You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர்
கத்தாரில் உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கவனம் பெற்ற ஒன்று நடிகர் மார்கன் ஃப்ரீமேனின் பேச்சு. அத்துடன் குர்ஆன் வசனங்களைக் கூறிய மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரும் கவனம் பெற்றார்.
அவரது பெயர் கானிம் அல் முஃப்தா. கத்தார் உலக கோப்பையின் தூதர் அவர் தான். குர்ஆன் வசனத்தை கூறிய பிறகு அதற்கான ஆங்கில விளக்கத்தையும் கூறி அனைவரையும் வரவேற்றார் கானிம் அல் முஃப்தா.
உலகத்தின் பன்முகத்தன்மை, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் பண்பு ஆகியவற்றை வலியுறுத்துவதாக மார்கன் ஃப்ரீமன் - கானிம் அல் முஃப்தா ஆகியோருக்கு இடையேயான உரையாடல் அமைந்திருந்தது.
உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் குர்ஆன் வசனங்கள் மூலமாக நிகழ்ச்சிகள் தொடங்கியது இதுவே முதல் முறை என்று வளைகுடா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
உலக கோப்பை தொடக்க நிகழ்ச்சியில் தோன்றியதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கானிம் அல் முஃப்தாவை பாராட்டும் வகையிலான ஏராளமான பதிவுகளைக் காண முடிகிறது.
20 வயதான கானிம் அல் முஃப்தா Caudal Regression Syndrome எனப்படும் மரபு ரீதியிலான குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இந்தக் குறைபாட்டைக் கொண்டோருக்கு பிறக்கும்போதே உடலின் கீழ்பாதி பகுதி இருக்காது. சக்கர நாற்காலி மூலமாகவும், கைகளைத் தரையில் ஊன்றியபடியும் நடக்க வேண்டும்.
வயிற்றில் கருவாக இருந்தபோது கலைத்துவிடும்படி அவரது தாயிடம் பலரும் வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை எனவும் கானிம் அல்-முஃப்தாவின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நான் இடது காலாகவும் நீங்கள் வலது காலாகவும் இருப்போம்” என்று கானிமின் தாய் தனது கணவரிடம் கூறியதாகவும் அந்த இணையதளம் குறிப்பிடுகிறது.
உடலில் குறைபாடு இருந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் தான் விரும்பிய துறைகளில் முன்னேறியதால் அவரது வாழ்க்கை மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரபலமாகி இருக்கிறது.
இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவரை பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இளம் தொழில்முனைவோரான அவர், காரிஸா என்ற பெயரில் ஐஸ் க்ரீம் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.
மற்றவர்களுக்கு தன்னம்பிக்கையளிக்கும் உரைகளை நிகழ்த்துகிறார். உடல் குறைபாடு இல்லாதவர்களுடன் கால்பந்து ஆடுவது, நீச்சல் போன்றவற்றிலும் கானிம் அல்-முஃப்தா ஈடுபடுகிறார்.
தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தடைகளைக் கடந்து நடக்கும் போட்டி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் முதலாவது உலகக் கோப்பை போட்டி என்பதால் இந்தப் போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு பஹ்ரைனை தவிர அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களும் வந்திருந்தனர். கடந்த காலங்களில் தீவிரமான மோதல்போக்கை கடைப்பிடித்துவரும் செளதி அரேபியா சார்பில் அதன் இளவரசர் முகமது பின் சல்மான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.
2010ஆம் ஆண்டு ஃபிபா செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கெடுப்பில் உலகக் கோப்பை நடத்துவதற்கான உரிமையை கத்தார் பெற்றது. வாக்கெடுப்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை கத்தார் தோற்கடித்திருந்தது.
அப்போது முதலே உலக கோப்பை போட்டிகளை நடத்துவதை மிகப்பெரிய பெருமைக் கத்தார் அரசு கருதியது. மற்றொரு புறம் அந்நாட்டின் மீதான விமர்சனங்களும் எழத் தொடங்கின.
லஞ்சம் கொடுத்துதான் இந்தப் போட்டிக்கான உரிமையை கத்தார் பெற்றது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் விசாரணையில் அது நிரூபிக்கப்படவில்லை.
அதன் பிறகு தன்பாலின சேர்க்கைக்கு தடை, கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, மதுபானங்களுக்குக் கட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக கத்தாருக்கு எதிர்ப்பு எழுந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடந்து தொடக்கவிழா நிகழ்ச்சிகள் நடந்து முடிந்திருக்கின்றன.
போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் அணி உலகக் கோப்பை தொடரில் முதன் முறையாகப் பங்கேற்றுள்ளது.
அந்த அணி கோப்பையை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், போட்டியை நடத்துவதையே மிகப்பெரிய பெருமையாகப் பார்க்கிறது. தொடக்க விழாவில் கத்தார் மன்னரின் உரையில் அந்தப் பெருமை தென்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்