You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தாரில் பெண்களின் நிலை என்ன? ஆண் பாதுகாவலர் அமைப்பு என்றால் என்ன?
கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. மாலை நேரத்தில், தோஹா கடற்கரையில் கலாசாரங்களின் சந்திப்பை காண முடிகிறது.
கத்தாரின் 'குளிர்காலத்தில்' வெப்பநிலை கிட்டதட்ட 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் போது வெப்பத்தில் இருந்து ஆறுதல் பெற, குடும்பங்கள், நண்பர்கள் கூட்டம் மற்றும் கால்பந்து ரசிகர்கள்,தலைநகரின் ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள அல் கோர்னிச் அவென்யூவில் கூடுகின்றனர்.
இங்கு மேற்கத்திய சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் கத்தார் குடும்பங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.
கத்தாரில் சுமார் முப்பது லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் மேல் இல்லை.
கத்தார் ஒரு இஸ்லாமிய நாடு. இங்கு இஸ்லாமிய தத்துவங்களின் விளக்கம், அதன் சொந்த வழியில் உள்ளது.
ஒருபுறம் பழமைவாத மற்றும் பாரம்பரிய குடும்பங்கள் இருக்கும் அதே நேரம்,முற்போக்கான மற்றும் தாராளவாத குடும்பங்களும் இங்கே உள்ளன.
கத்தாரில் பெண்களின் பங்கு இவற்றின் மையத்தில் உள்ளது. ஆனால் அதைப் பற்றிய விவரம் அதிகம் தெளிவாக இல்லை.
அல் கோர்னிச் கடற்கரையில் சில பெண்கள் வண்ணமயமான ஹிஜாப்களை அணிந்திருக்க, சில பெண்கள் கருப்பு புர்காவால் தலையிலிருந்து கால்வரை மூடியுள்ளனர்.
ஆனால் கத்தாரில் பெண்களுக்கு முக்கியமான விஷயம் உடை அல்ல. அங்கு ஒரு அமைப்புமுறை உள்ளது. அதன் கீழ் பெண்கள் ஆண்களின் பாதுகாப்பில் (கவனிப்பு) வாழ்கின்றனர்.
பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மைனர்களாகவே இருக்கிறார்கள் என்று இதற்கு அர்த்தம் என்று இந்த முறையை எதிர்ப்பவர்கள், கூறுகிறார்கள்.
"கத்தார் சட்டத்தின் கீழ் உள்ள பல மதக்கூறுகள் என்னை மனரீதியாக துன்புறுத்துவதால் நான் தற்கொலை வரை சிந்திக்க தொடங்கினேன்,"என்று கத்தாருக்கு வெளியே வசிக்கும் ஜைனப் (அவரது உண்மையான பெயர் அல்ல) என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் கத்தார் வம்சாவளி பெண் கூறுகிறார்.
"வாழ்க்கையில் ஒவ்வொரு முக்கியமான மற்றும் அவசியமான முடிவுகளுக்கும் ஆண் பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். இந்த அனுமதி உங்களிடம் இல்லையென்றால், கல்லூரியில் சேர்க்கை பெற, வெளிநாட்டில் படிக்க, திருமணம் செய்து கொள்ள அல்லது விவாகரத்து செய்ய என்று எந்த முடிவையும் நீங்கள் எடுக்கமுடியாது ,” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும் கத்தாரில் உள்ள எல்லா குடும்பங்களும் இந்த சிக்கலான முறையை கண்டிப்புடன் பின்பற்றுவதில்லை.
ஷைமா ஷெரீப், ‘எம்ப்ரஸ் தோஹா’ என்ற கலாசார அமைப்பின் இணை நிறுவனர் ஆவார். கத்தாரில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் வெளியில் இருந்து வரும் மக்களிடையே கத்தார் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அமைப்பு செயல்படுகிறது.
ஆண் பாதுகாவலர் என்ற கொள்கை, சட்டத்தின் கீழ் அல்ல, குடும்ப அமைப்பின் கீழ் செயல்படுகிறது என்றும் அது குடும்பம் எவ்வளவு பழமைவாதமானது என்பதைப் பொருத்தது என்றும் ஷைமா கூறுகிறார்.
பெண்கள் அதிகாரம் பெற்றவர்களாக உணரும் தாராளமய சூழலும் கத்தாரில் உள்ளது என்கிறார் ஷெரீப்.
இந்த அமைப்பு முறை என்ன?
