ஒரு புறம் பாலத்தீனர்களுக்கு எதிரான வன்முறை, மறுபுறம் நில ஆக்கிரமிப்பு - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு
    • எழுதியவர், ஜேக் டச்சி, ஜியாத் அல்-கத்தான், எமிர் நாடர் மற்றும் மேத்யூ கேஸல்
    • பதவி, பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன்ஸ்

பாலத்தீனிய முதிர் பெண் ஆயிஷா ஷ்டய்யே, கடந்த அக்டோபரில் ஒரு நபர் தனது தலையை நோக்கி துப்பாக்கியை காட்டி, 50 ஆண்டுகளாக வசித்து வந்த தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டியதாக கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் தனது வீட்டிற்கு அருகாமையில் ஒரு சட்டவிரோத குடியேற்ற முகாம் நிறுவப்பட்ட பின்னர், 2021-ஆம் ஆண்டில் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் அதிகரித்தது என்றும், அந்த வன்முறை செயல்பாட்டின் உச்சக்கட்டமாக தற்போது ஆயுத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

சமீபத்திய ஆண்டுகளில் இந்த முகாம்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருப்பதை பிபிசியின் புதிய பகுப்பாய்வு காட்டுகிறது. மேற்குக் கரை முழுவதும் தற்போது குறைந்தது 196 முகாம்கள் உள்ளன, கடந்த ஆண்டு மேலும் 29 அமைக்கப்பட்டன. முந்தைய ஆண்டை விட இது அதிகம்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை

குடியேற்ற முகாம்கள் என்பது பண்ணைகள், குடியிருப்புப் பகுதிகள் அல்லது கேரவன்களின் தொகுப்பாக இருக்கலாம். மேலும் இஸ்ரேலிய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி இந்த முகாம்கள் சட்டவிரோதமானவை.

ஆனால் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நிறுவனங்கள் புதிய சட்டவிரோத குடியேற்ற முகாம்களை நிறுவுவதற்கு பணத்தையும் நிலத்தையும் வழங்கியதை காட்டும் ஆவணங்களை பிபிசி உலகச் சேவை பார்த்தது.

பிபிசி, திறந்த மூல நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (open source intelligence) பயன்படுத்தி அவற்றின் பரவலை ஆய்வு செய்தது, மேலும் ஆயிஷா ஷ்டயே தன்னை அச்சுறுத்தியதாகக் கூறும் குடியேற்றக்காரரையும் விசாரித்தது.

குடியேற்ற முகாம்கள், குடியிருப்புகளை காட்டிலும் அதிக நிலப்பரப்புகளை விரைவாகக் கைப்பற்ற முடியும், மேலும் அவை பாலத்தீனிய சமூகங்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு வழிவகுக்கின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Matthew Cassel / BBC

படக்குறிப்பு, ஆயிஷா ஷ்டயே வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட தன் வீட்டிற்குத் திரும்ப முயற்சிக்கிறார்

குடியேற்ற முகாம்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை. ஆனால் பிபிசி ஐ (BBC Eye) அவற்றின் இருப்பிடங்களின் பட்டியலை மதிப்பாய்வு செய்தது.

இந்த பட்டியல், இஸ்ரேலிய குடியேற்ற எதிர்ப்பு கண்காணிப்பு அமைப்புகளான பீஸ் நவ் மற்றும் கெரெம் நவோட் ஆகியவற்றுடன் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியை இயக்கும் பாலத்தீனிய அதிகார அமைப்பால் சேகரிக்கப்பட்டது.

இந்த இடங்களில் குடியேற்ற முகாம்கள் கட்டப்பட்டுள்ளன என்பதைச் சரிபார்க்கவும் அவை அமைக்கப்பட்ட ஆண்டை உறுதிப்படுத்தவும் நூற்றுக்கணக்கான செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தோம்.

