோருமே சொல்கிறார்கள்.
"சென்னையிலிருந்து வரும் பேருந்துகள் விக்கிரவாண்டிக்கு அருகில் நிற்காமல் ஊரைத் தாண்டிச் சென்று சுங்கச்சாவடியில்தான் நிற்கின்றன. விக்கிரவாண்டிக்கு என டிக்கெட்டும் கொடுப்பதில்லை. விழுப்புரத்திற்குத்தான் டிக்கெட் கொடுக்கிறார்கள். அதேபோல, சென்னையை நோக்கி வரும் பேருந்துகளும் டோல்கேட்டில் ஆட்களை இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றன.
முத்தமிழ்ச்செல்வன், ராதாமணி, புகழேந்தி, எம்.பி. ரவிக்குமார் என எல்லோரிடமும் மனு கொடுத்துவிட்டோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. தினமும் சில பேருந்துகளாவது விக்கிரவாண்டியில் நின்று செல்லும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்," என்கிறார் விக்கிரவாண்டி வர்த்தகர் சங்கத்தின் பொருளாளர் சாதிக் பாட்சா.
திமுகவின் இடைத்தேர்தல் வியூகம் என்ன?
ஆளும்கட்சி என்பதால் இந்தத் தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனத் தீவிர முனைப்புடன் களத்தில் இறங்கியிருக்கிறது திமுக. இந்தத் தொகுதியில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லவில்லையென்றாலும் பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சக்கரபாணி, தாமோ அன்பரசன், வி.சி. கணேசன், அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர் என ஒன்பது அமைச்சர்கள் இந்தத் தொகுதியின் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர களப்பணியில் இறங்கியிருக்கின்றனர். பிரசாரம் முடிவடையும் கடைசி இரு நாட்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருகிலுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பாக கள்ளச்சாராயத்தின் காரணமாக 65 பேர் உயிரிழந்தது இந்தத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில், தற்போதைய அரசின் நலத்திட்ட உதவிகளை மையமாக வைத்து தேர்தலைச் சந்திக்கிறது திமுக.
அக்கட்சியின் வேட்பாளரான அன்னியூர் சிவாவுக்கு தொகுதிக்குள் நல்ல அறிமுகம் இருப்பது, அந்தக் கட்சிக்குக் கூடுதல் பலமாக இருக்கிறது. இதனால், அமைச்சர்கள் சகிதம், உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் சிவா.
"கட்சியினுடைய சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறோம். நான் இந்தப் பகுதியைச் சேர்ந்தவன். இந்தத் தொகுதியின் வாக்காளர்களுக்கு நெருங்கிய உறவினராக இருப்பவன். அதனால் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்கிறார் சிவா.
கள்ளச்சாராய விவகாரம் தேர்தலில் எதிரொலிக்காது என நம்புகிறார் அவர். "கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சட்டப் பேரவையிலேயே விளக்கம் கொடுத்துவிட்டார் முதலமைச்சர். அது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான். இனிமேல் அப்படி நடக்கக்கூடாது என்பதற்காகப் புதிய சட்டங்களையும் சட்டப் பேரவையில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ளார். ஆகவே அது தேர்தலில் எதிரொலிக்காது" என்கிறார் சிவா.
பொதுவாகவே இந்தத் தொகுதியில் திமுக வலுவாக இருப்பதும் அமைச்சர்கள் வரிந்துகட்டி வேலை பார்ப்பதும் திமுகவை கரை சேர்த்துவிடும் என நம்புகிறார்கள் கட்சிக்காரர்கள்.
கடும் போட்டியைக் கொடுக்க நினைக்கும் பாமக
ஆனால், தொகுதியில் திமுகவுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க நினைக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத நிலையில், இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வென்றுகாட்ட நினைக்கிறது.
மாநில அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காமல் இருப்பதன் மூலம் திமுக வன்னியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்தும் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது பாமக.
அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் சி. அன்புமணி, ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர்.