தோஹாவின் பின் கலிஃபா பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பேராசிரியரான எலினி பொலிமெனோபௌலூ, கத்தார் ஒரு இஸ்லாமிய நாடு என்றும், ஷரியாதான் இங்கு சட்டத்தின் அடிப்படை ஆதாரம் என்கிறார்.
"ஆனால் ஷரியாவின் விதிகள் மிகவும் மாறுபட்டவை. அதைப் பற்றி பல சித்தாந்தங்கள் உள்ளன. சில மிகவும் கண்டிப்பானவை, சில தாராளமயமானவை, சில நவீன மற்றும் சீர்திருத்தவாதமானவை,” என்று அவர் கூறுகிறார்,
கத்தார் அரசியலமைப்பின் 35 வது பிரிவின் கீழ், சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் பாலினம், இனம், மொழி அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்ட முடியாது.
2019 ஆம் ஆண்டில், மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், ஜைனப் போன்ற பல பெண்களின் அனுபவங்கள் பற்றிய விரிவான அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையில், ஆண் பாதுகாவலர் அமைப்பு சட்டப்பூர்வமாக தெளிவாக இல்லை என்று HRW கூறியிருந்தது.
"இது பல சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் கலவையாகும். இதன் கீழ் வயது வந்த பெண்கள் சில முக்கியமான செயல்களுக்கு ஆண் பாதுகாவலரின் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும்,"என்று அறிக்கை கூறுகிறது
தந்தை, சகோதரன், காட் பாதர் அல்லது கணவன் ஒரு பெண்ணின் ஆண் பாதுகாவலராக இருக்கலாம்.
இருப்பினும் HRW அறிக்கையை குறைபாடுடையது என்றும் பெண்கள் அளித்துள்ள அறிக்கை சட்டத்தின் கீழ் இல்லை என்றும் கத்தார் அரசு கூறியது. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டத்தை மீறுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
"தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு நிறைய சுதந்திரம் உள்ளது. ஆனால் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு கூட ஆண் பாதுகாவலரின் அனுமதி தேவைப்படும் பல பெண்கள் உள்ளனர். இது மிகப்பெரிய பிரச்சனை." என்று பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலூ கூறுகிறார்.
"இந்தச் சட்டத்தை எப்படி மாற்றுவது, அது ஏன் இப்படி செயல்படுகிறது, ஏன் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று என் மாணவிகள் அடிக்கடி விவாதிப்பார்கள். இருப்பினும், பல மாணவர்கள் மிகவும் பழமைவாதிகளாகவும் இருக்கிறார்கள்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் எலினி பொலிமெனோபௌலோவின் பல மாணவிகளை நேர்காணல் செய்ய பிபிசி முயன்றது. ஆனால் யாரும் பேசவில்லை. உலகக் கோப்பை கால்பந்து போட்டி பற்றி செய்தி சேகரிக்க வந்துள்ள சர்வதேச ஊடகங்களுக்கு, கத்தாரின் உள்ளூர்வாசிகளுடன் பேசுவது சவாலாக மாறியுள்ளது.
"மேற்கத்திய சிந்தனைகள்"
ஜைனபின் தந்தை பழமைவாதி. இதன் காரணமாக அவரால் தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ முடியவில்லை.
இந்த ஆண் பாதுகாவலர் அமைப்பு பெண்களுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை கட்டுப்பாடுகள் அவ்வளவாக இல்லாத கத்தாரின் தாராளவாத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களால் உணரமுடியாது என்று அவர் கூறுகிறார்.
இந்த நடைமுறையால் கத்தாரில் பெண்கள் சுரண்டலுக்கு ஆளாக நேரிடுகிறது என்கிறார் ஜைனப்.
கத்தாரின் சட்டங்கள் பழமைவாத குடும்பங்களை திருப்திப்படுத்தவும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் செயல்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
"பெண்களின் உரிமைகள் ஒரு மேற்கத்திய கருத்து என்றும் அது இஸ்லாத்தின் மதிப்புகள், மரபுகள் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் பழமைவாதிகள் நம்புகிறார்கள்."என்று அவர் தெரிவித்தார்.
தனது அனுபவங்களைப் பற்றி விரிவாக எழுத வேண்டாம் என்று ஜைனப் பிபிசியிடம் கேட்டுக் கொண்டார். அவர் தனது அடையாளத்தைப் பற்றி கவலைப்பட்டார்.