இந்த தகவல்களை உறுதிப்படுத்தவும் குடியேற்ற முகாம் இன்னும் செயல்பாட்டில் உள்ளன என்பதைக் காட்டவும் சமூக ஊடகப் பதிவுகள், இஸ்ரேலிய அரசாங்க வெளியீடுகள் மற்றும் செய்தி ஆதாரங்களை பிபிசி சரிபார்த்தது.

மேற்கு கரையிலுள்ள சட்டவிரோத குடியேற்ற முகாம்கள்
படக்குறிப்பு, மேற்கு கரையிலுள்ள சட்டவிரோத குடியேற்ற முகாம்கள்

வன்முறைகளுடன் தொடர்புடைய முகாம்கள்

நாங்கள் ஆய்வு செய்து சரிபார்த்த 196 குடியேற்ற முகாம்களில் கிட்டத்தட்ட பாதி(89), 2019 முதல் கட்டப்பட்டவை என்று எங்கள் பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

இவற்றில் சில முகாம்கள், மேற்குக் கரையில் பாலத்தீன சமூகங்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளுடன் தொடர்புடையவை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாலத்தீனியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டியதற்காக அல்லது வன்முறையில் ஈடுபட்டதற்காக கடும்போக்கு குடியேற்றவாசிகள் எட்டு பேருக்கு பிரிட்டன் அரசு தடை விதித்தது. இதில் குறைந்தது ஆறு பேராவது சட்டவிரோத குடியேற்ற முகாம்களை நிறுவியுள்ளனர் அல்லது அதில் வாழ்ந்து வருகின்றனர் .

மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய ராணுவத்தின் முன்னாள் தளபதி அவி மிஸ்ராஹி, பெரும்பாலான குடியேற்றவாசிகள் சட்டத்தை மதிக்கும் இஸ்ரேலிய குடிமக்களாக உள்ளனர் என்று கூறுகிறார். அதே சமயம் குடியேற்ற முகாம்கள் இருப்பது வன்முறையை அதிகமாக்குகிறது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

"நீங்கள் அந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்ற முகாம்களை அமைக்கும் போதெல்லாம், அது அதே பகுதியில் வசிக்கும் பாலத்தீனியர்கள் உடனான பதற்றத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறுகிறார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக ஆயிஷா கூறிய நபரான மோஷே ஷர்விட், பிரிட்டன் அரசால் தடை செய்யப்பட்ட கடும்போக்கு குடியேற்றக்காரர்களில் ஒருவர்.

ஆயிஷாவின் வீட்டிலிருந்து 800 மீட்டர்(0.5 மைல்) தொலைவில் அவர் அமைத்த குடியேற்ற முகாம் உள்ளது. அந்த நபருக்கும், அந்த முகாமிற்கும் மார்ச் மாதம் அமெரிக்க அரசு தடை விதித்தது. அவரது முகாம் "பாலத்தீனியர்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தும் தளம்" என்று விவரிக்கப்பட்டது.

'வாழ்க்கை நரகமாகி விட்டது'

"அந்த நபர் எங்கள் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்" என்று ஆயிஷா கூறுகிறார், அவர் தற்போது நப்லஸுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார்.

சாதாரண குடியேற்றங்களை போலல்லாமல், இந்த சட்டவிரோத குடியேற்ற முகாம்களுக்கு அதிகாரப்பூர்வ இஸ்ரேலிய கட்டுமான திட்டமிடலுக்கான அங்கீகாரம் இல்லை.

சாதாரண குடியேற்றங்கள் பொதுவாக மேற்குக் கரை முழுவதும் நகர்ப்புறத்தில், பெரியளவில் கட்டப்பட்ட யூத மக்கள் வசிப்பிடங்களாகும். இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் இவை சட்டப்பூர்வமானவை

மேற்கு கரையில் வேகமாக அதிகரித்து வரும் குடியேற்ற முகாம்கள்

ஆனால் இந்த இரண்டு குடியேற்றங்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கருதப்படுகின்றன, இது குடிமக்களை ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திற்கு நகர்த்துவதை தடை செய்கிறது.