"இரு முறை திமுக வெற்றிபெற்ற தொகுதி இது. ஆனால் தொகுதியின் எந்தப் பகுதியிலும் சாலைகளும் சாக்கடை வசதிகளும் சரியாக இல்லை. நாங்கள் வெற்றி பெற்று வந்தால் போராடி, இதையெல்லாம் தீர்ப்போம். வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம்," என்கிறார் அன்புமணி.
இவருக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகள் இணைந்து பணியாற்றுவது இவருக்குப் பலமாக இருக்கிறது. கூட்டணியின் எல்லாத் தலைவர்களும் இணைந்து மிகப் பெரிய பிரசாரப் பொதுக் கூட்டத்தையும் வியாழக்கிழமையன்று நடத்தி முடித்திருப்பதால் தெம்பாக இருக்கிறார் அன்புமணி.
முத்திரையைப் பதிக்க முயலும் நாம் தமிழர்
மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் அபிநயா, மிகப்பெரிய தொண்டர் படையுடன் ஒவ்வொரு குக்கிராமமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார்.
வாகனத்தில் இருந்தபடியே பேசாமல், இறங்கிச் சென்று மக்களிடம் பேசுகிறார். மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, சுயவேலை வாய்ப்பை வழங்குவதாகச் சொல்லி வாக்கு கேட்கிறார் அபிநயா. நாடாளுமன்றத் தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தியிருக்கும் நாம் தமிழர் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்க நினைக்கிறது. அதனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாகப் பிரசாரம் செய்கிறது அக்கட்சி.
இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் அக்கூட்டணியில் இருந்த தேமுதிகவும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் திமுக கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார்.
இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக 32,198 வாக்குகளைப் பெற்றது.
இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் அதிமுக பெற்ற சுமார் 65 ஆயிரம் வாக்குகளை நாம் தமிழர், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய இரண்டுமே குறிவைத்துள்ளன.
இந்தச் சூழல் தங்களுக்குச் சாதகமானது என பாமக கருதுகிறது. இந்த முறை திமுகவுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்தான் நேரடிப் போட்டி என்பதால், திமுக எதிர்ப்பு வாக்குகளான அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே திரும்பும் என அக்கட்சி கருதுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் பாமக, அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டன. அப்போது அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார்.
"கடந்த 2019இல் நாங்கள் இணைந்துதான் அதிமுகவின் முத்தமிழ்செல்வனை வெற்றிபெற வைத்தோம். அவர்கள் தேர்தலைப் புறக்கணித்தாலும் நாங்கள் நண்பர்கள்தான். ஆகவே அதிமுகவின் முழு வாக்கும் எங்களுக்குத்தான் கிடைக்கும். ஆகவே நான் வெற்றி பெறுவது சாதாரண விஷயம்" என்கிறார் அன்புமணி.
மற்றொரு பக்கம், நாம் தமிழர் கட்சியும் அதே நம்பிக்கையில் இருக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் எட்டாயிரத்து இருநூறு வாக்குகளையே பெற்றிருந்தாலும் இந்த முறை அதிமுகவின் வாக்குகள் தங்களுக்கே கிடைக்கும் என நம்புகிறது அந்தக் கட்சி.
"யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதை எடப்பாடி கே. பழனிச்சாமி மறைமுகமாகச் சொல்லிவிட்டார். அது எங்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. அதிமுக போட்டியிடாததால் இவர்களுக்குப் போட்டுவிட்டுப் போகலாம் எனப் பலர் நினைக்கிறார்கள். நாங்களும் பிரதான எதிர்க்கட்சி போட்டியிடாத நிலையில், எங்களுக்கு வாக்களியுங்கள் எனக் கேட்கிறோம். அந்தக் கட்சிக்காரர்களே இரட்டை இலை நிற்காததால் மைக்கிற்கு வாக்களிப்போம் என்று சொல்கிறார்கள்" என்கிறார் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான அபிநயா.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் சட்டமன்றத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்றாலும் மூன்று கட்சிகளுமே வெவ்வேறு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை முக்கியமாகக் கருதுகின்றன. ஆகவே, தொகுதிக்குள் அனல் பறக்கிறது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)