தன்னைப் பற்றித் தெரிந்தால் தன் குடும்பத்தாரும் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று ஜைனப் அச்சம் கொண்டுள்ளார்.
இந்த ஏற்பாடு மற்றும் பிற காரணங்களால் கத்தார் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று உலகக் கோப்பையுடன் தொடர்புடைய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
"மேற்கத்திய அமைப்புகள் இங்கு வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் தோஹாவின் கல்வி நகரத்தில்(education city) இருக்கும் மாணவர் மோஸ்லி.
"இது எங்கள் நாடு. எங்கள் மீது திணிக்கப்படும் வழியில் அல்லாமல் நாங்கள் நம்பும் திசையில் அதை வழிநடத்த எங்களுக்கு உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.
இந்த முறை மீது நம்பிக்கை வைத்து அதை பின்பற்றும் பழமைவாத பெண்களும் இங்கு இருக்கிறார்கள் என்பதும் கத்தாரின் மற்றொரு உண்மை.
“ கத்தாரில் பழமைவாத பெண்கள் பல முறை என் உடையை விமர்சித்துள்ளனர். என் உடை சரியில்லை எனக் கூறி பல இடங்களுக்குச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர் ,”என்று கத்தாரில் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் கொலம்பியப் பெண் ஒருவர் கூறினார்.
"அதிகாரிகள் வழக்கமாக அவர்களையே ஆதரிப்பார்கள். பழமைவாதிகள் இதை தங்கள் மதிப்புகளுக்கு எதிரான குற்றமாக பார்க்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.
நான் கத்தாரில் வசிக்கிறேன். ஆகவே அதைப் பற்றி அதிகம் சொல்லக் கூடாது என்றார் அவர்.
தற்சார்பு பெற்ற தலைமுறை
HRW அறிக்கைக்கு பதிலளித்த கத்தார் அரசு, கத்தாரின் வெற்றி மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மையமாக பெண்களின் அதிகாரம் உள்ளது என்று கூறியது.
"கத்தாரில், அரசியல், பொருளாதாரம் மற்றும் முடிவெடுப்பது உட்பட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் முன்னணி பங்கு வகிக்கின்றனர். பாலின சமத்துவத்தின் அனைத்து குறிகாட்டிகளிலும் கத்தார் முதலிடத்தில் உள்ளது. கத்தாரில் வேலைவாய்ப்பில் பெண்களின் பங்கு மிக அதிகமாக உள்ளது. ஊதிய சமத்துவம் மற்றும் அரசு வேலைகளிலும் பெண்கள் முன்னணியில் உள்ளனர். மேலும், கத்தார் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறும் பெண்களின் சதவிகிதமும் அதிகமாக உள்ளது."
ஷைமா ஷெரீப் கத்தாரின் அதிகாரம் பெற்ற பெண்களில் ஒருவர். மேலும் அவர் இதே போன்ற சாதனைகளில் கவனம் செலுத்த விரும்புகிறார்.
"நிறைய பேருக்கு தவறான எண்ணங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர்கள் இங்கு வரும்போது அது போய்விடுகிறது.
பெண்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இதற்கு சாட்சி. கத்தாரில் மாஸ்டர் டிகிரி மற்றும் டாக்டரேட் பெற்ற பெண்களின் எண்ணிக்கை ஐவி லீக் பல்கலைக்கழகத்தை விட அதிகம்," என்று ஷெரீப் கூறுகிறார்.
"கத்தார் பெண்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாலின வேறுபாட்டைக் குறைக்க கத்தாரில் நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கத்தாரில் தாயாகும் பெண்களுக்கு நிறைய ஆதரவு அளிக்கப்படுகிறது. பல மேற்கத்திய நாடுகளில்கூட இத்தகைய வசதிகள் இல்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.
ஷெரீப் ஒரு தொழிலதிபர் மற்றும் தொல்லியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். பெண்களின் உரிமைகள் பற்றி மேற்கத்திய ஊடகங்கள் பேசும்போது, கத்தாரின் இந்தப் பக்கத்தையும் காட்ட வேண்டும் என்கிறார் அவர்.
" இங்கே எல்லாம் சரியாக உள்ளது என்று சொல்லமுடியாது. மேம்படுத்த வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் இங்கும் தற்சார்பு பெற்ற பல மகளிர் உள்ளார். அவர்கள் தலைமையின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களை அவர்கள் தள்ளி வைக்கின்றனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்