ஆனால் மேற்குக் கரையில் வாழும் பல குடியேற்றவாசிகள் யூதர்களாகிய தங்களுக்கு அந்த நிலத்துடன் மத மற்றும் வரலாற்றுத் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஜூலை மாதம், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் முன்வைத்த ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தில், இஸ்ரேல் அனைத்து புதிய குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியில் குடியேறிய அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று கூறியது.

இஸ்ரேல் இந்த கருத்தை "அடிப்படையில் தவறானது" என்றும் ஒருதலைபட்சமானது என்றும் நிராகரித்தது.

குடியேற்ற முகாம்களுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து இல்லை என்ற போதிலும், அவற்றின் விரைவான வளர்ச்சியைத் தடுக்க இஸ்ரேலிய அரசாங்கம் முயற்சித்து வருகிறது என்பதற்குச் சிறியளவிலான சான்றுகள் கூட இல்லை.

மேற்குக் கரையில் புதிய குடியேற்ற முகாம்களை அமைப்பதற்கு பணத்தையும், நிலத்தையும் இஸ்ரேலிய அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட இரண்டு அமைப்புகள் எவ்வாறு வழங்கியுள்ளன என்பதைக் காட்டும் புதிய ஆதாரங்களை பிபிசி கண்டது.

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Matthew Cassel / BBC

படக்குறிப்பு, குடியேற்ற முகாம்கள் இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாக கருதப்படுகிறது

உலக சியோனிச அமைப்பு (WZO), ஓர் நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்ட சர்வதேச அமைப்பாகும். இது இஸ்ரேல் அரசை நிறுவியதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இது குடியேற்றத்திற்கான ஒரு பிரிவைக் கொண்டுள்ளது. 1967 முதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் பெரும் பகுதிகளை நிர்வகிக்கும் பொறுப்பை இப்பிரிவு மேற்கொள்கிறது. இந்த பிரிவு முற்றிலும் இஸ்ரேலிய பொது நிதியால் நிதியளிக்கப்படுகிறது. இது தன்னை "இஸ்ரேலிய அரசின் ஆயுதம்" என்று விவரிக்கிறது.

பீஸ் நவ் மூலம் பெறப்பட்ட ஒப்பந்தங்கள் பிபிசியால் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

அந்த ஒப்பந்தங்களின்படி, உலக சியோனிச அமைப்பின் குடியேற்றப் பிரிவால் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட நிலத்தில் சட்டவிரோத முகாம்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் அந்த ஒப்பந்தங்களின்படி உலக சியோனிச அமைப்பு அந்த நிலங்களில் எந்தவொரு கட்டமைப்புகளையும் கட்டுவதைத் தடை செய்துள்ளது. அந்த நிலத்தை மேய்ச்சலுக்கு அல்லது விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால் செயற்கைக்கோள் படங்களை பார்க்கும்போது அந்த நிலங்களில் குறைந்தது நான்கு பகுதிகளில், சட்டவிரோத முகாம்கள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

அமானா அமைப்பு வழங்கிய கடன்

இந்த ஒப்பந்தங்களில் ஒன்று 2018-இல், ஸ்வி பார் யோசெஃப்-ஆல் கையெழுத்திடப்பட்டது.

இவரும் பாலத்தீனியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல்களுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவால் தடை செய்யப்பட்டவர்.

மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட பல நிலப்பரப்புகள் சட்டவிரோத முகாம்களை நிர்மாணிப்பதற்காக பயன்படுத்தப்படுவது பற்றி தெரியுமா என்று கேட்க உலக சியோனிச அமைப்பை தொடர்பு கொண்டோம்.

ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஸ்வி பார் யோசெஃபிடம் கேள்விகளை எழுப்பினோம், ஆனால் பதில் வரவில்லை.

மற்றொரு முக்கிய குடியேற்ற அமைப்பு - அமானா. இந்த அமைப்பு குடியேற்ற முகாம்களை நிறுவ உதவுவதற்காக பல்லாயிரக்கணக்கான ஷெக்கல்களை (இஸ்ரேலிய பணம்) கடனாக வழங்கியதை வெளிப்படுத்தும் இரண்டு ஆவணங்களையும் பிபிசி பார்த்தது.

இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதாகக் கருதப்படும் ஒரு முகாமில் பசுமை இல்லங்களைக் கட்டுவதற்காக ஒரு குடியேற்றவாசிக்கு 1,000,000 ஷெக்கல்களை ($270,000/£205,000) கடனாக இந்த அமைப்பு வழங்கியது.

இஸ்ரேல் நீதிமன்ற ஆவணங்கள்
இஸ்ரேல் நீதிமன்ற ஆவணங்கள்

அமானா 1978இல் நிறுவப்பட்டது. மேற்குக் கரை முழுவதும் குடியிருப்புகளை உருவாக்க இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளது.

ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், அமானாவும் சட்டவிரோத முகாம்களை ஆதரிக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன.

2021இல் இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தின் போது பதிவு செய்தததை ஒரு ஆர்வலர் கசியவிட்டார். அதில் அமானாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜீவ் ஹெவர் இவ்வாறு கூறுவதைக் கேட்க முடிகிறது: "கடந்த மூன்று ஆண்டுகளில்... நாங்கள் விரிவாக்கிய ஒரு விஷயம் மேய்ச்சல் பண்ணை [சட்டவிரோத முகாம்கள்]."

"இன்று [அவர்கள் கட்டுப்படுத்தும்] அந்த பகுதி, கட்டமைக்கப்பட்ட குடியிருப்புகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது."

இந்த ஆண்டு கனடா அரசு, "பாலத்தீனிய குடிமக்கள் மற்றும் மேற்குக் கரையில் உள்ள அவர்களின் சொத்துக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் ஸ்திரமின்மை நடவடிக்கைகளுக்கு" பொறுப்பான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக விதித்த தடைகளில் அமானா அமைப்பின் பெயரும் இருந்தது.

ஆனால், அந்த தடைகளில் முகாம்களை பற்றிக் குறிப்பிடவில்லை.

முகாம்களை அமைக்க, ஏன் கடன்களை வழங்குகிறது என்று கேட்க அமானாவை பிபிசி தொடர்புகொண்டது. ஆனால், அவர்கள் பதில் அளிக்கவில்லை.

இஸ்ரேலிய அரசாங்கம் குடியேற்ற முகாம்களை சட்டப்பூர்வமாக்கும் போக்கும் காணப்படுகிறது. திறம்பட அவற்றை குடியிருப்புகளாக மாற்றுகிறது.

எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு, அரசாங்கம் குறைந்தபட்சம் 10 குடியேற்ற முகாம்களை சட்டப்பூர்வமாக்கும் செயல்முறையைத் தொடங்கியது, மேலும் குறைந்தது ஆறு முகாம்களுக்கு முழு சட்ட அந்தஸ்தை வழங்கியது.

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Matthew Cassel / BBC

படக்குறிப்பு, பல ஆண்டுகளாக வாழ்ந்த நிலத்திலிருந்து தான் துரத்தப்பட்டதாக நபில் கூறுகிறார்.

தன்னை வெளியேற்றியதாக ஆயிஷா ஷ்டயே குறிப்பிட்ட குடியேற்றக்காரர் மோஷே ஷர்விட், பிப்ரவரி மாதம் தனது முகாமின் தொடக்க விழா நிகழ்வை நடத்தினார்.இது உள்ளூர் கேமரா குழுவினரால் படமெடுக்கப்பட்டது. அப்போது வீடியோவில் பேசிய அவர், நிலத்தைக் கைப்பற்றுவதற்கு குடியேற்ற முகாம்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்கினார்.

"நாங்கள் [குடியேறுபவர்கள்] குடியிருப்புகளை கட்டியபோது மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால், நாங்கள் வேலிகளுக்குள் சிக்கிக்கொண்டோம், மேலும் விரிவுபடுத்த முடியவில்லை," என்று அவர் அந்த நிகழ்வில் கூடியிருந்த மக்களிடம் கூறினார்.

"பண்ணைகள் மிகவும் முக்கியமானது, ஆனால் எங்களுக்கு அதைவிட மிக முக்கியமான விஷயம் அதனை சுற்றியுள்ள பகுதி." என்றார்

துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்

அவர் இப்போது சுமார் 7,000 துனாம்கள் (7 சதுர கிமீ) நிலத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறினார் - இது ஆயிரக்கணக்கான மக்கள்தொகை கொண்ட மேற்குக் கரையில் உள்ள பல பெரிய நகர்ப்புற குடியிருப்புகளைக் காட்டிலும் பெரியது.

பெரும்பாலும் பாலத்தீனிய சமூகங்களை வெளியேற்றி, பெரிய பகுதிகளின் மீது கட்டுப்பாட்டைப் பெற்று, முகாம்களை அமைத்து அதில் வசிப்பதே சில குடியேறிகளின் முக்கிய குறிக்கோளாகும், என்கிறார் பீஸ் நவ்வின் ஹாகிட் ஆஃப்ரன்.

"மலை உச்சியில் [குடியேற்ற முகாம்களில்] வசிக்கும் குடியேற்றவாசிகள் தங்களை 'நிலங்களின் பாதுகாவலர்கள்’ என்று கருதுகின்றனர், மேலும் அவர்களின் அன்றாட வேலை பாலத்தீனியர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதாகும்," என்று அவர் கூறுகிறார்.

மோஷே ஷர்விட் 2021 இன் பிற்பகுதியில் தனது முகாமை அமைத்த உடனேயே துன்புறுத்தல் மற்றும் மிரட்டலை தொடங்கினார் என்று ஆயிஷா கூறுகிறார்.

பல ஆண்டுகளாக தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் நிலங்களில் தனது ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும்போது, ஷர்வித் ஒரு வாகனத்தில் வருவார் என்றும், அவரும் இளம் குடியேற்றவாசிகளும் கால்நடைகளை விரட்டுவார்கள் என்றும் ஆயிஷாவின் கணவர் நபில் கூறுகிறார்.

"அரசு, காவல்துறை அல்லது நீதிபதி எங்களிடம் சொன்னால் மட்டுமே நாங்கள் வெளியேறுவோம் என்று நான் பதிலளித்தேன்" என்று நபில் கூறுகிறார்.

"அதற்கு அவர் என்னிடம், 'நான்தான் அரசாங்கம், நான்தான் நீதிபதி, நான்தான் போலீஸ்’ என்றார்'' என்று கூறுகிறார் நபில்

மேய்ச்சல் நிலத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மோஷே ஷர்விட் போன்ற குடியேற்றக்காரர்கள் பாலத்தீனிய விவசாயிகளை ஆபத்தான நிலைக்கு தள்ளுகின்றனர் என்று பாலத்தீனிய அதிகாரசபையின் காலனித்துவம் மற்றும் சுவர் எதிர்ப்பு ஆணையத்தின் தலைவர் மொயாத் ஷபான் கூறுகிறார்.

"இது பாலத்தீனியர்களுக்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையை ஏற்படுத்துகிறது. அவர்களால் சாப்பிட முடியாது, மேய்ச்சலுக்கு செல்ல முடியாது, தண்ணீர் எடுக்க முடியாது, ”என்று அவர் கூறுகிறார்.

அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் காஸா போரை தொடர்ந்து, மோஷே ஷர்விட்டின் துன்புறுத்தல் இன்னும் ஆக்ரோஷமாக மாறியது என்று குடியேற்றவாசிகளின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் பாலத்தீனிய சமூகங்களை ஆதரிக்கும் ஏரியல் மோரன் கூறுகிறார்.

ஷர்வித் எப்பொழுதும் வயலில் ஒரு கைத்துப்பாக்கியை தன்னுடன் எடுத்து செல்வார். ஆனால் இப்போது அவரின் தோளில் ஒரு பெரிய தாக்குதல் துப்பாக்கியுடன், ஆர்வலர்கள் மற்றும் பாலத்தீனியர்களை எதிர்கொள்ள தொடங்கினார். மேலும் அவரது அச்சுறுத்தல்கள் மிகவும் தீவிரமாக மாறியது என்று ஏரியல் கூறுகிறார்.

"அவர் ஒரு குறுக்குவழியை தேர்வு செய்தார் என்று நான் நினைக்கிறேன், மேலும் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் காத்திருக்காமல் படிப்படியாக அவர்களை [பாலஸ்தீனிய குடும்பங்கள்] வெளியே அனுப்ப முடிவு செய்தார்.''

“ஒரே இரவில் செய்ய முடிவு செய்யப்பட்டது. அது அவருக்கு நன்றாக வேலை செய்தது."

மோஷே ஷர்விட்டின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷாவை போல, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு பல குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறின.

மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ( OCHA) மேற்குக் கரை முழுவதும் குடியேற்றவாசிகளின் வன்முறை "முன்னெப்போதும் இல்லாத அளவை" எட்டியுள்ளது என்கிறது.

கடந்த 10 மாதங்களில், பாலத்தீனியர்களுக்கு எதிராக 1,100 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை குடியேறிகள் நடத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது.

அக்டோபர் 7 முதல் குறைந்தது 10 பாலத்தீனியர்கள் குடியேறியவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று OCHA கூறுகிறது.

அதே காலக்கட்டத்தில் மேற்குக் கரையில் பாலத்தீனியர்களால் குறைந்தது ஐந்து குடியேறிகள் கொல்லப்பட்டுள்ளனர். குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Matthew Cassel / BBC

படக்குறிப்பு, ஆயிஷா சேதப்படுத்தப்பட்ட தனது சோபாவை பிபிசி குழுவிடம் காட்டுகிறார்

டிசம்பர் 2023 இல், அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக சொன்ன இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஆயிஷாவும் நபிலும் அவர்களது உடைமைகளில் சிலவற்றைச் சேகரிக்கத் திரும்புவதை நாங்கள் படம்பிடித்தோம்.

அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீடு சூறையாடப்பட்டிருப்பது தெரிந்தது. யாரோ ஒரு கத்தியை கொண்டு சோஃபாக்களை முற்றிலுமாக சேதப்படுத்தி இருந்தனர்.

"நான் அவரை காயப்படுத்தவில்லை. நான் அவரை ஒன்றும் செய்யவில்லை. எனக்கு இப்படி ஏன் நடந்தது?” என்று ஆயிஷா கூறினார்.

அவர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது மோஷே ஷர்விட் ஒரு வாகனத்தில் வந்தார். சிறிது நேரத்திற்குள், இஸ்ரேலிய போலீஸ் மற்றும் ராணுவம் அங்கு வந்தது. அவர்கள் தம்பதியிடமும், அவர்களுடன் வந்த இஸ்ரேலிய அமைதி ஆர்வலர்களிடமும், தாங்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறினர்.

"அவர் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கவில்லை" என்று ஆயிஷா பிபிசியிடம் கூறினார்.

மோஷே ஷர்விட்டிடம் பலமுறை தொடர்பு கொண்டு, அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் கேட்க முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை.

பாலத்தீன மேற்குக் கரையில் ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Yotam Ronen / BBC

படக்குறிப்பு, மோஷே ஷர்விட்டை பிபிசி அணுகியபோது, ​​அவர் வேறு யாரோ என்று கூறினார்

ஜூலை 2023 இல், பிபிசி அவரது முகாமில் அவரை நேரில் அணுகி குற்றச்சாட்டுகளுக்கு அவரது பதிலைத் தேடியது. பாலத்தீனியர்களை குறிப்பாக ஆயிஷா போன்றவர்களை அப்பகுதிக்குத் திரும்ப அனுமதிப்பீர்களா என்று கேட்டது.

நாங்கள் என்ன பேசுகிறோம் என்றே தெரியவில்லை என்று கூறிய அவர், தான் மோஷே ஷர்விட் அல்ல என்று மறுத்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)